Wednesday, March 23, 2011

"ஆமாம் சாமி' சபையா?

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு மீண்டும் உலக நாடுகளுக்கு இடையே யுத்தம் எதுவும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கவும், நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டதுதான் ஐக்கிய நாடுகள் சபை। இந்த அமைப்பின் அடிப்படை நோக்கம் உள்நாட்டுப் பிரச்னைகளில் தலையிடுவது அல்ல. உலக நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளைச் சமரசமாகத் தீர்த்துவைத்து அதன் மூலம் போர் மூளாமல் தடுப்பதும் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் காப்பதும்தான்.

கடந்த இருபது ஆண்டுகளாக, ஐ.நா. சபையின் பல முடிவுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளின் ஆக்கிரமிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குபவையாக இருந்து வருகிறதே தவிர, அப்பாவி மக்களைப் பாதுகாப்பதாகவோ, சின்னஞ்சிறு நாடுகளின் இறையாண்மைக்கு உத்தரவாதம் அளிப்பதாகவோ இல்லை. வல்லரசு நாடுகள் சிறிய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதைத் தலையாட்டி அங்கீகரிப்பதற்காகக் கூட்டப்பட்ட உலக நாடுகளின் அமைப்பாகத் தன்னை ஐ.நா. சபை மாற்றிக் கொண்டிருப்பதன் சமீபத்திய எடுத்துக்காட்டுத்தான் லிபியா மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல்.

லிபியா அத்துமீறி தனது அயல்நாட்டின் மீது படையெடுத்திருந்தால் அதைத் தடுக்க வேண்டிய கடமை நிச்சயமாக ஐ.நா. சபைக்கு உண்டு. ஆனால், லிபிய அரசு உள்நாட்டுக் கலவரத்தை அடக்க முயற்சிப்பது தவறு என்று கூறி, புரட்சியாளர்கள் சார்பில் லிபியாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் படைகள் தொடுத்திருக்கும் விமானத் தாக்குதலுக்கு ஐ.நா.சபை அங்கீகாரம் வழங்க முற்பட்டிருப்பதுதான் வியப்பாக இருக்கிறது. கடந்த இரண்டு நாள்களாக விமான வெடிகுண்டு வீச்சு, ஏவுகணைத் தாக்குதல் என்று தொடர்ந்து இந்தப் படைகள் லிபியா மீது அரங்கேற்றியிருக்கும் தாக்குதல்களால் தரைமட்டமாகிப் போயிருக்கும் கட்டடங்கள் ஏராளம். செயலிழந்து காணப்படும் விமானத் தளங்கள் பல. உயிரிழந்திருக்கும் எந்தப் பாவமும் அறியாத அப்பாவிகள் நூற்றுக்கணக்கில். இவையெல்லாம் திடுக்கிட வைக்கின்றன. குறிப்பாக, புரட்சியாளர்களின் எழுச்சி, லிபிய ராணுவத்தால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ஐ.நா.வின் ஆதரவுடன் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் கூட்டு ராணுவம் லிபியாவுக்கு எதிராகக் களம் இறங்கியிருப்பதன் மூலம், லிபிய அதிபர் மும்மார் கடாஃபிக்கு எதிராகப் புரட்சியாளர்களைத் தூண்டிவிட்டதுகூட இந்த நாடுகள்தானோ என்கிற ஐயப்பாடு எழுகிறது.

அமெரிக்கத் தலைமையிலான "நேட்டோ' படைகள் தமது நாட்டில் எந்தவிதமான உதவி பெறுவதையும் துருக்கி அனுமதிக்க மறுத்துவிட்டிருக்கிறது. ஐ.நா. சபையில் அமெரிக்காவுக்கு ஆதரவான தீர்மானத்துக்கு வாக்களித்த 23 நாடுகளின் அரேபியக் கூட்டமைப்பு இப்போது தாங்கள் தவறு செய்துவிட்டதாகக் கையைப் பிசைகிறது.

சாமானிய மக்களின் உயிரிழப்பும், அதிபர் மும்மார் கடாஃபியைக் குறிவைத்து அவர் குடியிருக்கும் பகுதியில் நடத்தப்படும் தாக்குதல்களும் "நேட்டோ' படைகளின் மறைமுக எண்ணங்களை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்று அரேபியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் அமர் மௌசா சந்தேகம் எழுப்பியிருக்கிறார். கடந்த 20 ஆண்டு காலமாகவே மேலைநாட்டு வல்லரசு நாடுகளின் விபரீத எண்ணங்களின் விளைவால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகள் ஏராளம். அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருக்கும்போது, கொசோவாவில் தங்களது படைகள் பின்னடைவைச் சந்தித்த வேளையில், 15,000 அடி உயரத்திலிருந்து இலக்கே இல்லாமல் சரமாரியாகக் குண்டுமழை பொழிந்து எதிரிகளைத் தாக்குகிறோம் என்கிற பெயரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைப் பலி வாங்கியதில் தொடங்கிய இந்த ரத்த வெறி, இப்போது லிபியாவில் மையம் கொண்டிருக்கிறது, அவ்வளவே. எதற்காக இப்போது லிபியா மீது தாக்குதல்? புரட்சியாளர்களுக்கு உதவுவதற்காக என்றால் திரிபோலியில் உள்ள அதிபர் மும்மார் கடாஃபியின் இருப்பிடத்தைச் சுற்றித் தாக்குதல் நடத்தி நாசம் விளைவிப்பானேன்? எண்ணெய்க் கிணறுகள் இருக்கும் பகுதிகளை விட்டுவிட்டுத் தாக்குதல் நடத்துவதிலிருந்தே, லிபியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமேயொழிய, அதன் எண்ணெய் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற மறைமுக கபட நாடகம் வெளிப்படுகிறதே...

அமெரிக்கா கூறுகிறது ஆட்சி மாற்றமல்ல குறிக்கோள் என்று. ஆனால், பிரிட்டிஷ் பிரதமர் கேமரோன் கூறுகிறார் லிபிய அதிபர் மும்மார் கடாஃபி அகற்றப்பட வேண்டும் என்று. அப்படியானால் யார் சொல்வது உண்மை? இவர்களது இலக்கு அதிபர் மும்மார் கடாஃபியா, இல்லை, தங்களுக்குத் தங்கு தடையின்றி லிபியாவின் பெட்ரோலிய வளத்தை அள்ளி வழங்கி உதவும் ஒரு கைப்பாவை ஆட்சியை நிறுவுவதா? லிபியாவின் எண்ணெய் வளம் மிகுந்த கிழக்குப் பகுதியில் எழுந்திருக்கும் அதிபர் மும்மார் கடாஃபிக்கு எதிரான புரட்சியாளர்களின் எழுச்சிக்கு, மனித உரிமை மீறல், அடக்குமுறை என்கிற சாக்கில் உதவிக்கரம் நீட்ட முன்வந்திருக்கும் "நேட்டோ' படைகள், இலங்கையில் ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கு ஆதரவாகக் களம் இறங்காதது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. ஒருவேளை இந்தியா அமெரிக்காவின் விரலசைப்புக்கெல்லாம் தலையசைக்காவிட்டால், காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகக் களம் இறங்காது என்பது என்ன நிச்சயம் என்கிற கேள்வியும் எழுகிறது.

லிபியாவின் மீதான இந்தத் தாக்குதலை உலகிலுள்ள அணிசாரா நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், தங்களது குரலை உரக்க எழுப்பி "நேட்டோ' படைகளின் மறைமுக ஏகாதிபத்திய எண்ணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் லிபியாவின் கதியை அவர்களும் எதிர்கொள்ள நேரிடலாம். உள்நாட்டுப் பிரச்னைகளில் மூக்கை நுழைக்க ஐ.நா. சபையைத் துணைக்கு அழைக்கும் தவறைக் கண்டிக்காமல் விட்டால், செர்பியா, ஆப்கானிஸ்தான், இராக், லிபியா என்று தொடரும் அதிகாரப்பூர்வமான தாக்குதல்களை அங்கீகரிப்பதாக அமைந்துவிடும். அமெரிக்காவில் அதிபர்கள் மாறுகிறார்களே தவிர, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை எப்போதுமே மாறுவதில்லை என்பதைத்தான் லிபியா மீதான தாக்குதல் உணர்த்துகிறது.

நன்றி: தினமணி

Monday, March 21, 2011

இல்லறம் - பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க!

திருமணம் என்பது மனிதர்கள் இழைப்பாற ஒதுங்கும் நந்தவனம் போன்றது, இன்னும் ஒவ்வொரு நாள் பொழுதினில் ஏற்படும் கஷ்டங்களையும், துன்பங்களையும் துடைத்து விடக் கூடிய ஆறுதல் அளிக்கும் தளமுமாகும்। இஸ்லாம் இந்தத் திருமணத்தின் மூலமாக மட்டுமே எதிர்எதிர் பாலியல் கொண்டவர்களை இணைக்கின்றது।

இஸ்லாம் இந்தத் திருமண பந்தத்தினை மிக அதிகமாகவே வலியுறுத்துவதோடு, அதில் பல அருட்கொடைகளும் உங்களுக்கு இருக்கின்றது என்று அறிவுறுத்துகின்றது."நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன."(அல்குர்ஆன் 30:21)

இஸ்லாம் வலியுறுத்தும் திருமணத்தின் நோக்கம் என்பது பல பயன்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. அது தனிமனிதர்களை தவறான கெட்ட நடத்தைகளிலிருந்தும், விபச்சாரத்தில் ஈடுபடுவதிலிருந்தும் பாதுகாக்கின்றது. இயற்கையிலேயே மனிதன் ஆசாபாசங்களில் தன்னை இழந்து விடக் கூடியவனாக இருக்கின்றான். இன்னும் ஷைத்தான் அவனது ஆசாபாசங்களைத் தூண்டி விட்டு, மனித இனம் வெட்கித்தலைகுனியக் கூடிய விபச்சாரத்தின் பக்கம் அழைத்துச் சென்று விடக் கூடியவனாகவும் இருக்கின்றான்.பெண் ஷைத்தானைப் போலவே (மனதை மயக்கும் விதத்தில்) அணுகுகின்றாள், இன்னும் ஷைத்தானால் பீடிக்கப்பட்ட (மனதை மயக்கும் விதத்தில்) நிலையிலேயே வெளியேறுகின்றாள். உங்களில் ஒருவர் மனதை மயக்கும் விதத்தில் ஒரு பெண்ணைப் பார்ப்பீர்கள் என்றால், அவன் அவளது மனைவியிடம் செல்லட்டும், ஏனென்றால், மற்ற பெண்களிடம் உள்ளது போலவே உங்கள் மனைவியிடம் உள்ளது. அவன் தனது இச்சையை ஆகுமான வழியில் தீர்த்து திருப்தி கொள்ளட்டும். (முஸ்லிம்)

இரண்டாவதாக, திருமணத்தின் மூலம் வாரிசுகள் உருவாகி, அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயம் வளர்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது। முறையான திருமண உறவு முறையின் மூலம் பெற்றெடுக்கின்ற மழலைச் செல்வங்களின் மூலம், இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் விருப்பத்தையும் நாம் நிறைவேற்றியவர்களாகின்றோம்.

அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், "திருமணம் செய்து கொள்ளுங்கள், ஏனென்றால் (மறுமை நாளில்) மற்ற சமுதாயங்களைக் காட்டிலும் என்னுடைய சமுதாயத்தவர்கள் அதிகமாக இருப்பதைக் காண நான் விரும்புகின்றேன்।" (பைஹகி).இவை தான் இஸ்லாம் வலியுறுத்தும் திருமணத்தின் நோக்கமெனினும், இன்னும் பல சிறப்பு அம்சங்கள் அதனுள் பொதிந்து கிடக்கின்றன.

அதாவது ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவது, ஒருவர் மற்றவர் மீது கருணையோடும், இரக்கத்தோடும் நடந்து கொள்வது, இன்னும் ஒருவர் மற்றவரின் கெடுதல்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக்கொள்வது, அது மட்டுமல்ல இருவரும் இல்லறத்தை நல்லறமாக மாற்றுவதன் மூலம் நன்மையான பல காரியங்களை இணைந்து செய்வதற்கான சூழல் அங்கு நிலவ ஆரம்பிக்கின்றது, இருவருது அன்புப் பிணைப்பின் மூலமாக இஸ்லாமிய சமுதாயம் ஒரு பாதுகாக்கப்பட்ட சமுதாயமாக, பாதுகாப்புணர்வு கொண்ட சமுதாயமாக பரிணமிப்பதோடு, அங்கு பழக்க வழக்கங்களில் நன்னடத்தையும், சமூகம் மற்றும் உடல் ரீதியான ஆரோக்கியத்தையும் பெற்றுக் கொள்கின்றது।துரதிருஷ்டவசமாக, மற்ற சமுதாயங்களைப் போலவே இன்றைக்கு முஸ்லிம் சமுதாயத்திலும் மணவிலக்குகள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது।இன்றைக்கு நீங்கள் வாழக் கூடிய சூழலில் இவ்வாறான மணவிலக்குகள் அதிகமில்லாதிருந்தாலும் கூட, மேலே நாம் சொன்ன திருமணத்தின் காரணமாக விளையக் கூடிய நன்மைகள் தானாக விளைந்து விடுவதில்லை। மாறாக, அன்பு, பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், முயற்சிகள், இன்னும் ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொள்ளுதல், இவை அனைத்தையும் விட அற்பணிப்பு மனப்பான்மையுடன் ஒருவர் மற்றவரிடம் நடந்து கொள்ளுதல் போன்றவற்றின் மூலமாகத் தான் அத்தகைய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமே தவிர, தானாக எந்த நன்மையும் விளைந்து விடுவதில்லை। அனைத்திற்கும் நமது முயற்சி இன்றியமையாததொன்றாக இருக்கின்றது।

இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுவது போல, "உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்;" (அல்குர்ஆன் 30:21)கணவன் மனைவிக்கிடையே காதலும், கனிந்துருகச் செய்யும் விளையாட்டும் விடைபெற்று விடுமென்று சொன்னால், அதனை மீட்டிக் கொண்டு வருவதற்கு அங்கு கருணையும், சகிப்புத் தன்மையும், ஒருவர் மற்றவருக்கிடையே தொடர்புகள் நீடித்திருக்கச் செய்வதும் அவசியமானதாகும், இவை மூலம் விடைபெற்றுச் சென்ற காதலும், கனிந்துருகச் செய்யும் விளையாட்டுக்களும் அங்கு தலைத்தோங்க ஏதுவாகும்। ஊடலுக்குப் பின் கூடல் என்பதுதான் உறவை இருகச் செய்யும் சாதனமாகும்।தம்பதிகள் இருவரும் சந்தோஷமாக வாழ்வது என்பது அவர்களுக்கு மட்டும் நன்மை பயப்பதல்ல, மாறாக, அது உங்களது குழந்தைக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் அம்சமாக இருக்கின்றது. நீங்கள் உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அன்பு பாராட்டி, சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளும் பொழுது, அந்தச் சூழலில் வாழக் கூடிய உங்களது குழந்தைகளும் இத்தகைய நற்பழக்கங்களைக் கற்றுக் கொண்டு, தங்களது வாலிப நாட்களில் அதனைக் கடைபிடிப்பதற்கான முன்மாதிரிகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்பது ஆய்வுகள் கூறும் முடிவுகளாகும். இன்னும் அமைதியான சூழ்நிலைகள் நிலவக் கூடிய இல்லறத்தில், வாழ்வின் வசந்தங்கள் என்றென்றும் பூத்துக் குலுங்கிக் கொண்டே இருக்கும். இது ஒன்றும் கடிமான விஷமுமல்ல, இதற்கென நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியமுமில்லை, உங்களது பழக்கவழக்கங்களில் சற்று மாறுதல்களைக் காண்பித்தாலே போதும், இல்லறத்தில் நல்லறங்கள் பூக்க ஆரம்பித்து விடும்.

அவற்றில் சிலவற்றை இங்கு நாம் காண்போம் :
ஒருவர் மற்றவர் உரிமைகளை மதித்து நடப்பதுஉங்களது திருமணம் வெற்றிகரமான திருமணமாக பரிணமிக்க வேண்டுமென்றால், திருமணமான ஆண்-பெண் இருவரும், ஒருவர் மற்றவர் மீது என்னனென்ன உரிமைகள் இருக்கின்றன என்பதைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்வதுடன், அவற்றை மதித்து நிறைவேற்ற கூடுதல் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.ஒரு கணவனின் மீது உள்ள உரிமைகள் என்னவென்றால், தன்னை நம்பி உள்ள குடும்பத்தினருக்கு தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் போன்றவர்களுக்கான வாழ்வியல் தேவைகளை அதாவது, உடை, உணவு, உறையுள், கல்வி இன்னும் பல அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது, அதற்கான பொருளாதாரத்தைத் திரட்டிக் கொடுப்பது.இன்னும் குடும்பத் தலைவன் என்ற முறையில் குடும்பப் பராமரிப்பு அத்துடன் மார்க்க வழிகாட்டுதல்கள் மற்றும் குடும்பத்தினரிடையே ஒழுக்க மாண்புகளில் கவனம் செலுத்துதல் ஆகியவை கணவன் மீதுள்ள இன்றியமையாத கடமைகளாகும். இவை யாவும் அவன் மீதுள்ள தவிர்க்க முடியாத கடமைகளாகும்.

மனைவியைப் பொறுத்தவரையில், இறைவன் அனுமதித்துள்ள வரம்புகளைப் பேணுவதும், அதற்காக கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், குடும்பப் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்துவதும் அவளது இன்றியமையாத கடமைகளில் ஒன்றாக இருக்கின்றது. இன்னும் பல பொறுப்புக்களை நிறைவேற்றக் கூடியவளாக அவள் இருந்தாலும், மேலே சொன்னவைகள் தான் அவளுக்குரிய அடிப்படைக் கடமைகள் என்பதை அவள் மறந்து விடக் கூடாது. இவற்றை அவள் நிறைவேற்றத் தவறுவாளாகில், அந்தக் கணத்திலிருந்து குடும்பத்தில் குழப்பங்கள் தலைதூக்க ஆரம்பித்து விடும், குடும்பச் சூழ்நிலை பாழ்பட ஆரம்பித்து விடும்.

குடும்பத்தில் அமைதி நீங்கி, புயல் வீச ஆரம்பித்து விடும். இத்தகைய சூழ்நிலைகளினால் அங்கு அன்பு அழிந்து, கருணையை இழந்து, ஒருவர் மற்றவரைப் பிணைக்கக் கூடிய நற்பண்புகளையும் இல்லாமலாக்கி விடும்.எனவே தான், கணவன் மனைவி இருவரும் தங்களுக்குரிய கடமைகள் என்னவென்பதை ஆராய்ந்து, அதனை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். ஒருவர் மற்றவர் மீது காட்டக் கூடிய அலாதியான அந்த அன்பு, அவர்களது இதயத்தைப் பிணைப்பதோடு, இறைவன் நாடினால் மேலும் மேலும் வசந்தம் வீசக் கூடிய தளமாக இல்லறம் மாறவும் வாய்ப்பு ஏற்படும்.

தனிமைச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்குதல்
இன்றைய உலகம் என்பது அவசர உலகம். அதனால் வாழ்க்கையை வாழ்வதற்குக் கூட நேரமில்லாமல் வாழக் கூடிய நிலைமையில் தான் இன்று நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே இருக்கின்ற 24 மணி நேரம் போதவில்லை என்று அங்கலாய்ப்பவர்களைத் தான் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் அந்த 24 மணி அலுவல்களுக்கிடையிலும் உங்கள் மனைவிக்காகவும் சில மணித்துளிகளை ஒதுக்குங்கள். அதில் அவளுடன் தனிமையைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மிகவும் அவசியமில்லாத முக்கியத்துவமில்லாத எத்தனையோ விஷயங்களுக்காக நாம் நம் நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றோம். ஆனால் திருமணம் எனும் பந்தத்தில் நம்முடன் இணைந்த அவளுடன், வாழ்நாள் முழுவதும் நம்மையே நம்பி வாழ்ந்து வரக் கூடிய அவளுக்கென சில மணித்துளிகளை செவழிப்பதற்குத் தயங்குகின்றோம்.

சில குடும்பங்களில் கணவனும் மனைவியும் தனிமையில் சந்திப்பதே ஒரு சில நிமிடத்துளிகள் தான். எனக்கு நேரமில்லை, நேரமில்லை, காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது, அடுத்து வேலைக்குச் செல்வது, மாலையில் வீட்டுக்கு வருவது, உடன் அடுத்தடுத்த பணிகளுக்கு நேரத்தை ஒதுக்குவது இப்படியாக காலத்தை நகர்த்தக் கூடிய நாம், மனைவிகளுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் எந்தளவு நேரத்தை ஒதுக்கினோம் என்பதைப் பற்றிச் சிந்திப்பது நல்லது.

இன்றைக்கு பணம் வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாக மாறி விட்டது. பணம் தான் எல்லாம் என்ற மனநிலை மக்கள் மனதில் நோயாக மாறிக் கொண்டிருக்கின்றது. மனிதர்களது உணர்வுகளை பணத்தைக் கொண்டு திருப்திபடுத்தி விட முடியாது என்பதைப் புரியாதவர்களாக மனிதர்கள் மாறி விட்டிருக்கின்றார்கள். இதிலிருந்து தவிர்ந்து வாழ்வதற்கு உங்களது நேரங்களைத் திட்டமிட்ட அமைத்துக் கொள்ளுங்கள். நேர முகாமைத்துவம் ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவசியம். அவசர கால ஓட்டத்தில் உங்கள் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சில நேரத்துளிகளை ஒதுக்கித் தரும் பொழுது, பணம் தராத சுகத்தை உங்களது அருகாமை அவர்களுக்கு வழங்கும்.

அதிகாலை பஜ்ர் தொழுகைக்குப் பின் குடும்பத்தினர் அனைவருடனும் சிறிது நேரம் உட்கார்ந்திருப்பது, அல்லது இரவு சாப்பாட்டிற்குப் பின் சிறிது நேரம் குடும்பத்தினருடன் உட்கார்ந்திருப்பது ஆகியவற்றை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.நீங்கள் எந்தளவு பரபரப்பானவராக இருந்தாலும் சரி, குடும்பத்தினருக்காகவென ஒரு நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்வதன் மூலம் அவர்களது உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் உங்களைப் பற்றி அவர்களும், அவர்களைப் பற்றி நீங்களும் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றீர்கள் என்பதையும் உணர்த்த முடியும்.

உணர்வுகள் தான் மனிதனை உச்சத்திற்கும் கொண்டு செல்லும், அதே உணர்வுகள் தான் மனிதனை தாழ்நிலைக்கும் கொண்டு செல்லும்.கவனிப்பு அல்லது அக்கறைஉங்களது திருமண பந்தம் நிலைத்திருக்க வேண்டுமா?! அப்படியானால், ஒருவர் மற்றவர் மீது அக்கறை கொண்டவர் என்பதை, ஒருவர் மற்றவருக்கு உணர்த்தத் தவறக் கூடாது.உங்களது மனைவி சற்று தாகமெடுக்கின்றது என்று சொன்னால், உடனே சென்று ஒரு குவளைத் தண்ணீரைக் கொண்டு வந்து அவளுக்கு வழங்குங்கள். இல்லை, உங்களது கணவன் களைப்பாக இருக்கின்றது என்று சொன்னால், அவனது களைப்பு எதனால் ஏற்பட்டது என்று அறிந்து கொண்டு அதற்கான ஆறுதலைக் கூறுங்கள். எனவே, ஒருவர் மற்றவருக்கு இளைப்பாறும் தளமாக மாறிக் கொள்ளலாம். இன்னும் ஒருவர் மற்றவரது சுமைகளைத் தாங்கிக் கொள்ள முன்வர வேண்டும்.

குடும்ப அலுவல்களில் மனைவிக்கு உதவுவது கணவனின் உதவி என்றால், கணவனின் அலுவல்களுக்கு இடையூறாக இல்லாமல், அவனது சிரமங்களைப் புரிந்து கொண்டு, அந்த சிரமங்களைச் சமாளிப்பதற்குண்டான ஊக்கத்தை வழங்குவது மனைவி புரியக் கூடிய உதவியாக இருக்கும்.

ஒருவர் மற்றவரது அலுவல்களின் சுமைகளை இறக்கி வைப்பதன் மூலம், வேலைப் பளு குறைவதோடு, இணக்கமான சூழ்நிலையும் நிலவ ஆரம்பித்து விடும். இதுவே உங்களது பிணைப்பை உறவை வலுப்படுத்தும்.

அமைதியாகப் பேசுவது, கவனமாகச் செவிமடுப்பதுதம்பதிகளுக்கிடையே பிரச்னை உருவாகுவது என்பது இருவருக்குமிடையே புரிந்துணர்வு இல்லாததே காரணமாகும். அதாவது உங்கள் இருவருக்கிடையே பேச்சுவார்த்தையே கிடையாது என்பதல்ல, மாறாக, அர்த்தமுள்ள பேச்சுக்கள் குறைவாக இருப்பது தான் பிரச்னைக்கே காரணமாகும்.

நீங்கள் உங்களுக்கிடையே உரையாடும் பொழுது, நீங்கள் இருவரும் தம்பதிகளாக இருக்கின்றீர்கள், அவள் மனைவி, இவன் கணவன் என்ற உணர்வு மேலோங்க வேண்டும். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் பேசும் பொழுது சப்தமிட்டு, உரத்த குரலில் பேசுகின்றீர்களா? அல்லது மிக மெதுவாகப் பேசுகின்றீர்களா? ஒருவர் பேசும் பொழுது மற்றவர், அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை நிதானித்து கவனிக்கின்றீர்களா? அல்லது அவர் என்ன சொல்வது நான் என்ன கேட்பது? என்ற அலட்சியப் போக்கில் இருக்கின்றீர்களா? ஒருவர் மற்றவரிடம் பேச்சுக் கொடுக்க வரும் பொழுது, அவள் என் மனைவி, இவன் எனது கணவன், அவன் அல்லது அவள் என்னிடம் அர்த்தமுள்ள பேச்சைத் தான் பேச வருகின்றான் அல்லது வருகின்றாள் என்ற உணர்வுடன், ஒருவர் மற்றவரது பேச்சை அக்கறையுடன் செவிமடுக்க வேண்டும். அவள் அல்லது அவன் என்ன சொல்ல வருகின்றார் என்பதை நிதானத்துடன் கவனித்து, அதனை முழுவதுமாக கிரகித்து, அதற்கான பதிலை அல்லது ஆலோசனைகளை வழங்க வேண்டும். அந்த ஆலோசனைகள் கூட அறிவுறுத்தலாக இருக்க வேண்டுமே ஒழிய, கட்டளைத் தொணியில் இருக்கக் கூடாது. இதன் மூலம் வற்புறுத்தல் இல்லாத நிலை உருவாகுவதோடு, இருவருக்குமிடையே நல்லதொரு புரிந்துணர்வு ஏற்படும். புரிந்துணர்வே பல பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்.

இறைவனிடம் உதவி கேளுங்கள்
திருமணத்தின் மூலம் உங்கள் இருவரையும் கணவன் மனைவி என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியன், அல்லாஹ் தான், அவனே உங்கள் இருவருக்குமிடையே அன்பையும், பாசப் பிணைப்பையும் உருவாக்கி வைத்தான்.

இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக அன்பு என்பது இறைவன் புறத்திலிருந்து உருவானது, வெறுப்பு என்பது ஷைத்தானிடமிருந்து வந்தது, அவன் தான் உங்களுக்கு அல்லாஹ் எதனை ஆகுமாக்கி வைத்திருக்கின்றானோ அதன் மீது வெறுப்பைத் திணிக்கின்றான்...எனவே, உங்கள் மனைவி மீதுள்ள அன்பு குறைகின்றதென்றால், நீங்கள் அல்லாஹ்வின் புறம் திரும்புங்கள், அவனே அனைத்து நல்லறங்களையும் வழங்கக் கூடியவன், அவனிடமே உதவி கேளுங்கள், உங்கள் மனைவி மீது அன்பாக இருப்பதற்காகவும்॥! இன்னும் அவளிடம் காணக் கூடிய கெட்ட நடத்தைகளின் பொழுது பாராமுகமாக இருப்பதற்காகவும்॥! உங்கள் இதயங்களை இணைப்பதற்காகவும், இன்னும் நீங்கள் எதனை விரும்புகின்றீர்களோ அத்தனையையும் கேளுங்கள், அவனே உங்களது தேவைகளை நிறைவேற்றக் கூடியவனாகவும், உங்களது கோரிக்கைகளுக்கு செவிமடுக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான், அவற்றுக்குப் பதிலளிக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான்.

திருமணம் என்பது இஸ்லாமிய சமுதாய வாழ்வில் தவிர்க்க முடியாத, இன்றியமையாத சாதனமாகும். ஒவ்வொரு நாள் சுமையிலிருந்தும், கஷ்டங்களிலிருந்தும் நீங்கள் ஓய்வெடுக்கக் கூடிய தளமாக திருமணம் எனும் பந்தம் இருக்க வேண்டும். அது குளிருக்குக் கதகதப்பானதாகவும், வெயிலுக்கு இதமான குளிர்ந்த தென்றலாகவும் திகழ வேண்டும். அதன் மூலம் அன்பும், பாசமும் தளைத்தோங்க வேண்டும். ஒருவரை ஒருவர் சரியான அளவில் புரிந்துணர்வு கொண்டு செயல்பட வேண்டும். அதன் மூலம் பாசப்பிணைப்பில் மேலும் இறுக்கம் ஏற்பட வேண்டும்.

உங்கள் குடும்பங்கள் புயல் வீசுகின்ற தளமாக இருக்குமென்றால், மேலே சொன்ன அறிவுரைகளைச் செயல்படுத்திப் பாருங்கள், உங்களுக்கிடையில் இருக்கின்ற தவறுகளைக் களைந்து, கருணை எனும் இறக்கையைத் தாழ்த்திப் பாருங்கள். வசந்தம் எனும் வானம்பாடி பாடித்திரியும் நந்தவனமாக, பாச மலர்க் கூட்டமாக உங்கள் இல்லம் திகழக் கூடும். இறைவன் நாடினால்॥!எல்லாவற்றுக்கும் மேலாக அவனிடமே கையேந்துங்கள். அவனே, இதயங்களைப் புரட்டக் கூடியவனாக இருக்கின்றான்.

Wednesday, March 16, 2011

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவைகள்

1)குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம்.

2)கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

3)குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

4)சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

5)சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

6)குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

7) குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8)உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

9)குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

10)படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

11)குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

இ-மெயிலில் வந்த குறிப்பு.

குழந்தைகளை ஜாக்கிரதையாய் வளருங்கள்!

முன்பெல்லாம் பெரும்பாலான தாய்மார்கள் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்ததால் தங்கள் குழந்தைகளை கண்குத்தி பாம்பாய் கண்காணித்து வளர்த்து வந்தார்கள் ஆனால் இன்றைய சூழ்நிலையெ வேறு பெரும்பாலான தாய்மார்கள் வேலைக்கு போவதால் குழந்தைகளை பிறர் பொறுப்பில் விட்டுவிட்டு தான் போக வேண்டிய கட்டாயம் இருப்பதால் அங்கு குழந்தைகளுக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறி தான்.

அதிலும் இன்றைய செய்திதாள்களும் தொலைக்காட்ச்சிகளிலும் அடிக்கடி குழந்தை பாலியல் வன்முறைகளைப் பார்க்கும் பொது நெஞ்சம் பதறுகிறது. இதுப் போன்ற குழந்தைகளுக்கெதிரான பாலியம் தொந்தரவு சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருப்பது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது. அது பெண் குழந்தையாகட்டும் ஆண்குழந்தையாகட்டும் பொதுவாக குழந்தைகளுக்கு இதுப் போன்ற பாலியல் தொந்தரவுகள் பெரும்பாலும் வெளி மனிதர்களிடமிருந்து வருவதில்லை நன்கு பரிச்சியமான அல்லது சொந்த உறவுகளிடமிருந்து தான் வருகிறது,அதனாலேயே குழந்தைகளால் அவர்களை நல்லவர்களா? அல்லது தண்டனைக்குரியவரா என்று எளிதில் அடையாளம் கண்டுக்கொள்ள முடியாதபடி குடும்பங்களுக்குள்ளேயே கலந்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விசயம்.

பொதுவாக வெளிநாடுகளில் குழந்தை பேசத் துவங்கும் பருவத்திலேயே "குட் டச்.... "பேட் டச்" .... என்கிற வித்தியாசத்தை சொல்லி கொடுப்பார்கள். அப்படி தொடுபவர் கெட்டவன் என்ற உணர்வையும் குழந்தைகள் மனதில் ஆழ பதித்து விடுகிறார்கள், அப்படி யாராவது தொட்டால் பயப்படாமல் வந்து என்கிட்ட சொல்லு என்று குழந்தைக்கு தைரியத்தை ஊட்டி வளர்ப்பார்கள், இதனால் அக்குழந்தை அதுப் போன்ற கயவர்களைப் பார்த்து பயப்பட வாய்ப்பே இருக்காது. எனவே இதுப் போன்ற விழிப்புணர்வை எல்லா தாய்மார்களும் கடைப் பிடிக்க வேண்டும். இல்லாவிடில் அக்குழந்தைகள் வளர்ந்து ஆளாகினாலும் காலம் முழுவதும் மனநோயால் பாதிபிர்குள்ளாவார்கள்.அவ்வாறு ஏற்படாதவாறு பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு உறுதுணையாய் இருக்க வேண்டும்,

சில குழந்தைகள் இயற்கையிலேயே மிகவும் பயந்த சுபாவமாக இருப்பார்கள் அதனாலேயே தங்களுக்கு நடக்கிற அநியாயத்தை பயத்தினால் யாரிடமும் சொல்ல திராணியற்று எல்லாக் கொடுமைகளையும் பொறுத்துக் கொள்வார்கள்.ஆகவே குழந்தைகளை எப்போதும் தைரியமாக பேச பழக்க வேண்டும். பேசாதே, கத்தாதே, வாயை மூடு,போன்ற கட்டளைகள் குழந்தையின் தன்னம்பிக்கையைக் குறைத்துவிடும் ஆகவே குழந்தையை தைரியமாக தெளிவாக பேச பழக்கவேண்டும்.

அதீத கண்டிப்பு காரணமாக சில குழந்தைகள் பெற்றோரை பார்த்தே பயப்படுவார்கள் இதையும் காரணமாக வைத்து கயவர்கள் அக்குழந்தைக்கு தொந்தரவு கொடுப்பார்கள். ஆகவே குழந்தைகளுக்கு அதிக கட்டுதிட்டங்க்களும் கண்டிப்பும் தேவையில்லை,செல்லமாகக்கூட கண்டிக்கலாம் இல்லையேல் பிள்ளைகள் மனத்தளவில் தங்கள் பெற்றோரை விட்டு பிரிந்து இதுப் போன்ற பிரச்சனையில் சிக்கிக் கொள்வார்கள்.

இதையெல்லாம் தடுக்க நிச்சயம் ஒரு தாயால் முடியும். அதாவது குழந்தை பள்ளியிளிருந்தோ அல்லது வெளியிளிருந்தோ வீட்டிற்கு வந்தால் அங்கு என்னென்ன நடந்தது என்று இதமான குரலில் கேட்க வேண்டும்.தொடர்ந்து இதை ஒரு பழக்காமாகவே வைத்துக் கொண்டால் பிறகு குழந்தைகள் பயப்படாமல் எதையும் மறைக்காமல் அப்படியே சொல்லுவார்கள்.

அவ்வாறு அக்குழந்தை தனக்கு பாலியல் தொந்தரவு நடந்தது என்று கூறினால் உடனே கோபப்படாமல் நிதானமாக பேசி முழு விவரத்தையும் கேட்டறிய வேண்டும், இல்லாவிடில் குழந்தை பயந்துப் போய் தனக்கு எதோ நடக் கூடாத ஒன்று நடந்து விட்டது என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிவிடும் ஆகவே பொருமையைக் கையாள வேண்டும்.

1.அந்த நபர் உறவுக்காரராய் அல்லது வேண்டப்பட்டவராய் இருப்பின் அக்குறிப்பிட்ட நபரிடமிருந்து குழந்தையை பக்குவமாக விலக்க வேண்டும்.

2.குழந்தையை தனியே விடாமல் எங்கு சென்றாலும் துணையோடு தான் போக வேண்டும் என்ற எச்சரிக்கையுணர்வை அக்குழந்தைக்கு கொடுப்பது நல்லது.

3.அக்குழந்தையை தனியே இருக்கும் சுழ்நிலை இல்லாமல் கண்காணிக்க வேண்டும்.

4.குடும்பத்தினரின் உதவியோடு அந்த நபரின் வருகையை அடியோடு தவிர்க்க வேண்டும்.

5.மேலும் அந்த பிரச்சனைக்குரிய நபரை தொடர்ந்து கண்காணித்து வந்து அவரை போலீசில் ஒப்படைப்பதும் இதனால் மற்ற குழந்தைகளை காப்பாற்றப்படுவதும் அனைத்து பெற்றோர்களின் கடமையே.

இவ்வாறு இதுப் போன்ற மனநோயாளிகளிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் எப்படி காப்பது என்று பெற்றோர்கள் தான் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். அவைகளை குழந்தைகளுக்கும் சொல்லித் தந்து வளர்க்க வேண்டும்.அவ்வாறு வளர்க்கப்படும் குழந்தைகள் இதுப் போன்ற பிரச்சனைகளிலிருந்து தங்களை காத்துக் கொண்டு அதற்குரியவர்க்கு தக்க தண்டனையும் வாங்கி கொடுப்பார்கள் என்பது திண்ணம்.

Thanks: http://www.manoharimandram.com/index.php?option=com_k2&view=item&id=488&Itemid=2&lang=ta

Tuesday, March 15, 2011

குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (ebook & ibook)



Download Center- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

இஸ்லாமிய நெறியில் குழந்தை வளர்ப்பு எனும் போது அவர்களது லௌகீக நலன் நாடியஆளுமைகள் மட்டுமன்றி, அவர்களின் ‘ஹிதாயத்’ எனும் ஆன்மிக ஆளுமை விருத்தியும் நோக்கமாகக் கொள்ளப்படும். இந்த வகையில் குழந்தைகளின் ஆன்மிக-லௌகீக முன்னேற்றத்திற்கு நபி(ஸல்) அவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அதற்காக அவர்கள் காட்டிய வழிமுறைகளை இங்கே சுருக்கமாகத் தொகுத்துத் தர விரும்புகின்றோம்.

மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும்.
Download (PDF) ebook for PC and ipad (http://www.islamkalvi.com/portal/?p=5269)
Download ibook for iphone and ipod (http://www.islamkalvi.com/portal/?p=5269)

குழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள்

எழுதியவர்: எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

குழந்தைகளை நல்வழிப்படுத்தி இஸ்லாமிய நிழலில் வளர்த்தெடுப்பது என்பது இந்த நவீன யுகத்தில் பாரிய பொறுப்பு வாய்ந்த பணியாகவே திகழ்கின்றது.குழந்தைகளிடம் ஆதிக்கம் செலுத்தும் வெளி சக்திகளின் ஊடுருவலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதும் ரொம்ப சிரமமான பணியாகவே திகழ்கின்றது. இந்த ஆக்கத்தில் குழந்தைகளை நெறிப்படுத்துவதற்கான சில வழிமுறைகள் சுருக்கமாகத் தொகுத்து வழங்கப்படுகின்றது.

  • இஸ்லாத்தின் அடிப்படையான ‘லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்ற கலிமாவை உங்கள் குழந்தைகளின் உள்ளங்களில் ஆழமாகப் பதிக்க முயற்சியுங்கள். ஆராட்டும் போதும் தாலாட்டும் போதும் கலிமாவை உரக்க மொழிந்து, அது அவர்களது ஆழ்மனதில் பதிய வைக்க முயலுங்கள். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்; அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்; நீ பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்பதை உணர்த்துங்கள்.
  • அல்லாஹ்தான் படைத்தவன்; பாதுகாப்பவன்; உணவளிப்பவன்; நிவாரணமளிப்பவன். அனைத்து நிலைகளிலும் நாம் அவனிடமே மீளவேண்டும் என்ற என்ற எண்ணத்தை உங்கள் குழந்தையின் இதயத்தில் வரைந்து விடுங்கள்.
  • ஷிர்க்-குப்ர் குறித்து எச்சரிக்கை செய்யுங்கள். அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக மட்டுமே உன்னைப் படைத்துள்ளான். எச்சந்தர்ப்பத்திலும் அவனுக்கு இணை வைத்து விடக் கூடாது என்று அவனுக்கு எச்சரிக்கை செய்து வையுங்கள்.
  • ஈமானின் 6 அடிப்படைகளையும், இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளையும் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • நபி(r) அவர்கள் மீது நேசத்தை ஊட்டுங்கள். நறுமணம் கமழும் அவரது வாழ்க்கை வரலாற்றையும், அழகிய பண்பாட்டையும் பற்றிக்குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள்.
  • தூய இஸ்லாமிய அகீதாவையும், அதன் ஒழுக்க விழுமியங்களையும்குழந்தைகளின் உள்ளத்தில் விதைத்து விடுங்கள்.
  • இஸ்லாத்தின் ஹலால்-ஹராம் சட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • பள்ளிக்குச் செல்வது, பள்ளியில் கண்ணியம், தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது போன்ற விடயங்களில் ஆர்வத்தை ஊட்டுங்கள்.
  • உங்கள் குழந்தைகள் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க நீங்கள் உதவுங்கள். தீய நண்பர்களை விட்டும் அவர்களை விலக்கி வையுங்கள்.
  • அல்குர்ஆனை ஓதுவது, மனனமிடுவது, அறிந்து கொள்வது போன்ற விடயங்களில் ஆர்வமூட்டுங்கள்.
  • தூய நபிவழிகளைக் கற்றுக் கொடுங்கள். உண்ணல், உறங்கள், விழித்தல், மல-சல கூடங்களுக்குச் செல்லுதல் போன்ற ஒழுங்குகளைக் கற்றுக் கொடுப்பதுடன் அவ்வேளைகளில் ஓத வேண்டிய ஒளறாதுகளையும் கற்றுக் கொடுங்கள்.
  • உங்கள் குழந்தைகளுக்கு மத்தியில் நீதமாக நடங்கள். அவர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டாது அனைவரையும் சமமாக நடத்துங்கள்.
  • உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.
  • அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.
  • உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்.
  • பொய், ஏமாற்று, திருட்டு, அநீதமிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை விட்டும் அவர்களை எச்சரித்து வையுங்கள்.
  • சின்ன வயதிலிருந்தே சுத்தம்-சுகாதாரத்திற்கு அவர்களைப் பழக்குங்கள், ஒழுச்செய்யும் விதத்தைக் கற்றுக் கொடுங்கள். உடல்-உடை சுத்தம் குறித்து விழிப்புணர்வூட்டுவதுடன், உணவு உண்ண முன்னரும்-பின்னரும் கரங்களைக் கழுவிக் கொள்ளப் பழக்குங்கள்.
  • குழந்தைகளின் வெட்க உணர்வைக் குன்றச் செய்யாதீர்கள். முறையான ஆடைக்கு அவர்களைப் பழக்குங்கள். ஆண் பிள்ளைகளுக்குப் பெண் பிள்ளைகள் போன்றோ, பெண் பிள்ளைக்கு ஆண் பிள்ளை போன்றோ ஆடை அணிவிக்காதீர்கள்.
  • காஃபிர்களுக்கு ஒப்பாக நடக்கக்கூடாது என்பதையும், எமக்கெனத் தனித்துவமான கலாச்சாரம் இருக்கின்றது என்பதையும் அவர்களுக்கு உணர்த்துங்கள். காஃபிர்களது பெருநாட்கள்-திருநாட்கள் கொண்டாட்டங்களுக்கு அவர்களை அனுப்பவோ, அவற்றில் கலந்துகொள்ளச் செய்யவோ வேண்டாம்!
  • ஹராமான விளையாட்டுக்களை விட்டும் அவர்களை விலகியிருக்கச் செய்யுங்கள்.
  • குழந்தைகளின் ஆரோக்கியமான பொழுது போக்குகளுக்கு இடமளியுங்கள். நல்ல நூற்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.
  • விருந்தினர்களையும், அயலவர்களையும் கண்ணியப் படுத்தக் கற்றுக் கொடுங்கள். அயலவர்களுக்குத் தொல்லை கொடுப்பது கூடாது என்பதை உணர்த்துங்கள். பெற்றோர், உறவினர், அயலவர், பொதுவான அனைத்து மனிதர்களினதும் உரிமைகள் குறித்து உணர்த்துங்கள்.
  • பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள். பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்துகொள்ளப் பழக்குங்கள்.
  • மொழிகள் மாறுபட்டாலும், இடங்கள் வேறுபட்டாலும் முஃமின்கள் அனைவரையும் நேசிப்பது கடமை என்ற உணர்வை ஊட்டுங்கள்.
  • ஸலாம் கூறவும் முஸாபஹா செய்யவும் பழக்குங்கள். ஸலாத்தின் ஒழுங்குகளைப் போதியுங்கள். பழழன அழசniபெ போன்ற அந்நிய கலாச்சாரத்தை விட இஸ்லாமிய விழுமியத்தின் சிறப்பை உணர்த்துங்கள்.
  • அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள். அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.
  • அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுங்கள்; அச்சமூட்டிச் சொந்தக் காலில் இயங்க முடியாத நிலையை உண்டாக்கி விடாதீர்கள்.
  • பிள்ளைகளுக்கு வழிகாட்ட அன்பான-மென்மையான வழி இருக்கும் போது, கடும் போக்கைக் கடைபிடிக்காதீர்கள்.
  • உங்கள் குழந்தையாக இருந்தாலும் அவர்களை கண்ணியப்படுத்துங்கள். அடுத்தவர் முன்னிலையில் தண்டிக்காதீர்கள். தனிமையில் புத்தி கூறுங்கள்! இல்லையென்றால், அவர்கள் தன்மான முள்ளவர்களாக மிளிர மாட்டார்கள்.
  • அடிக்கடி அவர்களுக்கு அடிக்காதீர்கள். அதனால் அடி மீதுள்ள அச்சம் அவர்களுக்கு அற்றுப் போய் விடும்; அவர்களிடம் முரட்டுத்தனம் உருவாகி விடும். அதன் பின,; அவர்களை வழிநடத்த மாற்று வழி இல்லாது போய் விடும்.
  • குழந்தைகளின் தவறுகளுக்காகக் கடுமையான தண்டனை வழங்கவும் கூடாது; கண்டுகொள்ளாது இருந்து விடவும் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலை பேணப்படவேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
  • தவறுக்குத் தண்டனை என்றதும் பிரம்பை மட்டும் பார்க்காதீர்கள்! தண்டனைகள் பல ரகமானது! வார்த்தை மூலம் தண்டிக்கலாம்; தவறு செய்தவருடன் பேசாமல் மௌனத்தின் மூலம் கூடத் தண்டிக்கலாம்; கொடுக்க வேண்டிய ஒன்றைக் கொடுக்காமல் தடுக்கலாம். இவ்வாறு பல ரகம் உள்ளன. குழந்தையின் குற்றம், அதன் வயது, தவறு நடந்த சூழல் என்பனவற்றைக் கவனத்திற் கொண்டு பொருத்தமான தண்டனை வழங்குவதூடாக அவர்கள் மீண்டும்-மீண்டும் தவறு செய்யும் நிலையைத் தவிர்க்கலாம்.
  • பிள்ளைகளின் அறிவை கண்ணியப்படுத்துங்கள்; அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.
  • குழந்தைகள் நவீன தொழில் நுற்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்; கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும், அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.
  • குழந்தைகள் பேசும் போது, அவர்களது பேச்சை வெட்டி விடாதீர்கள்; காது கொடுத்துக் கேளுங்கள். அதன் மூலம் அடுத்தவர் பேசும் போது, காது கொடுத்துக் கேட்கும் பக்குவத்தை அவர்கள் பெறுவார்கள்.
  • குழந்தைகள் கேள்வி கேட்கும் போது, அவர்களை அதட்டாதீர்கள்; பொறுமையுடன் அவர்களது கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்;
  • பிள்ளைகளுக்கு வியாபாரம், கொடுக்கல்-வாங்கல் மற்றும் சுயதேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுதல் போன்ற அம்சங்களில் பயிற்சி அளியுங்கள்; இவற்றில் அவர் குறை விட்டால், தண்டிக்காது வழிகாட்ட முயற்சியுங்கள்.
  • பயனுள்ள கூட்டமைப்புக்களுடன் குழந்தைகளை ஒன்றிணைத்து, அவர்களது ஆளுமை விருத்திக்கு உதவுங்கள்.
  • அறைகளுக்குள் நுழையும் போது ‘ஸலாம்’ கூறி, நுழையப் பழக்குங்கள்; ஆண்-பெண் பிள்ளைகளுக்குத் தனித்தனி படுக்கைகளை ஏற்படுத்துங்கள். 9 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தனியாகத் தூங்க வழிசெய்யுங்கள். அதுவே அவர்களின் ஆளுமை வளர உதவும்.
  • திரும்பத் திரும்ப நல்ல விஷயங்களைப் போதியுங்கள்; உடனடி மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள். சேர்வடையாமல் முயற்சியைத் தொடருங்கள்.
  • நன்மையை ஆர்வமூட்டித் தீமையை எச்சரியுங்கள்; இப்படிச் செய்தால் இந்தப் பாக்கியம் கிடைக்கும்; இப்படிச் செய்தால் இந்தத் தண்டனை கிடைக்கும் என்பதைப் புரிய வையுங்கள்.
  • உங்கள் குழந்தைகளுக்கு வழங்குவதாகக் கூறிய எந்த வாக்குறுதியையும் மீறி விடாதீர்கள்; தண்டிப்பதாகக் கூறினால், அதைத் தவிர்ப்பது பாதிப்பாகாது. ஆனால் எதையாவது ‘தருவேன்’ எனக் கூறி விட்டு, கொடுக்காது இருந்து விடாதீர்கள்.
  • பிள்ளைகளின் பிரச்சினையை அவர்களுடன் பேசி, அறிந்து அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுங்கள்;
  • இஸ்லாமிய சரித்திரத்தையும், அதன் சாதனை வீரர்களது வரலாறுகளையும் எடுத்துக் கூறுங்கள்;
  • இஸ்லாத்தின் எதிரிகள் குறித்தும், அவர்கள் முஸ்லிம்களுக்கு இழைக்கும் அநீதிகள்; குறித்தும் அவர்களுக்கு உணர்த்துங்கள்;
  • இருப்பதைக் கொண்டு திருப்தியடையப் பழக்குங்கள்; அடுத்தவர்களிடமிருப்பதைப் பார்த்துக் கொட்டாவி விடும் இயல்பை அழிக்க முயலுங்கள்.
  • பொது விடயங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்யுங்கள்; அவர்களது கருத்து பொருத்தமானதாகப் பட்டால், அதன்படி செயல்படத் தயங்காதீர்கள்.
  • உளவியல் ரீதியில் அவர்களை அணுக முற்படுங்கள்; ‘நல்ல பிள்ளைகள் இப்படித்தான் இருப்பார்கள்; இப்படி-இப்படி செய்ய மாட்டார்கள். நீ நல்ல பிள்ளை; நீ எப்படி நடந்துகொள்ள வேண்டும்?’ என்ற தோரணையில் நீங்கள் கூற விரும்புவதைக் கூறலாம்.
  • இது போன்ற வழிமுறைக;டாக அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதுடன் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அனுதினமும் துஆச் செய்யுங்கள்.

அல்லாஹ் அருள்புரிவானாக!

Thanks: http://www.islamkalvi.com/portal/?p=5263