Saturday, April 25, 2009

இறையச்சத்திற்கு ஓர் எடுத்துக் காட்டு

ஜூஹைனிய்யா கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண்மனி விபச்சாரத்தில் ஈடுபட்டதின் காரணமாக கர்ப்பினியாகி விட்டார். அப்பெண்மனி அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் சமூகம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் ''ஹத்து'' எனும் கடும் தண்டனைக்குரிய குற்றத்தை செய்து விட்டேன். என் மீது தண்டiயை நிறைவேற்றுங்கள் என்று கூறினார்.(அதனைத் தொடர்ந்து) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அப்பெண்ணின் நெருங்கிய உறவினரை அழைத்து இப்பெண்ணுக்கு உபகாரம் செய்வீராக! இப்பெண்மனி குழந்தையைப் பெற்றெடுத்ததும் என்னிடம் வருவீராக! எனக் கூறினார்கள்.
அவரும் அதேப்போன்று செய்தார். (அதனைத்தொடர்ந்து) அப்பெண்ணிற்குரிய தண்டனையை நிறைவேற்றக் கட்டளையிட்டார்கள். அப்பெண்ணின் ஆடைகள் அப்பெண்ணின் மீது கட்டப்பட்டு ''ஹத்து'' நிறைவேற்றப்பட்டது. பின்னர் அண்ணலார் அப்பெண்மனிக்கு ஜனாஸா தொழுகை தொழ வைத்தார்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் அண்ணலாரிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இப்பெண்மனிக்காத் தொழ வைக்கிறீர்கள்? இப்பெண்மனி விபச்சாரம் செய்தவராயிற்றே! எனக்கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மனி மாபெரும் தவ்பா செய்துவிட்டார். அது எத்தகைதென்றால், அது மதீனா வாசிகளில் எழுபதுபேர்களுக்கு பங்கிடப்பட்டாலும் விஸ்தீரணமானதாக இருக்கும் அப்பெண்மனி தனது ஆன்மாவை அல்லாஹ்வுக்காக பரிசுத்தப் படுத்தியதை விட சிறந்த அமலை நீர் காண்பீரா? என்றார்கள். அபூ நுஜய்து இம்ரான் பின் ஹூஸைன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்.முஸ்லிம்.

இறையச்சத்திற்கு ஓர் எடுத்துக் காட்டு.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

பெருமானார்(ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதராக அனுப்பப்படுவதற்கு முன் அரபுலகில் விபச்சாரம், கற்பழிப்பு போன்ற தீயச் செயல்கள் மிகச் சாதாரணமாக நடந்து கொண்டிருந்தன. பெருமானார் (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதராக உலகிற்கு வருகை தந்தப்பின் குறுகிய காலகட்டத்தில் அவைகள் அனைத்தும் துடைத்தெறியப்பட்டன. குறுகிய காலகட்டத்தில் அவைகள் அனைத்தையும் துடைத்தெறியப்பட்டதற்கு எது காரணமாக இருந்தது? தீமையில் மூழ்கிக் கிடந்த மக்களுடைய மத்தியில் இறைத்தூதர் அவர்களால் ஆழமாக வேரூன்றச் செய்த மறுமை சிந்தனை!

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (திருக்குர்ஆன்)
தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்? பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான். முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா? பின்னோரை அவர்களைத் தொடர்ந்து வரச் செய்யவில்லையா? இவ்வாறே குற்றவாளிகளை நடத்துவோம். பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான். உங்களை அற்பமான நீரிரிருந்து நாம் படைக்கவில்லையா? குறிப்பிட்ட காலம் வரை அதை பாதுகாப்பான இடத்தில் நாம் வைக்கவில்லையா? நாமே நிர்ணயித்தோம். நிர்ணயம் செய்வோரில் நாமே சிறந்தவர்கள். பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான். (திருக்குர்ஆன்)

உலக வாழ்வு நிரந்தரமல்ல, மறுஉலக வாழ்வே நிரந்தரமானது, நிரந்தரமான மறுஉலக வாழ்வில் நிம்மதியான வாழ்வை அடைந்து கொள்ள வேண்டுமெனில் அங்கு நடத்தப்படும் விசாரணையில் வெற்றிப் பெறவேண்டும். அங்கு நடத்தப்படும் விசாரணையில் வெற்றிப்பெற்றால் மட்டுமே சொர்க்கத்தில் நிம்தியாக வாழமுடியும், விசாரணையில் தோல்வியடைந்தால் நரகில் தள்ளப்பட்டு நிரந்தரமாக வேதனையை அனுபவிக்க நேரிடும். மறுமை வாழ்வை பொய்யென நினைத்து உலகில் தவறான வழியில் சுகம் அனுபவித்தால் இறுதித் தீர்ப்பு நாளில் கேடு தான். என்ற இறைவனின் சத்தியச் செய்தியை அந்த மக்களுடைய மத்தியில் இறைத்தூதர் அவர்கள் ஆழமாக விதைத்த காரணத்தால் அதில் நம்பிக்கை கொண்ட மக்கள் தங்களுடைய குற்றச் செயலிலிருந்து முழுமையாக விடுபட்டனர். முழுமையாக விடுபட்டப்பின்னரும் சிலநேரங்களில், சிலர் ஷைத்தானுடைய தூண்டுதலால் இறைவனால் தடுக்கப்பட்ட சிலக் குற்றங்களை செய்து விட்டால் அதற்காக இறைவனிடம் அழுது பாவமன்னிப்புக் கேட்டு, அல்லது அதற்கான குற்றவியல் தண்டனையை உலகிலேயே பெற்று தங்களை பரிசுத்தப் படுத்திக்கொண்டு மறுஉலக விசாரணையில் இலகுவாக வெற்றிப் பெறுவதற்காக முணைவார்கள். அப்படிப்பட்ட ஒரு தியாக சம்பவம் தான் மேற்கானும் சம்பவம்.
சத்தியத்துடன் அனுப்பப்பட்ட இறைத்தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவின் ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றிருந்த காலகட்டத்தில் அவர்களுடைய இஸ்லாமிய நீதிமன்றத்தில் கதவுகளைத் தட்டிய வித்தியாசமான வழக்கது. நாம் வாழுகின்ற இந்த உலகில் யாராவது ஒருவர் தான் செய்த குற்றத்திற்காக தாமாக வந்து காவல் நிலையத்தில், அல்லது வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றத்தில் சரணடைந்தால் அதில் பல சுயநலக் காரணங்கள் இருக்கும், பொதுநலக் காரணங்கள் இருக்காது. குற்றம் கண்டுப் பிடிக்கப்பட்டு தலைமறைவாகி காவலர்களால் தொடர்நது தேடப்பட்டு வரும் வேளையில் காவலர்களுடைய மரண அடியிலிருந்து தப்பித்துக கொள்வதற்காக சரணடைவார், அல்லது கொலை செய்து விட்டு இரத்தம் சொட்டும் அரிவாளுடன் தண்டனைய குறைப்பதற்காக காவல் நிலையத்தில் சரணடைவார்.
இதுப்போன்ற இன்னும் பல சுயநலக் காரணங்களுக்காக குற்றவாளிகள் தாமாக சரணடைவதைக காண்கிறோம் இது அந்தக் காலத்திலும் நடந்தது, இந்தக் காலத்திலும் நடந்து கொண்டிருககிறது. இன்று தங்களை தக்வாதாரி (இறையச்சமுடையயோர்) என்று காட்டடிக்கொள்ளக்கூடிய எத்தனையோப் பேர் தங்களுடைய குற்றங்களை வெளியில் தெரியாத அளவுக்கு மறைத்து செய்கின்றனர் மாட்டிக் கொண்டால் கூட வாதத் திறமையால் மறைத்து விடுகின்றனர், அதையும் மீறி வழக்காடு மன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் வாதத் திறமையுடன் வாதிடுகின்ற வக்கீலை வைத்து செயலிழக்கச் செய்து விடுகின்றனர். இன்னும் எத்தனையோ வழிமுறைகளில் கையும், களவுமாக கண்டுப் பிடிக்கப்பட்டக் குற்றங்களைக்கூட ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டு தங்களை நிரபராதிகள் என்று மக்களிடம் அறிவிக்கச் செய்து விடுகின்றனர். இவர் மட்டும் ஏன் தாமாக சரணடைந்தார்? அதுவும் பொதுமக்கள் முன் கேவலப்பட்டு, சரீரம் முழுவதும் கடுமையான கல்லெறித தாக்குதலுக்குட் படுத்தப்பட்டு இரத்தம் சொட்ட சொட்ட மரணத்தைத் தழுவும் தண்டனையை ஏற்றுக் கொள்வதற்கு எதனால் முன் வந்தார்?

நமக்கேத் தெரியாமல் நம்முடைய ஒவ்வொரு அசைவுகளையும் துல்லியமாப் பதிகின்ற பதிவேடு (Flash memory) நமக்குள் இருப்பதைக் கூறும் இறைச்செய்தி இறங்கிக் கொண்டிருந்த காலத்தில் அந்தப் பெண்மனி வாழ்ந்தார்கள். பதிவேடு வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! ''இந்த ஏட்டுக்கு என்ன வந்தது ? சிறியதையோ, பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!'' எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான். திருக்குர்ஆன். 18:49

இறைவனால் மனிதகுலத்திற்கு தடைசெய்யப்பட்ட மொத்த சமுதாயத்திற்கும் தீங்கு இழைக்கக்கூடிய தீமையாகிய விபச்சாரத்தில் ஈடுபட்டதை வேறுயாரும் பார்க்கவில்லை என்றாலும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதுடன் தன்னிடம் இருக்கும் பதிவேட்டிலும் (Flash memory) பதிந்திருக்கும் அதை நாமே எடுத்து வாசிக்கும் நிலை மறுமையில் ஏற்படும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம். அதை விரிக்கப்பட்டதாக அவன் காண்பான். திருக்குர்ஆன் 17:13. உனது புத்தகத்தை நீ வாசி! உன்னைப் பற்றி கணக்கெடுக்க நீயே போதுமானவன்'' (என்று கூறப்படும்). திருக்குர்ஆன் 17:14
உலகம் அழிக்கப்பட்டு மனிதர்கள் மீண்டும் எழுப்பப்படும் நாளில் நிகழவிருக்கும் விசாரணை மற்றும் இன்னப்பிற விஷயங்கள் பற்றியும்,, யாரும், யாருக்கும் சிபாரிசு செய்ய முடியாத நிலைப் பற்றியும், உலகத்தின் அதிபதியாகிய இறைவனுடைய வல்லமை மட்டும் மேலோங்கி நிற்கும் நிலை பற்றியும் துல்லியமாக இறைத்தூதர் வாயிலாக அப்பெண்மனி அறிந்திருந்த காரணத்தால் இவ்வுலகில் ஊர் மக்கள் முன்னிலையில் நிருத்தப்பட்டு கேவலப் படவிருப்பதைப் பற்றியோ, இவ்வுலகில் கல்லெறி மூலமாக தனது உடல் சுக்கு நூராகப் பிய்த்தெறியப்பட்டு வேதனையை அனுவபிக்கவிருப்பது பற்றியோ, கிஞ்சிற்றும் கவலை கொள்ளாமல் மறுஉலக நிரந்தர வாழ்வுக்காக உலகின் அற்ப வாழ்வை துச்சமாக்கினார். தன்னுடைய உயிரையும் அர்ப்பனம் செய்யத் துணிந்தார் இதுவே இறையச்சத்திற்கு மிகப் பெரிய ஓர் எடுத்துக் காட்டாகும். அவர்களில் ஒரு சிலரை மற்றும் சிலரை விட எவ்வாறு சிறப்பித்துள்ளோம்'' என்பதைக் கவனிப்பீராக! மறுமை வாழ்வு மிகப்பெரிய தகுதிகளும், மிகப்பெரிய சிறப்புக்களும் கொண்டது. திருக்குர்ஆன் 17:21
அன்று மதீனத்து மக்களே உலகின் பிற மக்களுக்கு இறைநம்பிக்கைக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள் அந்த முன்மாதிரி இறைநம்பிக்கையாளர்களுடைய நம்பிக்கையை விட 70 மடங்குக்கு இவருடைய நம்பிக்கை அதிகமானது என்று இறைத்தூதர் அவர்களே சிலாஹித்துக் கூறி அப்பெண்மணியுடைய ஜனாஸாவுக்கு தொழவைக்கவும் செய்தார்கள் என்றால் கருணைக் கடலாம் பெருமானார் (ஸல்) அவர்களுடைய கருணைக்கு இது ஓர் எடுத்துக் காட்டாகும்.
ஓட்டக ஓட்டிகள், காட்டரபிகள், குற்றப் பரம்பரையினர் என்று பிற சமுதாயத்தவர்களால் தூற்றப்பட்ட சமுதாயத்தினரை குற்றமற்றவர்களாக, நேர்மையாளர்களாக நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் நன்மக்களாக வெறும் 23 வருடங்களில் (அதிலும் 10 வருட மக்கா வழ்க்கையில் தீவிரப் பிரச்சாரம் செய்ய முடியாத அளவுக்கு முடக்கப்பட்டிருந்தனர்) மாற்றிக் காட்டிய வரலாறு பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தவிற உலகில் வேறெவருக்கும் இல்லை.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்து, முஹம்மதுக்கு அருளப்பட்டது தமது இறைவனிடமிருந்து (வந்த) உண்மை என நம்புவோருக்கு அவர்களது தீமைகளை அவர்களை விட்டும் அவன் நீக்குகிறான். அவர்களின் நிலையைச் சீராக்குகிறான். திருக்குர்ஆன் 47:2
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104