Sunday, April 22, 2012

பள்ளிவாசலை அகற்ற கோரி, வன்முறை ஆர்ப்பாட்டம் செய்வது ஆணவத்தின் உச்சகட்டம்

- தம்புள்ளை சம்பவம் தொடர்பில் மனோ கணேசன்
தம்புள்ளையில் அமைந்துள்ள பள்ளிவாசல் 60 வருட பழமை வாய்ந்ததது என அங்கு வாழும் இஸ்லாமிய மக்கள் கூறுகின்ற வேளையில், அது பற்றி ஆராய்ந்து பார்க்காமல் அந்த மத வழிபாட்டு தலத்தை சட்ட விரோதமானது என்று சொல்வதும், அதை உடைத்து அகற்ற வேண்டும் என ஆயிரக்கணக்கில் மக்களை கூட்டி வன்முறையை தூண்டும் விதமாக ஆர்ப்பாட்டம் செய்வதும், பெளத்த மத தலைவர்கள் செய்யக்கூடிய காரியம் அல்ல. நடைபெற்றுள்ள சம்பவம் பெரும்பான்மை ஆணவத்தின் உச்சகட்டம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.



தம்புள்ளை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் உட்பட சில கட்டிடங்களை அகற்றக்கோரி ரங்கிரி தம்புள்ள விஹாரையின் பிரதான தேரர் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது, தம்புள்ளையிலிருந்து கந்தலம சந்தி வரையில் நடைபெற்றுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தினால், நகரில் பாதுகாப்புக்காக ராணுவம் கொண்டுவரப்பட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. ஆர்பாட்டக்காரர்கள் சிலர் பள்ளி வாசலுக்கு உள்ளேயும் நுழைந்துள்ளார்கள். இவை அனைத்தும் பெளத்த துறவிகள் தலைமையில் நடந்தேறியுள்ளன. இவை முற்றுமுழுதாக கண்டிக்கப்பட வேண்டியவை ஆகும்.



இந்த இஸ்லாமிய பள்ளிவாசல் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தம்புள்ள பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். ஆனால் அது 60 வருட பழமை வாய்ந்தது என அங்கு வாழும் இஸ்லாமிய மக்கள் சொல்கிறார்கள். எனவே உண்மை ஆதாரங்கள் நிதானமாக சீர்தூக்கி பார்க்கப்பட வேண்டும்.மறுபக்கத்தில், வடக்கிலும் கிழக்கிலும் பெருந்தொகையான பெளத்த மத விகாரைகள் இரவோடு இரவாக சட்ட விரோதமாக கட்டப்பட்டு வருகின்றன. இவற்றின் சட்ட விரோத தன்மைக்கு எதிராக தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும், இந்து, இஸ்லாமிய மத தலைவர்களும் மக்களை கூட்டி ஆர்ப்பாட்டம் செய்தால் நிலைமை என்னவாகும் என்ற கேள்வி இங்கு எழுகிறது.

அதாவது, பெளத்த மக்கள் வாழாத பல தமிழ், முஸ்லிம் பகுதிகளில் அரசாங்கம் திட்டமிட்டு பெளத்த மத விகாரைகளை கட்டி வருகின்றது. மறுபக்கத்தில் சிங்கள பகுதிகளில் உள்ள பெளத்தம் அற்ற மத நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தின் மூலமும், அடாவடிதனத்தின் மூலமும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.


சட்டம் எல்லா மதத்தவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆனால் இந்நாட்டில் இன்று அனைவருக்கும் பொதுவான சட்டம் இல்லை. ஆட்சியில் இருப்பது தமது இன, மத தலைமை என்ற ஒரே காரணத்தினாலேயே இந்த ஆணவத்துடன் கூடிய அடாவடித்தனகள் அரங்கேற்றப்படுகின்றன.


அரசுக்கு ஆதரவாக கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்குகூட இவற்றை தடுக்க முடியாத அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது. ஆட்சியாளர்களுக்கு துணை போய் கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் தலைவர்களால் இவற்றை கைகட்டிகொண்டு பார்த்துகொண்டு இருப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாத அளவிற்கு நாடு இன்று அதலபாதாளத்தில் விழுந்து விட்டது. இந்த ஆட்சியின் கீழேயே வரலாற்றில் ஒருபோதும் நிகழாத அளவிற்கு சிறுபான்மை மக்கள் கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

No comments: