Sunday, March 1, 2009

ஈஸா நபியின் வருகை ஓர் அதிசயம்

'அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்'. (அல்குர்ஆன்)
நபி (ஸல்) அவர்கள் மறுமை நாளின் மிக நெருக்கத்தில் ஏற்படக்கூடிய பத்து அடையாளங்களை நமக்கு முன்னறிவிப்புச் செய்துள்ளனர். ஈஸா (அலை) அவர்கள் இவ்வுலகுக்கு வருகை தருவதும் அந்தப் பத்து அடையாளங்களில் ஒன்றாகும். இந்த அடையாளத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர் அடிப்படை விஷயத்தை அறிந்து கொள்வது அவசியமாகும். ஏனெனில் ஈஸா (அலை) அவர்களின் வருகை விஷயத்தில் சிலர் சந்தேகம் கொள்கின்றனர். தர்க்கரீதியான சில விவாதங்களை முன் வைத்து ஈஸா (அலை) அவர்களின் வருகையை மறுக்கின்றனர். அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விஷயத்தைப் பற்றி முடிவு செய்து விட்டால் - அந்த முடிவு நமக்கு விருப்பமில்லாததாக இருந்தாலும் நமது அறிவு அதை ஏற்கத் தயக்கம் காட்டினாலும் இதை நம்ப வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும். ஏனெனில் நமக்கு விருப்பமில்லாதவற்றை முடிவு செய்யும் அதிகாரம் இறைவனுக்கு உண்டு. நமது அறிவு ஏற்க மறுப்பதையும் செய்து காட்டும் வல்லமையும் அவனுக்கு இருக்கின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒருவர் எப்படி உயிருடனிருக்க முடியும்? அவர் எதை உண்கிறார்? அவர் எப்படி மலஜலம் கழிக்கிறார்? என்பது போன்ற கேள்விகளை இத்தகையோர் கேட்கின்றனர். சாதாரண நிலையில் இவ்வாறு நடப்பதில்லை என்பது உண்மைதான். அல்லாஹ் நாடினால் இவ்வாறு நடத்திக் காட்டுவது சந்தேகப்படக் கூடியதன்று. அதிசயமான ஒரு விஷயத்தை சாதாரண நிலையில் வைத்துப் பார்க்கக் கூடாது என்பதை உணர்ந்தால் இவ்வாறு கேட்க மாட்டார்கள்.
ஈஸா (அலை) அவர்கள் தொட்டில் குழந்தையாக இருந்த போது பேசியதாக அல்லாஹ் கூறுகிறான். (3:45, 5:110) இதுவும் சாதாரணமாக நடப்பது கிடையாது. ஆயினும் இறைவன் அவ்வாறு கூறுவதால் அதில் குதர்க்கம் செய்வதில் நியாயம் இல்லை. இறந்தவர்களை உயர்ப்பித்தல் சாதாரணமாக நடக்கக் கூடியதன்று. ஆயினும் ஈஸா (அலை) அவ்வாறு செய்ததாக அல்லாஹ் கூறுவதால் அதை நம்பித்தான் ஆக வேண்டும். இறைவனின் வல்லமைக்கு முன்னே இது பெரிய விஷயமன்று. களிமண்ணால் பறவை செய்து அதை நிஜப்பறவையாக மாற்றுவதும் நடைமுறையில் சாத்தியமற்றவைதான் அதை அல்லாஹ் கூறுவதால் (3:49) அதையும் நம்பித்தான் ஆக வேண்டும். இது போல் பலநூறு விஷயங்களில் குதர்க்கமான கேள்விகள் கேட்க வழியுண்டு. ஆயினும் அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து அல்லாஹ்வின் வேதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இவற்றை நம்பத் தயங்க மாட்டார்கள். நம்பத் தயங்கினால் அல்லாஹ்வையும் அவனது வேதத்தையும் நம்பியவர்களாக முடியாது. இறைவல்லமையை மறந்து அதைக் கேலி செய்யும் போக்குடையவர்களின் குதர்க்க வாதங்களுக்கு நாம் இதையே பதிலாக்குவோம்.
இதைத் தவிர குர்ஆனின் சில வசனங்களைக் கொண்டு ஈஸா (அலை) அவர்களின் வருகையை மறுப்பவர்களும் உள்ளனர். அவற்றுக்கு நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். நான் உயிரோடிருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் அல்லாஹ் எனக்கு போதித்துள்ளான். (19:31) என்று ஈஸா (அலை) கூறியதாக அல்லாஹ் கூறுகிறான். ஈஸா (அலை) அவர்கள் இன்றளவும் உயிருடனிருந்தால் அவர்கள் இன்று வரை தொழ வேண்டும், ஸகாத் கொடுக்க வேண்டும். மக்களுடன் தொடர்பில்லாத அவர்கள் யாருக்கு எப்படி ஸகாத் கொடுப்பார்கள்? அவர்கள் ஸகாத் கொடுக்க வில்லை என்பது உறுதியானால் அவர்கள் உயிருடன் இப்போது இல்லை என்பதும் உறுதியாகின்றது என்பது இவர்களின் வாதம். மேலோட்டமாகக் கேட்கும் போது இது நியாயமான வாதமாகவே படுகின்றது. சிந்திக்கும் போது இது அர்த்தமற்ற வாதம் என்பது புலனாகும். அல்லாஹ்வின் எந்தக் கட்டளையானாலும் அதற்குரிய சூழ்நிலை இருக்கும் போது தான் நிறைவேற்ற வேண்டும் என்றே புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் அல்லாஹ் அதைக் கூறாவிட்டாலும் கூட அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
மூமின்களே! உங்கள் குரலை நபியின் குரலைவிட உயர்த்தாதீர்கள் (49:2) என்று அல்லாஹ் கூறுகிறான். மூமின்களே என்று அழைத்து இறைவன் கூறுவதால் இதை நாம் செயல்படுத்த வேண்டும். இதை எப்படி செயல்படுத்த இயலும்? நபியின் குரலைக் கேட்கும் காலத்தில் உள்ளவர்கள் மட்டுமே இதைச் செயல்படுத்த முடியும். மற்றவர்களுக்கு இது இயலாது. இதற்கான சூழ்நிலை இல்லை என்பதால் இதைச் செயல்படுத்தும் கடமை நமக்கு இல்லை என்று புரிந்து கொள்கிறோம். இங்கே வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு வரட்டுப் பிடிவாதம் பிடிப்பதில்லை. அல்லாஹ் 'அதற்கான சூழ்நிலை இருக்கும் போது' என்று கூறாவிட்டாலும் அதுதான் பொருள் என விளங்குகிறோம்.
ஈஸா (அலை) அவர்கள் இப்பூமியில் வாழக்கூடிய காலத்தில் பொருள் வசதி பெற்றவராக இல்லாமலிருந்தால் அப்போதும் அவர்களால் ஸகாத் கொடுக்க முடியாது. அதனால் அவர்கள் இப்பூமியில் வாழ்ந்ததையே மறுத்து விடமுடியுமா? உயிருடன் உள்ளவரை ஸகாத் கொடுக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான் என்றால் அதற்குரிய வசதி வாய்ப்பு இருந்தால் என்றே புரிந்து கொள்ள வேண்டும். எனவே மேற்கண்ட வசனத்தை வைத்து ஈஸா (அலை) மரணித்து விட்டார்கள் என்று முடிவு செய்ய முடியாது. ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும் என்று அல்லாஹ் கூறுகிறான். (3:185, 21:35, 29:57) ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும் என்பதற்கு முரணாக ஈஸா (அலை) உயிருடன் உள்ளனர் என்பது அமைந்துள்ளது எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
ஈஸா (அலை) அவர்கள் ஒருபோதும் மரணிக்கவே மாட்டார்கள் என்று கூறினால் இவர்கள் கூறக்கூடிய முரண்பாடு ஏற்படும். ஈஸா (அலை) அவர்கள் உயிருடன் உள்ளனர் என்று கூறக்கூடியவர்கள் ஈஸா (அலை) மரணிக்க மாட்டார்கள் என்று கூறுவதில்லை. அவர்கள் இவ்வுலகுக்கு வந்து வாழ்ந்து மரணத்தைத் தழுவுவார்கள் என்றே நம்புகின்றனர். மரணம் தாமதமாக வருகின்றது என்று தான் நம்புகின்றனரே தவிர மரணமே அவருக்கு வராது என நம்புவதில்லை. எனவே அந்த வசனத்தினடிப்படையில் ஈஸா (அலை) மரணித்து விட்டனர் என வாதிக்க முடியாது.
'முஹம்மது அல்லாஹ்வின் தூதரைத் தவிர வேறில்லை, அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்' என்று அல்லாஹ் கூறுகிறான். (3:144) ஈஸா (அலை) அவர்கள் உட்பட எல்லாத் தூதர்களும் சென்று விட்டனர் என்பதையே இது காட்டுகிறது எனவும் அவர்கள் வாதிடுகின்றனர். மேலும் நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்த போது சில நபித்தோழர்கள் அவர்களின் மரணத்தை நம்ப மறுத்தனர். அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த வசனத்தை ஓதிக் காட்டினார்கள். உடனே அந்த நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டதாக ஏற்றுக் கொண்டனர் என்று ஹதீஸ்கள் கூறுகின்றன. எல்லா நபிமார்களும் மரணித்து விட்டதாக இந்த வசனத்தை நபித்தோழர்கள் புரிந்து கொண்டிருந்தால் தான் நபியவர்களின் மரணத்தை நம்பியிருக்க இயலும். ஈஸா (அலை) மட்டும் மரணிக்கவில்லை என்று அம்மக்கள் நம்பியிருந்தால் இந்த வசனம் அவர்களின் தவறான நம்பிக்கையைப் போக்கியிருக்க முடியாது. ஈஸா (அலை) அவர்கள் உயிருடன் இருப்பதாக நம்பினால் அதே போல நபி (ஸல்) அவர்களும் உயிருடன் இருக்க முடியும் என்று நம்புவதற்கு தடை ஏதுமில்லை. எனவே இந்த வசனமும், இந்த நிகழ்ச்சியும் ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன எனவும் அவர்கள் வாதிடுகின்றனர். ஈஸா (அலை) அவர்களின் வருகை பற்றிய ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் இவர்களின் வாதம் வலுவானதுதான். ஆனால் ஈஸா (அலை) அவர்களின் வருகை பற்றிய பலமான ஆதாரங்கள் இருக்கின்றன. (அதைப் பின்னர் காணவுள்ளோம்) அவர்களின் வருகை பற்றி ஏனைய ஆதாரங்கள் உள்ளதால் மேற்கண்ட வசனங்களிலிருந்து ஈஸா (அலை) மட்டும் விதிவிலக்குப் பெற்றுள்ளனர் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை எனில், அவர்கள் வருவார்கள் என்று கூறக்கூடிய ஆதாரங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும்.
ஈஸா (அலை) மரணிக்கவில்லை என நபித்தோழர்கள் நம்பியிருந்தால் நபி (ஸல்) அவர்களின் மரணத்தையும் அவர்கள் நம்பியிருக்க மாட்டார்கள் என்ற வாதமும் ஏற்கக் கூடியதன்று. ஈஸா (அலை) அவர்களின் வருகையை நம்பக் கூடியவர்கள் அவர்கள் உயிருடனும் உடலுடனும் உயர்த்தப்பட்டார்கள் என்றே நம்புகின்றனர். உடல் இங்கே கிடக்க உயிர் மட்டும் உயர்த்தப்பட்டது என நம்புவதில்லை. நபித்தோழர்களும் இவ்வாறு நம்பியிருந்தால் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மரணத்தை நம்புவதற்கு தடை ஏதுமில்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் உடல் கண் முன்னால் இருந்தது. அந்த உடலில் எந்த இயக்கமும் இல்லாமலிருந்ததும் அவர்களுக்குத் தெரிந்தது. ஈஸா (அலை) அவர்கள் உடலுடன் காணாமல் போனது போல் நபி (ஸல்) அவர்களும் உடலுடன் காணாமல் போயிருந்தால் ஈஸா (அலை) அவர்களைப் போலவே நபி (ஸல்) அவர்களும் உயிருடன் உள்ளதாக நம்பலாம். இரண்டுக்குமுள்ள வித்தியாசம் பளிச்சென்று தெரியும் போது ஈஸா நபியைப் போல் நபியவர்களையும் அவர்கள் கருத வேண்டியதில்லை. ஈஸா நபி இன்றளவும் உயிருடன் இருக்கிறார். நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இல்லை. எனவே எங்கள் ஈஸா நபியே உங்கள் நபியைவிடச் சிறந்தவர் என்று கிறித்தவர்கள் வாதம் செய்வதற்கு இந்த நம்பிக்கை உதவி செய்கிறது.
எனவே கிறித்தவர்களின் வாயை அடைக்க ஈஸா நபியின் மரணத்தை நம்பியே ஆக வேண்டும் என்பதும் அவர்களின் வாதம். இது முட்டாள் தனமான வாதமாகும். ஒரு நபிக்குக் கொடுக்காத சில சிறப்பை வேறொரு நபிக்கு அல்லாஹ் கொடுக்கலாம். கொடுத்திருக்கிறான். ஓரிரு சிறப்பு உள்ளதால் எல்லா வகையிலும் ஒருவர் சிறந்தவராக முடியாது. ஈஸா நபி தந்தையின்றி அற்புதமான முறையில் பிறந்தார்கள். நபி (ஸல்) அவர்களோ தந்தையின் விந்துத்துளி மூலம் பிறந்தார்கள். அதனால் ஈஸா நபியே சிறந்தவர் என்று கூட கிறித்தவர்கள் வாதிடலாம். இதனால் ஈஸா நபி தந்தைக்குத் தான் பிறந்தார் என்று கூற வேண்டுமா? இவர்கள் கூறியது போல் கிறித்தவர்கள் வாதம் செய்தால் அந்த வாதத்தை அறிவுப்பூர்வமாக சந்திக்க இயலும். எவ்வளவு காலம் ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்பதில் சிறப்பு ஏதுமில்லை. என்ன செய்திருக்கிறார் என்பதிலேயே சிறப்பு உள்ளது. இது பகுத்தறிவுள்ள அனைவரும் ஏற்கக்கூடிய வாதம் தான். இதை விளக்கமாக எடுத்துச் சொல்லி அவர்களின் வாதத்தை முறியடிக்க முடியும்.
கர்த்தர் ஏசுவுக்கு அருளிய வேதம் இன்று வரை பாதுகாக்கப்பட வில்லை. தீமைக்கு எதிராக ஏசு போர் புரிந்ததாக வீர வரலாறு இல்லை. வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் சரியான தீர்வை ஏசு கூறியதாக பைபிள் கூறவில்லை. நபி (ஸல்) அவர்களுக்கோ இந்தச் சிறப்புக்கள் உள்ளன. இப்படி ஆயிரமாயிரம் சிறப்புக்களைக் கூறி அவர்களின் வாதத்தை முறியடிக்க முடியும். அவர்களின் தவறான வாதத்திற்காக சரியான உண்மையை மறுக்கத் தேவையில்லை. ஆக இது போன்ற வாதங்களை அலட்சியம் செய்து விட்டு ஈஸா (அலை)அவர்களின் வருகை சம்பந்தமான ஆதாரங்களைக் காண்போம்.
"இன்னும் மரியமின் குமாரரும், அல்லாஹ்வின் தூதருமான மஸீஹ் எனும் ஈஸாவை நாங்கள் கொன்று விட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் அவர்கள் சபிக்கப்பட்டார்கள். அவர்கள் அவரைக் கொல்லவும் இல்லை, அவரை சிலுவையில் அறையவுமில்லை எனினும் அவர் (ஈஸா) அவர்களுக்குக் குழப்பமாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் முரண்படுவோர் இது பற்றி சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர (சரியான) ஞானம் அவர்களிடம் இல்லை. நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவே இல்லை. மாறாக அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கிறான்". (அல்குர்ஆன் 4:157,158)
இவ்விரு வசனங்களையும் அல்லாஹ்வின் வல்லமையையும் உணர்ந்து, விதண்டாவாதமும் வார்த்தை ஜாலமும் செய்யாமல் சிந்தித்தால் இது கூறக்கூடிய உண்மையை யாரும் தெளிவாக அறியலாம். 'அவர்கள் அவரைக் கொல்லவில்லை' என்பது அவர் மரணிக்கவில்லை என்பதை அறிவிக்காது. யூதர்கள் கொல்லவில்லை என்பதைத் தான் குறிக்கும். வேறுவழியில் அவர் மரணித்திருக்கலாம் என்பதை இவ்வசனம் மறுக்காது என்று இவர்கள் சமாதானம் கூறுகின்றனர். அத்துடன் அல்லாஹ் நிறுத்திக் கொண்டால் இவர்களது சமாதானம் பொருத்தமானதே. 'மாறாக அவரைத் தன்னளவில் அல்லாஹ் உயர்த்திக் கொண்டான்' என்று அல்லாஹ் கூறுகிறான். அவர்களும் கொல்லவுமில்லை. அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்பதையும் சேர்த்து சிந்தித்தால் அவர் மரணிக்கவில்லை என்பது தெளிவாகும். அவரை உயர்த்திக் கொண்டான் என்றால் அவரது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டான் என்று அவர்கள் விளக்கம் கூறி சமாளிக்கிறன்றனர். அவருடைய உடல் சம்பந்தமாகப் பேசி வரும் போது திடீரென்று அந்தஸ்து என்று தாவுவது ஏற்புடையதாக இல்லை. அந்தஸ்து உயர்வு பற்றி இங்கே கூற வேண்டியதில்லை. அவரைக் கொல்லவில்லை. (கொல்லாத வகையில்) உயர்த்திக் கொண்டான் என்பது பொருத்தமாக அமைகின்றது.
ஒரு வாதத்துக்காக அந்தஸ்து உயர்வு என்றே வைத்துக் கொள்வோம் வேறு பல சான்றுகள் இந்த வாதத்தை உடைத்து எரிகின்றன. "நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள். என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்". (அல்குர்ஆன் 43:61)
ஈஸா (அலை) அவர்கள் இறுதிக்காலத்தின் அத்தாட்சியாவார் என்ற வாசகம் பலமுறை சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. இது ஈஸா (அலை) அவர்களுக்கு முந்தைய வேதங்களில் சொல்லப்பட்டிருந்தால் எதையாவது கூறி சமாளிக்கலாம். இது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினரை நோக்கி அல்லாஹ்வால் கூறப்படுகின்றது. கியாமத் நாளின் அடையாளம் என்றால் இனி மேல் அந்த அடையாளம் எற்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு அர்த்தம் அதற்கு இருக்க முடியாது. எப்போதோ இறந்து விட்ட ஒருவரைப் பற்றி இவ்வாறு கூற முடியாது. கியாமத் நாளின் அடையாளமாக அவர் திகழ்கிறார் என்ற குர்ஆன் வசனத்தை மனதிலிருத்திக் கொண்டு அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்பதைச் சிந்தித்தால் அந்தஸ்து உயர்வு என்ற அர்த்தத்துக்கு வருவது பொருத்தமாக இராது. அந்தஸ்து உயர்வு என்று சாதித்தால் கூட 'மறுமை நாளின் அடையாளமாக அவர் திகழ்கிறார்' என்பது மிகத் தெளிவாக இந்த உண்மையைக் கூறி விடுகின்றது. ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று கூறுவோர் இந்த வசனத்துக்கு ஏற்கத்தக்க எந்த விளக்கமும் கூறமுடியவில்லை. இப்படி ஒரு வசனம் இருப்பதைக் கண்டு கொண்டதாகவே அவர்கள் காட்டிக் கொள்வதில்லை. கியாமத் நாளின் அடையாளமாக அவர்கள் திகழ்கிறார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகவும் அழகாக நமக்கு விளக்கியுள்ளனர்.
'எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் உங்களிடம் நீதி செலுத்துபவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார். சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாருமில்லாத அளவுக்கு செல்வம் கொழிக்கும்' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
நானே ஈஸா நபி என்று கூறிய பொய்யர்கள் சிலர் தோன்றினர். சிலுவை, பன்றி, ஜிஸ்யா என்பதற்கெல்லாம் நவீனமான விளக்கம் கூறி அதைத் தாங்கள் செயல்படுத்தியதாக கதையளந்தனர். 'யாரும் வாங்காத அளவுக்கு செல்வம் கொழிக்கும்' என்பதற்கு எந்த சமாதானமும் அவர்களிடம் இல்லை. இந்தப் பொய்யர்களின் காலத்தில் இத்தகைய நிலை ஏற்படவேயில்லை.
முஸ்லிமில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில் 'போட்டி, பொறாமை, கபடம் ஆகியவை எடுபட்டுப் போகும்' என்று நபி (ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளது. இந்தப் பொய்யர்கள் வந்த போது இந்தத் தீய பண்புகள் முன்பை விட அதிகமானதே தவிர எடுபட்டுப் போகவில்லை. 'அவர் இறங்கக் கூடிய காலத்தில் இஸ்லாத்தை தவிர எல்லா மதங்களையும் அல்லாஹ் அழிப்பான்' என்று அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸ் கூறுகிறது. அந்தப் பொய்யர்களின் காலத்தில் அப்படி நடக்கவில்லை. தஜ்ஜாலின் கொடுமை தலைவிரித்தாடும் போது தான் ஈஸா (அலை) இறங்குவார்கள். தஜ்ஜாலின் நிலை இவ்வாறு இருக்கும் போது மர்யமின் மகன் மஸீஹை அல்லாஹ் அனுப்புவான். டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மனாரா(கோபுரம்)வுக்கருகில் அவர் இறங்குவார். இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது நன்மைகளை வைத்தவராக இறங்குவார். அவர் தலை குனிந்தால் தலையில் நீர் சொட்டும். தலையை உயர்த்தினால் முத்துப் போல் தண்ணீர் சிதறும்! அவரது மூச்சுக்காற்று அவரது பார்வையில் எட்டும் தூரம் வரை செல்லும். மூச்சுக் காற்று படுகின்ற எந்தக் காபிரும் சாகாமல் இருப்பதில்லை. பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள். 'லுத்' (பைத்துல் முகத்தஸின் அருகிலுள்ள ஊர்) எனும் வாசலில் வைத்து அவனைக் கொல்வார்கள் என்றும் நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம் ஆன் (ரலி) நூல்: திர்மிதி)
இந்தப் பொய்யர்கள் மூலம் இவற்றில் எதுவும் நிறைவேறவில்லை. (ஈஸா (அலை) அவர்கள் தஜ்ஜாலைக் கொன்ற பின் ஏற்படக்கூடிய நிகழ்ச்சிகளை யஃஜுஜ் மஃஜுஜ் பற்றிக் கூறும் போது குறிப்பிட்டுள்ளோம். அதையும் பார்த்துக் கொள்க) ஈஸா (அலை) மரணித்து சில காலத்தில் யுகமுடிவு நாள் வந்து விடும் எனவும் நபி (ஸல்) கூறியுள்ளனர்.
யுகமுடிவு நாளின் மிக நெருக்கத்தில் ஏற்படவுள்ள நிகழ்ச்சிகளில் ஈஸா (அலை) அவர்களின் வருகையும் ஒன்றாகும் என்பதை முஸ்லிம்கள் நம்பியாக வேண்டும்.
Thanks: ADIRAI THAMEEM /[TAFAREG]

No comments: