Saturday, September 5, 2009

இஸ்லாம் மயமாகும் ஐரோப்பா கண்டம்! - Part 3

கட்டுரை ஆசிரியர் : அபூ ரிஸ்வான்

இறைவனின் திருப்பெயரால்…

இதுவரையில் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பல நாடுகளிலும், மற்றும் ஆசிய, அமெரிக்க கண்டங்களில் உள்ள சில நாடுகளிலும் தற்பொழுது நிலவிவரும் மனிதவள பற்றாக்குறை பற்றியும் அதனால் வரும்காலத்தில் ஏற்படப்போகும் விளைவுகள் பற்றிய கணிப்புகளையும் கண்டோம். இச்சூழ்நிலையில் உலக முஸ்லிம்கள் மேற்கண்ட நிகழ்வுகளைக் கொண்டு எவ்வாறு படிப்பினைப் பெறவேண்டும் என்பதை இப்பகுதியில் ஆராய்வோம்.

குழந்தைகளைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான்:

“அல்லாஹ், பூமி மற்றும் வானங்களுடைய ஆட்சியின் உரிமையாளனாவான். தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான். தான் நாடுவோருக்குப் பெண்மக்களை வழங்குகின்றான். தான் நாடுவோருக்கு ஆண் மக்களையும் வழங்குகின்றான். தான் நாடுவோருக்கு ஆண் மக்களையும் பெண் மக்களையும் சேர்த்து வழங்குகின்றான். தான் நாடுவோரை மலடுகளாகவும் ஆக்குகின்றான். திண்ணமாக, அனைத்தையும் அறிந்தவனும் யாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவனும் ஆவான்” (அல்-குர்ஆன் 42:49-50)

மேற்கூறப்பட்ட இவ்வசனங்களிலிருந்து அல்லாஹ் (சுப்) ஒருவனே மக்கட்செல்வத்தைக் கொடுக்க முடியும்; மற்ற எந்த சக்தியாலும், அரசாட்சியாலும், மக்கட்தொகையை பெருக்கவோ, குழந்தைகளின் பிறப்பை அதிகரிக்கவோ ஒருகாலும் முடியாது. குழந்தைகள் என்பது சீனாவில் உற்பத்தியாகும் விளையாட்டு பொம்மைகள் அல்ல! அவைகைளை கோடிக்கணக்கில் ஓரிரு தொழிட்கூடங்களில் தானியங்கி எந்திரங்களைக் கொண்டு (Robatic Machinary) தயாரித்து விடுவதற்கு! சோதனைக் குழாய் (Test Tube) குழந்தைகள் என்று கூறப்படும் சோதனைக்குழாயில் கருவுறவைக்கப்படும் கருவை திரும்ப பெண்ணின் கருப்பையில் வைத்துத்தான் குழந்தை பூரண வளர்ச்சி அடைந்ததும் பிரசவிக்கச் செய்கிறார்கள். செயற்கை கருப்பையை (Artificial uterus) இதுவரை எந்த விஞ்ஞானிகளாலும் உருவாக்க முடியவில்லை! உருவாக்கவும் முடியாது!! இன்னும் ஒன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். கோழி முட்டைகளை இன்குபேட்டரில் (Incubator) வைத்து விரைவாகவே குஞ்சுப்பொறிக்க வைப்பதைப்போல கருப்பையில் கருவளர்ச்சியை வேகப்படுத்தி ஒன்பது மாதத்திற்கு முன்பாக 7 மாதத்திலேயோ அல்லது 5 மாதத்திலேயோ குழந்தையை முழுவளர்ச்சி அடைவித்து பிரசவிக்க வைக்க ஒருகாலும் முடியாது!

எனவே குழந்தைகள் பிறப்பதை அதிகரிக்க வழி ஒன்றே ஒன்றுதான்! அதுவே இயற்கையான வழி! நம் முன்னோர்களால் காலம் காலமாகக் காட்டப்பட்ட வழி! இஸ்லாம் காட்டும் வழியும் அதுதான். வயது வந்த ஆண் பெண் இருபாலரும் திருமணம் முடித்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது தான். எத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வரம்பு எதுவும் விதிக்கவில்லை. இப்பொழுதுள்ள நடைமுறைப்படி, ஒருவரது பொருளாதார வசதிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் தகுந்தவாறு தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதிலும் வெளியில் வேலைக்குப் போகும் பெண்கள் குறைவாகவே ஓரிரு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்கின்றனர். பெண்கள் நாட்பட்டுத் திருமணம் செய்து கொள்வதும் குறைவாக குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு ஒருகாரணம்.

இறைவன் தன் திருமறையில் அஷ்ஷூரா அத்தியாயத்தில் குழந்தைகளை தான் நாடுவோருக்கு கொடுப்பதாக கூறும் இடங்களில் ‘பெண் குழந்தைகளைக் கொடுப்பேன்; ஆண் குழந்தைகளைக் கொடுப்பேன்; இரண்டையும் கலந்துக் கொடுப்பேன், என்கிறான். இதில் உபயோகிக்கப்படும் அரபிச் சொற்களை பார்க்கும் பொழுது ஒரு உண்மை பளிச்சிடும்.

அரபி இலக்கணத்தில் ஒன்றைக் (Singular) குறிக்க ஒரு சொல்லும், இரண்டைக் (Dual) குறிக்க மற்றொரு சொல்லும், மூன்றையும் அதற்கு மேல் உள்ளவற்றைக் குறிக்க பிரிதொரு சொல்லும் பயன்படுத்தப் படுகின்றன. குர்ஆனில், இந்த வசனத்தில் பயன்படுத்தப்படும் பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகளுக்கான சொற்கள் மூன்றையோ அல்லது அதற்கு மேல் உள்ளவைகளையோ குறிக்கும் பன்மைச் சொற்கள்ஆகும். இதன் மூலம் சூசகமாக மூன்று குழந்தைகளையோ அல்லது அதற்கு மேலேயோ பெற்றுக்கொள்வதைத்தான் இறைவன் விரும்புகின்றான் என்று கூட நாம் பொருள் கொள்ளலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

நாம் இதற்கு முந்தைய பகுதிகளில் ஏற்கனவே விவரித்திருந்தபடி, ஒரு பெண் தன் கருவுறுங்காலத்தில் (15 முதல் 44 வயது வரை) குறைந்தபட்சமாக 2.11 குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் தான் அச்சமுதாயம் நீடித்து வாழும் என்பது விஞ்ஞானிகளின் முடிவு. இவ்வெண் 2.11 யை முழு எண்ணாக மாற்றினால் 3 குழந்தைகள் ஆகும். ஆக, ஒரு பெண் முன்று அல்லது அதற்கு மேல் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் தான் அச்சமுதாயம் (அல்லது நாடு) வளரும்; அபிவிருத்தியடையும். இதில் ஆண் குழந்தையாகப் பெறவேண்டுமா? அல்லது பெண் குழந்தையாகப் பெறவேண்டுமா? என்றெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. இறைவன் தனது திட்டப்படி ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது இரண்டும் கலந்தோ கொடுப்பான். குழந்தை இறப்பு (Infant Martality) விகிதம் அதிகம் உள்ள நாடுகளிலும், போர் மற்றும் இயற்கை அழிவுகளால் பாதிக்கப்படும் நாடுகளிலும் உள்ள மக்கள் குழந்தைப் பிறப்பு விகிதத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் அங்குள்ள பெண்கள் நான்கோ அதற்கு மேலுமோ குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

மேலும் ஒரு முஸ்லிமுக்கு இரண்டு மனைவியர்கள் இருந்தால், அவர்கள் இருவருக்கும் சேர்ந்து மொத்தக் குழந்தைகள் 5 க்கும் குறையாமல் இருக்கவேண்டும். மூன்று மனைவிகள் இருந்தால் அம்மூவருக்கும் சேர்ந்து மொத்தக் குழந்தைகள் 7 க்கும் குறையாமல் இருக்கவேண்டும். ஒருகால் நான்கு மனைவிகள் இருந்தால் அந்நால்வருக்கும் சேர்ந்து மொத்தக் குழந்தைகள் 9 க்கும் குறையாமல் இருக்க வேண்டும். இது ஒரு குடும்பத்திட்டக் குறிப்புதான். முதல் மனைவி குழந்தையில்லாமல் இருந்து ஒருவர் இரண்டாவது மனைவியைத் திருமணம் செய்தால், தன் இரண்டாம் மனைவியடமிருந்து ஐந்து குழந்தைகளுக்கு குறையாமல் பெற்றுக் கொள்ளவேண்டும். ஆனால், ‘இதுவெல்லாம் நடக்கிற காரியமா?’ என்று எனது சகோதரர்கள் கேட்பார்கள் என்பது தெரியும். அதற்கும் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவை என்னவென்பதை அடுத்த பகுதியில் (Part 4) இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.

No comments: