Wednesday, November 23, 2011

முஸ்லிம்களின் மோசமான எதிரி, முஸ்லிம்களே!

by Dr. Paul Craig ராபர்ட்ஸ்

தமிழாக்கம்: அபூ ரிஃப்அத் for www.islamkalvi.com


கட்டுரையாளர், டாக்டர் பவுல் கிரேக் ராபட்ஸ் அவர்கள், அமெரிக்க கருவூலத்தின் (Treasury) முன்னாள் பிரதிச் செயலர், ‘வால்ஸ்ட்ரீட்’ பத்திரிகையின் கூட்டு ஆசிரியர், ஹூவர் கலாசாலையிலே ஒரு ஆராய்ச்சியாளர், அரசியற் பொருளாதார விரிவுரையாளர்.

முஸ்லிம்களோ சனத்தொகையில் மிக அதிகம். ஆனால், அவர்களுக் கிடையேயான பிரிவினையோ அதைவிட அதிகம். மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் ஸியா, சுன்னாப் பிளவுகள் இதற்கோர் நல்ல உதாரணம். இவர்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மேற்கத்திய நாடுகளுக்கு அடிமைப் பட்டுக்கிடப்பதற்குக் காரணமும் இந்தப்பிரிவினைதான். ஏப்ரலில் நடக்கவிருந்து, நிறுத்தப்பட்டுப்போன ‘இஸ்லாமிய ஒருமைப்பாட்டு (ஒலிம்பிக் போன்ற) விளையாட்டுகள்’ மற்றுமொரு உதாரணமாகும். இங்கு காணப்படும் குடாக்கடலுக்கு எந்தப்பெயரை நிரந்தரமாக்குவது என்பதில்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஈரானியர் ‘பாரசீக வளைகுடா’ என்கிறார்கள், அரேபியர் ‘அராபிய வளைகுடா’ என்கிறார்கள். இதுதான் பிரச்சினை!
இஸ்ரவேலர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாலஸ்தீனத்தைக் காப்பாற்ற முடியாதிருப்பதற்குக் காரணமும் முஸ்லிம்களுக்கிடையே காணப்படும் பிரிவினைதான். மேலும், அமெரிக்கா, ஈராக்கை ஆக்கிரமித்திருப்பதும், அனேகமான மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் கைப் பாவைகளை ஆட்சியில் அமர்த்தி அடக்கியாண்டுகொண்டு வருவதும் இதே பிரிவினையின் விளைவுதான்.
அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்துகொண்ட எகிப்து, இஸ்ரவேலர்களின் பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்குத் துணைபோகிறது. இதைத் தட்டிக் கேட்கக்கூடாது என்பதற்காக எகிப்திய எதிர்க்கட்சியினரின் வாய்களை அமெரிக்க டாலர் கொண்டு அடைத்துவிட்டிருக்கிறார் ஹோஸ்னி முபாரக். இதற்கென்று இவர் பெறும் கைக்கூலி வருடத்திற்கு 150 கோடி டாலர்!
முஸ்லிம்கள் தம் சகோதரர்களையே காட்டிக்கொடுப்பதாக நாம் சொல்வதை நம்பாதவர்கள், ஈரானில்; ‘ஜனநாயகத்துக்கான நிறுவனம்’ என்ற பெயரில் இயங்கிவரும் அமைப்பின் தலைவர் கென்னத் டிம்பர்மேன் என்ற யூதர் சொல்வதைக் கேளுங்கள். ‘இந்த அமைப்பைத் ‘தன்னார்வுத் தொண்டு (நடுநிலை) நிறுவனம்’ என்று காட்டிக்கொண்டாலும், இதற்குச் செலவு செய்த பணம் 1995 இல் அமெரிக்க அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதுதான்’. (கூலி கொடுப்பவனுக்கு விசுவாசமாகத்தானே வேலை செய்வார்கள்!)
இப்போது நாம் சொல்வது என்ன என்பதை உணர்ந்திருப்பீர்கள். அமெரிக்காதான் மத்திய கிழக்கு நாடுகளில் எல்லாம் தமது கைப் பாவைகளைத் தலைவர்களாக நிறுத்திக்கொண்டு வருகிறது என்பது உண்மை.
அமெரிக்கா, கடந்த 10 வருடங்களாக, உக்ரைன், செர்பியா போன்ற நாடுகளிலெல்லாம் தமது அடியாட்களை நிறுவி, கிளர்ச்சி செய்வதற்குத் தயாராக்கி வருகிறது. இதற்குச் செலவான பெருந்தொகையில் ஒருபகுதி, ஈரானின் மூசாவிக் குழுவின் கைக்கும் எட்டியிருக்க வேண்டும். ஏனெனில், ஈரானுக்கு வெளியேயுள்ள தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களுடன் மூசாவிக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால், அவற்றின் மூலம்தான் இந்த டாலர்கள் கைமாறியிருக்க வேண்டும். “அஹமதின்னஜாத்” புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறிக் கலவரம் செய்வதற்கு மூசாவி செலவு செய்ததும் இதே அமெரிக்க டாலர்கள்தான்.
முன்பும், 40 கோடி டாலர்கள் செலவு செய்து ஈரானியர்களையே கிளர்ச்சி செய்யத் தூண்டிவிட்டதும் ஜோர்ஜ் புஸ்ஸின் அமெரிக்க அரசாங்கம்தான். யூதர்களின் பத்திரிகையான ‘வாஸிங்டன் போஸ்ட்’ 2007 இல் இச்செய்தியை வெளியிட்டதைப் பலரும் படித்திருப்பீர்கள். இதிலிருந்தும் அமெரிக்கா ஒரு பயங்கரவாதி என்பது உறுதியாகிறது.
மேலும், அண்மையில், பலூச் பிரிவினைவாதக் கும்பலின் தலைவன் அப்துல் மாலிக் ரிகி என்பவனை ஈரானியர்கள் கைது செய்திருந்தார்கள். ஈரானிய இஸ்லாயக் குடியரசுக் கெதிராக கிளர்ச்சி செய்வதற்காக கணக்கற்ற ஆயுதங்களும் பணமும் தருவதாக அமெரிக்க அரசாங்கம் உறுதி அளித்திருந்ததை அவன் ஏற்றுக்கொண்டான்.
அவனைத் துன்புறுத்தி உண்மைகளை வரவழைத்திருக்க வேண்டும். இதுதான் அமெரிக்கப் பாணி! ‘முதன்மை நாடு’, ‘மலையில் ஒளிரும் நகரம்’ , ‘உலகின் ஓளி’ என்றெல்லாம் தம்மைப் பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவுக்கே முடியுமென்றால், ‘அற்பமான’ ஈரான் ஏன் துன்புறுத்தி உண்மையை வரவழைத்திருக்க முடியாது? ஈரானிய சிறையில் மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறான் அந்த றிகியின் தம்பி ஒருவன். கிளர்ச்சிக் குழுக்களுக்கு அமெரிக்கா நேரடியாகப் பணம் கொடுத்ததாகவும், எங்கெல்லாம் குண்டு வைக்கவேண்டுமென்று குறிப்பிட்டுக் கட்டளை பிறப்பித்திருந்ததாகவும் அவன் ஒப்புக்கொண்டான்.
தன்னலம் மட்டுமே ஒரே நோக்கம் என்பதைப் பிரதிபலிக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தொடுத்திருக்கும் யுத்தத்திற்கு ‘நிலையான சுதந்திரத்திற்கான போராட்டம்’ என்று பெயரிட்டிருப்பது ‘பொருத்த’மாய் இருக்கிறதில்லையா? 2001 அக்.7 இலிருந்து அமெரிக்காவினதும் ‘நேட்டோ’வினதும் கைப்பாவைகள், பெண்கள்-பிள்ளைகள்-கிராமத்திலுள்ள முதியோர்கள் போன்ற பெருந் திரளான மக்களைக் கொன்று குவித்து வருகிறார்கள். அதற்கு வசதியாக, ஹமித் கர்சாயியை ஆப்கானின் தலைவனாக நிறுவியிருக்கிறது அமெரிக்கா.
தன் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகக் கர்சாயி செய்யும் ஊழல்களுக்குத் தேவையான பணத்தை வாஸிங்டன் வாரியிறைக்கிறது. கர்சாயி செய்யும் ஊழல்களும் நாட்டு மக்களுக்கு அவன் செய்யும் துரோகமும்தான், வாஸிங்டனின் அடக்கு முறையிலிருந்து தம் நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்காகப் போராடும் தாலிபான்களுக்கு பெரும் உந்துதலாயிருக்கிறது. கர்சாயி என்ற அடியாள் இல்லாதிருந்தால் அமெரிக்கர் எப்போதோ துரத்தியடிக்கப்பட்டிருப்பார்கள். சுயநலவாத அமெரிக்கா கொடுக்கும் பணத்தை ஆப்கானின் மற்றுமொரு பகுதியினருக்குக் கொடுத்து, ஆப்கானிகளைக்கொண்டே ஆப்கானிகளைக் கொல்ல வைப்பதினால்தான் இந்தக் கொடிய யுத்தம் 9 ஆண்டுகளாகத் தொடந்து கொண்டிக்கிறது.
‘பெண்ணுரிமை’, ‘சுதந்திரம்’ என்றெல்லாம் பீற்றிக்கொண்டு, அமெரிக்காவிற்குக் கொடி பிடித்துத்திரியும் கோழைகள், நாம் இங்கு குறிப்பிடும் கருத்துக்களை அர்த்தமற்ற குப்பை என்று வர்ணிக்கக் கூடும். மேலும், பெண்ணுரிமையைப் பாதுகாக்க வென்றும், குடும்பக்கட்டுப்பாட்டை அனுமதித்துப் பெண்களின் நலத்தையும் வாழ்வையும் முன்னேற்றுவதற்கென்றும், ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி நாட்டைப் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கென்றும்தான் அமெரிக்கா பாடுபடுகிறதென்று இவர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்யவும் கூடும். ஓவ்வொரு கிராமமாக, நகரமாக அழித்தேனும் இதைச் செய்து முடிப்பார்களாம். ‘நாங்கள் எல்லோருக்கும் அவசியம் தேவைப்படுபவர்கள். இங்கு வந்திருப்பதே ஆப்கான் மக்களுக்கு உதவி செய்வதற்காகத்தான். உலகப்படத்திலே ஆப்கானிஸ்தான் எங்கிருக்கிறதென்பதுகூட அநேகமான எமது அமெரிக்க மக்களுக்குத்தெரியாது. இருந்தும், நாங்கள் ஆப்கானியர்மீது அதீத அன்பு செலுத்துகிறோம்’- என்றெல்லாம் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்!
இந்தக் கோழைகள் எதிலிருந்தோ ஆப்கானிஸ்தானைக் காப்பாற்றப்போவதாக மார்தட்டிக் கொள்ளும் அதே வேளை, வெள்ளை மாளிகையும் காங்கிரசும் சேர்ந்துகொண்டு அமெரிக்கரின் வயிற்றிலடித்து, அவர்களின் ‘மெடிகெயார்’ இலிருந்து 500 பில்லியன் டாலர்களைத் ‘திருடி’த் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்குகிறது. பணம் படைத்தவர்கள் மேலும் செல்வம் குவிக்கு முகமாக அமெரிக்காவுக்கு வெளியே வேலை வாய்ப்புக்களை வழங்கிவிட்டதினால், வேலையற்ற அமெரிக்கர்களுக்கான கொடுப்பனவுகள் வற்றிப்போயின. கடந்த பெப். 26 அன்று அமெரிக்க செனட்டினால் கொடுப்பனவுத் தொகையை ஒதுக்க முடியாது போய்விட்டது. வரவுசெலவுத்திட்டத்தில் 10 பில்லியன் துண்டு விழும் என்பதைக் காட்டி, இந்தக் கொடுப்பனவுத் தொகையை வெட்டிவிட்டார் ஜிம் பன்னிங் என்ற செனட்டர்.
பெருந்தொகையினரான அமெரிக்கர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை அபகரிக்கும் முதலீட்டு வங்கிகளுக்கு வழங்கும் தொகையையும் முஸ்லிம் நாடுகளில் யுத்தம் செய்வதற்கென்று செலவிடப்படும் கோடானு கோடி டாலர்களுக்கு தொகையிடப்படாத, வெற்றுக் காசோலைகள் செல்வதை மட்டும் இந்த, அரச வருமானத்துறைக்குப் பொறுப்பான பன்னிங் என்பவர் கண்டுகொள்வதில்லை!
ஏற்கனவே ‘வால் ஸ்ட்ரீட்’ முதலீட்டு வங்கிகளிடம் தமது ஓய்வூதியத்தை இழந்தும் அமெரிக்காவுக்கு வெளியே வழங்கப்பட்டுவிட்டதனால் வேலை வாய்ப்புக்களை இழந்தும் தனித்தனியாக, ஒருங்கிணையாமல் வாழும் அமெரிக்கர்களின் பெயர்களில் இந்தப்பாரிய தொகைகளை எழுதிவிடுகிறார் பன்னிங்.
தமது மக்களையே ஏமாற்றும் அமெரிக்காவை யார்தான் நம்புவார்கள்? ஆப்கானிஸ்தானுக்கு முன்னேற்றமாம்! அங்குள்ள பெண்களுக்கு விடுதலையாம்! தமது செல்வத்தைச் செலவு செய்து, இரத்தம் சிந்திப் பாடுபட்டு அரைவாசி உலகிற்கு அப்பால் வாழும் ஆப்கானியர்களுக்கு உதவுவார்களாம்! எந்த மடையன் நம்புவான்?
பாகிஸ்தான் தனது மக்கள் மீதே போர் தொடுத்து, பலரைக்கொன்றும் இன்னும் பலரை, உடைமைகளை விட்டுவிட்டு ஓடச்செய்தும் விடுவது அமெரிக்காவின் கட்டளையினால்தான். இதனால் அதிகரிக்கும் இராணுவச் செலவினால் வரவுசெலவுத்திட்டத்தில் துண்டு விழுவதை ஈடு செய்ய முடியாதிருக்கிறது. மக்களின்மீது மேலும் வரிகளை விதிக்கும்படி அமெரிக்க கருவூலத்தின் (Treasury) துணைச்செயலர் நீல் வாலின், பாகிஸ்தான் அரசை வற்புறுத்துகிறார். அமெரிக்காவின் கைப்பாவை ஆசிப் அலி சர்தாரி அதனை நிறைவேற்றியும் வருகிறார். எல்லா நுகர் பொருட்கள்மீதும் சேவைகளின்மீதும் கடுமையான வரி விதித்துவிட்டிருக்கிறார். இவ்வாறு, தம்மீதான போருக்குத் தாமே பணம் செலவு செய்யும் துர்ப்பாக்கியம் பாகிஸ்தானிய மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
6 வாரங்களில் முடிந்துவிடும் என்று கூறப்பட்ட ஈராக்கிய ‘குறுகியகால’ யுத்தம், 7 வருடங்களைக் கடந்தும் ஓய்ந்தபாடில்லை. மேலும், ஈராக்கிய மக்கள் கொல்லப்படுவதும் அங்கவீனர்களாக ஆக்கப்படுவதும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கொண்டுமிருக்கிறது. ஈராக்கியர் அமெரிக்காவை வெறுப்பதை விட தமக்குள்ளேயுள்ள ஏனைய குழுக்களை வெறுப்பதையே பெரிதாகக் கருதுகிறார்கள். இதனால்தான் போர் ஒரு முடிவுக்கு வராமலிருக்கிறது. ஈராக்கில் நடக்கும் அதிகமான வன்முறை (யுத்தம்) ஸியா, சுன்னாக்களுக்கிடையேதான் நடக்கிறது. ஓரு சாரார் மறுசாராரை அழிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள்.
தாம் சிறுபான்மையினராயிருந்தும், சதாமின் தலைமையின்கீழ் முழு ஈராக்கையும் ஆண்டுவந்தவர்கள் சுன்னா மக்கள். எனவே, சுன்னா மக்களைப் பழிவாங்க நல்லதொரு சந்தர்ப்பமாகவே அமெரிக்க ஆக்கிரமிப்பை கருதுகிறார்கள் பெரும் பகுதி ஸியாக்கள். முழுச்சனத்தொகையில் 20 வீதமான சுன்னா மக்கள், தமது பலத்தின் பெரும் பகுதியை ஸியாக்களுக்கு ஈடு கொடுப்பதிலேயே செலவு செய்கிறார்கள். இருப்பினும் இடைக்கிடை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அமெரிக்கர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தவும் தவறவில்லை.
இருப்பினும், கைக்ககூலியின் சக்தியை அறிந்த அமெரிக்கர், சுமார் 80,000 சுன்னா மக்களை வளைத்துத் தமது படையில் சேர்த்துக் கொண்டு தமக்கு ஏற்படும் அழிவைக்கட்டுப்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.
அமெரிக்கா ஈராக் யுத்தத்தை வென்ற விதம் இதுதான். ஈராக்கியர், தமது சுதந்திரத்தை அமெரிக்க டாலருக்கு விற்று விட்டிருக்கிறார்கள்!
மிகச்சில ஆயிரங்களேயான சுன்னா மக்கள், அமெரிக்க வல்லரசின் ஆக்கிரமிப்பை வெற்றி கரமாகத் தடுத்திருந்ததைப் பார்க்கும்போது, ஸியாக்களும் இவர்களுடன் சேர்ந்து இருந்திருந்தால், அமெரிக்காவை எப்போதோ அடித்து விரட்டியிருக்கலாம் என்பது புலனாகிறது. ஆனால், ஸியாக்களோ, சதாம் ஆட்சியில் தம்மை அடக்கியாண்ட சுன்னாக்கள்மீது வஞ்சம் தீர்க்கவே கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதால், இது ஒருபோதும் நடக்காது.
10 இலட்சம் பேர் மடிந்துவிட்டிருப்பதும் 40 இலட்சம்பேர் உடைமைகளை இழந்து இடம்பெயர்ந்திருப்பதும், ஏராளமான புத்தி ஜீவிகள் நாட்டை விட்டு ஓடிவிட்டிருப்பதும், இவற்றினால் ஈராக் முற்றிலும் அழிந்து போயிருப்பதும், முஸ்லிம்கள் தமக்குள்ளேயே வஞ்சம் தீர்க்த்துக்கொண்டிருக்கும் கெட்ட கொள்கையினால்தான். தம்மை அடிமைப்படுத்த முயலும் ஏகாதிபத்தியத்தை வெறுப்பதைவிட, தம்மைத்தாமே வெறுத்துக்கொண்டும் தம்மைக்கண்டு தாமே பயந்துகொண்டும் இருக்கும்வரை முஸ்லிம்கள் தோற்றுக்கொண்டே இருப்பார்கள்!


English source: www.foreignpolicyjournal.com
தமிழாக்கம்: அபூ ரிஃப்அத் for www.islamkalvi.com
Dr. Roberts was assistant secretary of the U.S. Treasury in the Reagan administration, associate editor of the Wall Street Journal, Senior Research Fellow in the Hoover Institution, Stanford University, and held the William E. Simon Chair in Political Economy, Center for Strategic and International Studies, Georgetown University.

அடிமேல் அடித்தால் அமெரிக்காவும் அதிரும்



சர்வதேச சண்டியன் அமெரிக்காவிற்கு இது இறங்கு முகம். தொடர்ச்சியாக சில அதிர்ச்சி வைத்தியங்களுக்கு உள்ளாகி அதிர்ந்து போயுள்ளது. ஈராக் ஆப்கானில் பட்ட அடியில் வாடி வதங்கியுள்ளது. அதன் பொருளாதாரம் சரசரவென சரிந்துள்ளது. இது ஒரு பேரிடியாகும்.


‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பியும் உதவ மாட்டார்கள்’ என்று கூறுவார்கள். ஈராக் மற்றும் ஆப்கானில் பட்ட அடியால் படித்த பாடத்தின் காரணமாகத்தான் லிபியாவில் நேரடியாக மூக்கை நுழைக்காமல் கொல்லைப் புற வழியாகத் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது.


அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையில் பலஸ்தீனத்திற்குத் தனி நாடு அந்தஸ்துக் கோரும் தீர்மானம் தொடர்பான கருத்துக் கணிப்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய நிலைப்பாட்டுக்கு எதிராக பல நாடுகள் அணிதிரண்டன. அமெரிக்க நிலைப் பாட்டுக்கு மிகக் குறைந்த ஆதரவே கிடைத்தது. இது மற்றுமொரு அடியாகும்.


அமெரிக்காவின் துதிபாடிகளில் ஒருவரான இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஐக்கிய நாட்டு உரையில் அமெரிக்காவை வாங்கு வாங்கு என வாங்கியுள்ளார். பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் ஆப்கான், ஈராக், லிபியா விவகாரத்திலும் அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இது மற்றுமொரு அடியாகும்.


இதே நேரத்தில் பாகிஸ்தானும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. அமெரிக்க பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஆப்கானுக்கு எதிரான பயங்கரவாதத்தைத் துவங்கிய போது அதற்குத் தோள் கொடுத்து துணையாக நின்றது பாகிஸ்தான் ஆகும்.


அமெரிக்காவுக்கு உதவவில்லையானால் பாகிஸ்தான் என்றொரு நாடு இருந்த இடமே தெரியாமல் போய்விடும் என அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முஷர்ரப் தனது கோழைத் தனத்தை வெளியிட்டார்.


அமெரிக்கா பாகிஸ்தானில் தன்னிச்சையாக எடுத்த பல நடவடிக்கையால் பாகிஸ்தான் அமெரிக்காவை நோக்கிக் கைவீசிப் பேசும் நிலை ஏற்பட்டு இன்று அது முற்றி முறுகல் நிலைக்கு வந்துள்ளது.


ஆப்கானிஸ்தானில் செயற்படும் ஹக்கானி நெட்வேர்க் என்ற பெயரில் இயங்கும் கிளர்ச்சிக் குழுக்களை வளர்த்து விடுவதே பாகிஸ்தான் தான் என அமெரிக்க இராணுவத் தளபதி மேக் முல்லன் கருத்துத் தெரிவித்தார்.


ஆப்கானிஸ்தானில் ஹக்கானி அமைப்பிற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தொடர்ந்து உதவி வருகின்றது. அதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா கூறியது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி இதற்கு அளித்த பதில் நெற்றியடியாக அமைந்தது.
சோவியத் யூனியன் ஆப்கானை ஆக்கிரமித்த போது ஹக்கானி நெட்வேர்க்கை வளர்ந்துவிட்டது, பாகிஸ்தானா? அமெரிக்காவா? எனக் கேட்டு ஹக்கானி அமைப்பை வளர்த்தது அமெரிக்காவே என குற்றம் சாட்டினார்.


பாகிஸ்தானின் பொறுமையை அமெரிக்கா அளவுக்கு மீறி சோதித்துப் பார்க்கின்றது. மீண்டும் மீண்டும் சீண்டினால் பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வோம் என அமெரிக்காவையே மிரட்டியுள்ளார். அத்துடன் பாகிஸ்தானின் உறவை அமெரிக்கா முறித்துக் கொண்டால் பாகிஸ்தானுக்கு அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அமெரிக்காவே பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். இந்தப் பதிலை அமெரிக்கா அணுவளவும் எதிர்பார்த்திருக்காது.


இவர் புதிய ஒரு அமைச்சர். ‘இளம் கன்று பயம் அறியாது’ என்பது போல் என்னவோ ஆர்வக் கோளாரில் உளறுகின்றார் என்று தான் எல்லோரும் நினைத்தார்கள். இவரின் இந்த முகத்திலடித்தால் போல் அமைந்த பதில் குறித்து அமெரிக்கா எந்தப் பதிலும் கூறவில்லை. பெறும்பாலும் பாகிஸ்தானின் உயர்மட்ட அரசில் தலைவர்களே இதற்குப் பதில் கூறி பணிந்து வருவார்கள் என அமெரிக்கா எதிர்பார்த்திருக்கலாம்.
இந்த சந்தர்ப்பத்தில் தான் பாகிஸ்தானிலிருந்து பளார் என மற்றொரு அறை அமெரிக்காவின் கண்ணத்தில் விழுந்தது.


இந்த சூழ்நிலையில் சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவிற்குப் பெருத்த தலையிடியாக மாறியுள்ளது. அமெரிக்கா தான் உலக வல்லரசு என்ற நிலை நீடிப்பதால் தான் உலக நாடுகள் அதன் கீழ் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் ரஷ்யா இருந்த இடத்தை சீனா எட்டிவிட்டால் சீனாவின் பக்கம் சில நாடுகள் நகர்ந்து சென்று விடும். என்னை விட்டால் வேறு ஆள் இல்லை என்ற அமெரிக்காவின் ஆணவத்திற்கு இது பலத்த அடியாக அமையும். அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையில் பணிப்போர் நடைபெறுவது ஒன்றும் பரம இரகசியம் அல்ல.



அமெரிக்காவுக்கு எதிராக வெளியுறவு அமைச்சர் பேசுகிறார். இதே வேளை சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மொங் கியாங் ஜு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்கின்றார். அவரை வரவேற்பதற்கான நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி உரையாற்றும் போது ‘சீன நட்பு மலைகளை விட உயரமானது, கடலை விட ஆழமானது, இரும்பை விட வலுவானது, தேனை விட இனிமையானது’ என காதல் கீதம் பாடியுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேலின் நண்பனாகத் திகழ்ந்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் ‘சீனாவின் நண்பர்கள் எமக்கும் நண்பர்கள். சீனாவின் எதிரிகள் எமக்கும் எதிரிகள்’ என போட்ட போடு அமெரிக்காவிற்று மற்றுமொறு அவமான அடியாகும்.



சீனாவும் இந்தியாவும் கீரியும்-பாம்புமாகவுமே செயற்பட்டு வருகின்றன. இதே உறவு தான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் நீடிக்கின்றது. எனவே, பாகிஸ்தான் சீனாவுடன் நெருங்குவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இது அமெரிக்காவுக்கு அரசியல் ரீதியில் விழும் பலத்த அடியாகும்.



இந்தியப் பிரதமர் அமெரிக்காவை எதிர்க்கிறார். பாகிஸ்தானும் அமெரிக்க எதிர்ப்பு மனநிலைக்கு வந்துள்ளது. சீனா-இந்தியா, இந்தியா-பாகிஸ்தான் இந்த நாடுகள் தமக்கிடையிலுள்ள பகையை மறந்து ஒன்று பட்டால் தெற்காசியப் பிராந்தியத்திலிருந்து அமெரிக்க ஆதிக்கக் கழுகைத் துரத்திவிடலாம்.



இந்த நாடுகளில் வளர்ந்து வரும் அமெரிக்க எதிர்ப்புணர்வு அமெரிக்காவுக்குப் பலத்த பின்னடைவாக இருந்தாலும் இந்த நாடுகளுக்கு உள்ளேயே நிலையான நீடிக்கும் பகையுணர்வுதான் அமெரிக்காவுக்கு இருக்கும் ஒரே பலமாகும். இந்த பலத்தை சிதறடித்தால் தெற்காசிப் பிராந்தியம் சீர்பெறும்ளூ வளம் பெறும்ளூ நிம்மதி பெறும்.