Saturday, March 14, 2009

தொழுகையில் ஓதவேண்டிய துஆக்கள்!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
எந்த ஒரு அமலைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் காட்டித் தந்த வழியில் செய்ய வேண்டும். மேலும் மேலும் நபி صلى الله عليه وسلم அவர்கள் முஸ்லிம்களுக்கு 'என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்' என்று தொழுகையின் முறை குறித்து வழிகாட்டிச் சென்று இருக்கிறார்கள். எனவே இஸ்லாத்தின் இன்றியமையாத கடமையாகிய தொழுகையையும் நபி (ஸல்) காட்டித் தந்த வழியே நாமும் தொழ வேண்டும். அந்த அடிப்படையில் தொழுகையில் ஓதக் கூடிய அனைத்து துஆக்களையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவைகளையே ஓதி தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.
தொழுகையில் ஓத வேண்டிய துஆக்கள்:
தக்பீர் கட்டியவுடன் ஓத வேண்டிய துஆ: -'அல்லாஹூம்ம பாஇத் பைனீ வ பைன க(த்)தாயாய கமாபாஅத்த பைனல் மஷ்ரிகி வல் மஃரிபி அல்லாஹூம்ம நக்கினீ மின் க(த்)தாயாய கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளூ மினித் தனஸி அல்லாஹூம் மஃக் ஸில்னீ மின்கதாயாய பில் மாயி வஸ் ஸல்ஜி வல் பரத்' .
பொருள்: இறைவனே! எனக்கும் என்னுடைய தவறுகளுக்கும் மத்தியில் இடைவெளி ஏற்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் மத்தியில் நீ இடைவெளி ஏற்படுத்தியது போன்று! இறைவனே! என் தவறுகளை விட்டும் என்னை தூய்மைப் படுத்துவாயாக! வெள்ளை ஆடையை அழுக்கில் இருந்து தூய்மைப்படுத்துவது போன்று! இறைவனே! தண்ணீர், பனி மற்றும் பனிக்கட்டி கொண்டு என்னைக் கழுவி என் குற்றங்களை போக்குவாயாக!
விரும்பினால் மேற்கூறிய துஆவிற்கு பதிலாக பின்வரும் துஆவை ஓதலாம். 'ஸூப்ஹான கல்லாஹூம்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக வலா இலாஹ ஃகைருக'பொருள்: 'இறைவனே! உன்னைப் புகழ்வதுடன் துதிக்கிறேன். உனது திருப்பெயர் அருட்பேறுடையது. உனது ஆற்றல் மிகவும் உயர்ந்தது. உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை'.
ருகூவில் ஓதக் கூடிய துஆக்கள்: -'ஸூப்ஹான ரப்பியல் அழீம்' (இதை மூன்று முறை அல்லது அதற்கு அதிகமாக ஓதுவது சிறந்தது)பொருள் : 'மகத்தான இன் இறைவன் பரிசுத்தமானவன்'. அத்துடன் பின்வரும் துஆவையும் ஓதுவது விரும்பத்தக்கது. 'ஸூப்ஹான கல்லாஹூம்ம ரப்பனா வபிஹம்திக்க அல்லாஹூம்மஃக்பிர்லீ'.
பொருள்: 'யா அல்லாஹ்! என் அதிபதியே! உன்னைப் புகழ்வதுடன் உன்னைத் தூயவன் என்று துதிக்கிறேன். யா அல்லாஹ் என்னை மன்னிப்பாயாக!'.
ருகூவில் இருந்து எழும் போது ஓத வேண்டிய துஆ: -'ஸமிஅல்லாஹூ லிமன் ஹமிதா(ஹ்).
பொருள்: 'தன்னைப் புகழ்வதை அல்லாஹ் கேட்டுக் கொண்டான்'.
இமாமைப் பின்பற்றித் தொழுபவர், 'ஸமி அல்லாஹூ லிமன் ஹமிதா' என்பதற்குப் பதிலாக பின் வரும் துஆவை ஓத வேண்டும். 'ரப்பனா வல(க்)கல் ஹம்து'.
பொருள்: 'எங்கள் இறைவனே! உனக்கே எல்லாப் புகழும்!
'ருகூவில் இருந்து ஒழுந்து நேராக நின்றதும் ஓத வேண்டிய துஆ:
اللهم ربنا لك الحمد ملء السماوات وملء الأرض وملء ما شئت من شيء بعد . 'அல்லாஹும்ம றப்பனா லகல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வமில்அல் அர்ழி வமில்அ மா ஷிஃத மின் ஷைஇன் பஃது'.
பொருள்: இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே! வானங்கள் நிறைய, பூமி நிறைய, இவையன்றி நீ எதையெல்லாம் நாடுகிறாயோ அவை நிறைய உனக்கே புகழ் அனைத்தும்'
'ஜமாஅத் தொழுகையில் இமாமைப் பினபற்றித் தொழுபவர் இந்த துஆவை ஓதுவதற்கு இயலவில்லையெனில், 'ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறினால் போதுமானது.
ஸூஜூது செய்யும் போது ஓத வேண்டிய துஆ: -ஸூப்ஹான ரப்பியல் அஃலா (இதை மூன்று முறை அல்லது அதற்கு அதிகமாக ஓதுவது சிறந்தது)பொருள்: உயர்வான என் இறைவன் தூயவன்'. அத்துடன் பின்வரும் துஆவையும் ஓதுவது விரும்பத்தக்கது:-ஸூப்ஹான கல்லாஹூம்ம ரப்பனா வபிஹம்திக்க அல்லாஹூம்மஃபிர்லீ.
பொருள்: 'யா அல்லாஹ்! என் அதிபதியே! உன்னைப் புகழ்வதுடன் உன்னைத் தூயவன் என்று துதிக்கிறேன். யா அல்லாஹ் என்னை மன்னிப்பாயாக!
'இரண்டு சஜ்தாக்களுக்கும் இடையிலான அமர்வில் ஓத வேண்டிய துஆ: -'ரப்பிஃக்பிர்லீ வர்ஹம்னீ வஹ்தினீ வர்ஸூக்னீ வஜ்புர்னீ வஆஃபினீ.
'பொருள்: 'என் இரட்சகனே! என்னை மன்னித்தருள்வாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு நேர் வழிகாட்டுவாயாக! எனக்கு ரிஸ்க் வழங்குவாயாக! எனக்கு ஆறுதல் அளிப்பாயாக! எனக்கு நிவாரணம் அளிப்பாயாக!
'சிறிய மற்றும் பெரிய அமர்வில் ஓத வேண்டிய துஆக்கள்: -(இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது ரக்அத்தின் அமர்வுகளில் ஓத வேண்டிய துஆக்கள்).
'அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபகரகாதுஹூ அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹூ வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ'.
பொருள்: காணிக்கைகள் வணக்கங்கள் மற்றும் நற்பணிகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். நபியே! அமைதியும் அல்லாஹ்வின் கருணையும் அருட்பேருகளும் உங்கள் மீது உண்டாகட்டும். எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் அமைதி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மது நபி (ஸல்) அல்லாஹ்வின் அடியாரும் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் சாட்சியம் கூறுகிறேன்.
'மூன்று அல்லது நான்கு ரக்அத் தொழுகை தொழுவதாக இருந்தால் அத்தஹிய்யாத்து ஓதிய பிறகு எழுந்து நின்று மூன்றாவது அல்லது நான்காவது ரக்அத்துக்களை தொழுது விட்டு பின்னர் கடைசி இருப்பில் பின்வரும் துஆக்களை ஓத வேண்டும். இரண்டு ரக்அத்துகள் மட்டும் என்றால் அத்தஹிய்யாத்துக்குப் பிறகு தொடர்ந்து இந்த துஆக்களை ஓத வேண்டும்.
அத்தஹிய்யாத்துக்குப் பிறகு ஓத வேண்டிய ஸலவாத்து: -'அல்லாஹூம்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹூம்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்'.
பொருள்: 'யாஅல்லாஹ்! முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழிவந்தவர்கள் மீதும் கருணை பொழிவாயாக! இப்ராஹீம் (அலை) மீதும் அவர்களின் வழிவந்தவர்கள் மீதும் நீ கருணை பொழிந்தது போன்று. நிச்சயமாக நீ புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன். அதுபோல முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழிவந்தவர்கள் மீதும் அருட்பேருகள் பொழிவாயாக! இப்ராஹீம் (அலை) மீதும் அவர்களின் வழிவந்தவர்கள் மீதும் நீ அருட்பேருகள் பொழிந்தது போன்று. நிச்சயமாக நீ புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன்'.
ஸலவாத்திற்குப் பிறகு ஓதவேண்டிய துஆ: 'அல்லாஹூம்ம இன்னீ அஊதுபிக மின் அதாபி ஜஹன்னம வமின் அதாபில் கப்ரி வமின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்தி வமின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்'.
பொருள்: 'யா அல்லாஹ் நரகத்தின் வேதனையில் இருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் வாழ்க்கை மற்றும் மரணத்தின் குழப்பத்தில் இருந்தும் தஜ்ஜாலின் குழப்பத்தில் இருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்'இதன் பிறகு இம்மை மற்றும் மறுமை நலன்களில் விரும்பிய துஆக்களை கேட்கலாம்.
நன்றி: suvanathendral.com

No comments: