Monday, August 5, 2013

நன்மைகளின் வாயில்கள்!

வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா?

“ரமளான் மாதத்தின் நோன்பை நோற்ற ஒருவர், பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளை நோற்றால் அவ்வருடம் முழுவதும் அவர் நோன்பு நோற்றவர் போன்றவர் ஆவார்” (முஸ்லிம்)

 காலமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா?
ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!” என்று கூறினார்கள். (புகாரி ஹதீஸ் சுருக்கம்)

நோன்பு திறக்க ஏற்பாடு செய்வதன் சிறப்புகள்:
யார் நோன்பாளி நோன்பு திறப்பதற்கு ஏற்பாடு செய்கின்றாரோ அவருக்கு நோன்பாளியின் கூலி கிடைக்கும். எனினும் நோன்பாளியின் கூலியில் எந்தக்குறைவும் ஏற்படாது. (திர்மிதீ)

பன்மடங்கு நன்மைகளை பெற குர்ஆனை ஓதுங்கள்!
“யார் ஒருவர் குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு ஒரு நன்மை. ஒரு நன்மை என்பது அதைப் போன்று பத்து மடங்கு. ‘அலிப்’ ‘லாம்’ ‘மீம்’ என்பது ஒரு எழுத்து இல்லை. ‘அலிஃப்’ ஒரு எழுத்து, ‘லாம்’ ஒரு எழுத்து, ‘மீம்’ ஒரு எழுத்து” (புகாரி, முஸ்லிம்)

இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை வேண்டுமா?
“எவர் ‘இஷாத்’ தொழுகையை ஜமாத்தோடு தொழுகிறாரோ அவர் பாதி இரவை நின்று வணங்கியவர் போலாவார். எவர் சுப்ஹ் தொழுகையையும் ஜமாத்தோடு தொழுகிறாரோ அவர் முழு இரவும் தொழுததைப் போன்றதாகும்.” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஒரு ஹஜ் செய்த நன்மையைப் பெற!
“ரமளான் மாதத்தில் உம்ரா செய்வது ஒரு ஹஜ் அல்லது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்குச் சமமானதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மை வேண்டுமா?
‘லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர்
(பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)
‘என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமாமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (முறை இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர! (புகாரி)

அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிய வேண்டுமா?
“என்மீது ஒரு தடவை ஸலவாத் சொல்பவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மறுமையில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை வேண்டுமா?
(தொழுகை அழைப்பான) பாங்கு சப்தத்தைக் கேட்(டு முடிக்)கும்போது,
அல்லாஹூம்ம ரப்ப ஹாதிஹித் தஃவத்தித் தாம்மாத்தி வஸ்ஸலாத்தில் காயிமத்தி ஆத்தி முஹம்மதனில் வஸீலத்த வல்ஃபளீலத்த வப்அஸ்ஹூ மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹூ
பொருள்: பரிபூரணமான இந்த அழைப்புக்கும் நிலைபெறப் போகும் தொழுகைக்கும் சொந்தக்காரணமாகிய அல்லாஹ்வே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ‘வஸீலா’ என்ற உயர் பதவியையும் சிறப்பையும் வழங்கி, அன்னாரை நீ வாக்களித்துள்ள புகழுக்குரிய இடத்தில் எழுப்புவாயாக!
என்று யார் ஓதுகின்றாரோ அவருக்கு எனது பரிந்துரையுண்டு’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

லுஹா தொழுகையின் சிறப்புகள்:
உங்களில் ஒருவர் தனது எலும்பு மூட்டுகளுக்காக தர்மம் வழங்க வேண்டும். (நீங்கள் கூறுகின்ற) ஒவ்வொரு சுபுஹானல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு லாயிலாஹ இல்லல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு தக்பீரும் தர்மமாகும்.
நன்மையை ஏவுவதும் தர்மமாகும். தீமையைத் தடுப்பதும் தர்மமாகும். முற்பகல் நேரத்தில் இரண்டு ரக்ஆத்துகள் தொழுவது இவை அனைத்திற்கும் போதுமான தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

மலைகளைப் போல நன்மைகள் வேண்டுமா?
“மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு ‘கிராத்’ அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு ‘கிராத்’ அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு ‘கிராத்’ என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

நன்றி:சுவனத்தென்ற

No comments: