Tuesday, July 29, 2008

மய்யித்திற்கு துஆச் செய்வது, அதை பின் தொடர்வது:

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஒருவர் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டால் அவருக்கு ஒரு 'கீராத்' நன்மை உண்டு. ஒருவர் அதை அடக்கம் செய்யும் வரை கலந்து கொண்டால் அவருக்கு ''இரண்டு கீராத்'' உண்டு என்று நபி (ஸல்) கூறினார்கள். ''இரண்டு கீராத் என்றால் என்ன?'' என்று கேட்கப்பட்டதற்கு, ''பெரும் இரண்டு மலைகள் போன்றது'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''இறை நம்பிக்கையுடனும், நன்மையை நாடியும் முஸ்லிமின் ஜனாஸாவில் கலந்து கொண்டு, அதற்காக தொழுது, அதை அடக்கம் செய்யப்படும் வரை ஒருவன் இருந்தால், அவன் இரண்டு ''கீராத்'' நன்மைகளை கூலியாகப் பெற்று திரும்புகிறான். ஒரு கீராத், உஹது மலை போலாகும். ஒருவன் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டு, அடக்கம் செய்யப்படும் முன் திரும்பிவிட்டால், அவன் ஒரு ''கீராத்'' நன்மையுடன் திரும்புகிறான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி)(ரியாளுஸ்ஸாலிஹீன்)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''இறந்தவருக்காக நீங்கள் தொழுதால், அவருக்காக துஆவை நீங்கள் மனத்தூய்மையுடன் செய்யுங்கள்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூது)(ரியாளுஸ்ஸாலிஹீன்)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஜனாஸாவை (அடக்கம் செய்ய) தீவிரமாக்குங்கள். அது நல்லதாக இருந்தால், அதை நன்மையின் பக்கம் முற்படுத்தி வைத்தவர்களாவீர்கள். அது தீமையானதாக இருந்தால் உங்களின் பிடரிகளை விட்டும் (உங்கள் பொறுப்பை) அந்த தீமையை இறக்கி வைத்தவர்களாவீர்கள்'' என நபி(ஸல்) கூறினாhர்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஜனாஸா (அடக்கம் செய்திட) தயார் செய்யப்பட்டு, அதை ஆண்கள் தங்களின் கழுத்துகளில் சுமந்து சென்றால், அந்த ஜனாஸா நல்லதாக இருந்தால், ''என்னை சீக்கிரம் கொண்டு செல்லுங்கள்.'' என்று அது கூறும். அது சரியில்லாததாக இருந்தால், தன்னைச் சேர்ந்தோரிடம் ''எனக்கு வந்த நாசமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?'' என்று கேட்கும். அதன் சப்தத்தை மனிதன் அல்லாத அனைத்தும் கேட்கும். மனிதன் கேட்டால் அதிர்ச்சியாகி விடுவான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்)

No comments: