Wednesday, April 4, 2012

அராஜகத்தை எதிர்த்து அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள் வெளிநடப்பு

நிவ்ஜெர்ஸி: அமெரிக்காவின் மிகப் பிரபலமான ருட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர் செயற்பாட்டு மையம் ஒழுங்குசெய்திருந்த ஒரு கருத்தரங்கில், இரண்டு இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய்கள், காஸா மீதான இஸ்ரேலின் சட்டவிரோத முற்றுகையையும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் பலஸ்தீன் மக்களுக்கு இழைத்துவரும் வன்கொடுமைகளையும் நியாயப்படுத்தி உரையாற்ற முற்பட்டபோது கோபம் கொண்ட அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள் எழுந்து, கருத்தரங்கு மண்டபத்தை விட்டு வெளிநடப்புச் செய்தார்கள். வேறு சிலர், தனது உரையைத் தொடர்ந்த இஸ்ரேலிய இராணுவச் சிப்பாயை நோக்கி, "ஸியோனிசக் கொலை வெறியர்களைக் கொண்ட இராணுவத்தில் சேர்வதை நீர் ஏன் எதிர்த்துப் போராடவில்லை?" என்று சத்தமிட்டுக் கத்தினார்கள்.

தமது வெளிநடப்பைத் தொடர்ந்து எதிர்ப்புப் பேரணியொன்றில் பங்குபற்றிய மேற்படி அமெரிக்க மாணவர்கள், ஸியோனிஸ அரசின் போர்க் குற்றங்களைக் கண்டிக்கும் சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றார்கள்.

காஸாவிலும் மேற்குக் கரையிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர்களும் அவர்களின் வயதும் எழுதப்பட்ட பதாதைகளையும் மாணவர்கள் தமது கைகளில் ஏந்திச் சென்றார்கள். அக்குழந்தைகளின் பெயர்களை அடுத்து "மௌனமாக்கப்பட்டவர்கள்" என்று தடித்த எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்கத் தெருக்களின் வழியே சென்ற மாணவப் பேரணியாளர்கள், ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கும் அதன் அராஜகங்களுக்கும் எதிரான சுலோகங்களை முழங்கியதோடு, பலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாகக் கிளர்ந்து எழ முன்வருமாறு அமெரிக்க மக்களுக்கு அழைப்பு விடுத்துக் கோஷமிட்டனர்.


இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிகாரத் தரப்பு வழங்கிவரும் எத்தகைய நிபந்தனைகளும் அற்ற முழுமைமையான ஆதரவினால், சர்வதேச உலகில் அமெரிக்காவின் நற்பெயருக்குப் பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளது என்று தற்போது அனேகமான அமெரிக்கர்கள் நம்புகின்றனர்; அத்துடன், அமெரிக்காவின் இளம் தலைமுறையினர் தற்போது இந்த நிலைமை குறித்து அதிக விழிப்புணர்வு பெற்று வருகின்றனர் என்பதையே மேற்படி எதிர்ப்புப் பேரணி நமக்கு உணர்த்துகிறது என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தேங்க்ஸ்: www.inneram.com

No comments: