Tuesday, February 3, 2009

அபூபக்ரும்,ஹம்ஸாவும் நபிக்கு என்ன உறவு?

- எழுதியவர் அபூ முஹை
இரத்த பந்தத்தால் ஏற்படும் உறவுகளில் திருமணம் செய்து கொள்ள எந்ததெந்த உறவு முறைகளெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளதோ, அதே திருமண உறவு முறைகள் பால்குடி உறவுகளிலும் இஸ்லாம் தடை செய்திருக்கிறது."உங்களுக்கு பாலூட்டிய செவிலித் தாய்மார்களையும்" (நீங்கள் மணப்பது விலக்கப்பட்டுள்ளது.)
திருமணம் செய்வதற்குத் தடை செய்யப்படும் இரத்த சம்பந்தப்பட்ட உறவுகள், பால்குடி உறவுகள் பற்றியும் முஸ்லிம்கள் நன்கு அறிவார்கள். என்றாலும், இஸ்லாத்தை விமர்சிக்கும் மேதகு நண்பர்களுக்கு இது பற்றி அரிச்சுவடி கூட தெரியாமல் விமர்சித்திருக்கிறார்கள். மணமுடிக்கத் தடை செய்யப்பட்ட உறவுகள் பற்றி மேலும் வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம், முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவார்கள் என்று திருக்குர்ஆன் (003:103, 049:010) வசனங்கள் கூறுகிறது.
இனம், நிறம், மொழி, நாடு என்று பகுப்பில்லாமல் முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் மார்க்க சகோதரர்கள் என்று இஸ்லாம் பிரகடனம் செய்கிறது.இந்த சகோதரத்துவம் இரத்தம் பந்தம், அல்லது பால்குடி சம்பந்தமான உறவு முறைகள் அல்ல. ஒரே மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் உலக முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். இஸ்லாம் யார் யாருக்கிடையில் திருமண உறவை தடை செய்திருக்கிறதோ அந்த உறவுகள் தவிர, மார்க்க சகோதரர்கள் என்பது திருமணத்திற்கு ஒரு தடை இல்லை. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு பெண் கொடுப்பதோ, பெண் எடுப்பதோ தடை செய்யப்பட்டதல்ல. என்பதை புரிந்து கொண்டிருந்தால், அறியாமல் தவறாக விளங்கிய இரு நபிமொழிகளிலும் ஏற்படுத்திய முரண்பாடு அடிபட்டுப் போகும். நண்பர்கள் இரண்டு நபிமொழிகளை புரிவதில் இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த நபிமொழிகளைப் பார்ப்போம்.
நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) "நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!" என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்" என்று கூறினார்கள். (புகாரி, 5081)
நண்பர்கள் வைத்த ஆங்கில மொழியாக்கமும், அதன் சுட்டியும்,
Narrated 'Ursa:The Prophet asked Abu Bakr for 'Aisha's hand in marriage. Abu Bakr said "But I am your brother." The Prophet said, "You are my brother in Allah's religion and His Book, but she (Aisha) is lawful for me to marry. "http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html#007.062.018
நபி (ஸல்) அவர்கள், தமது தோழர் அபூ பக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களை பெண் கேட்கிறார்கள். மார்க்க ரீதியாக சகோதரர்களாகி விட்டதால் "நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!" என்று அபூ பக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அதாவது, நபி (ஸல்) அவர்களும், அபூ பக்ர் (ரலி) அவர்களும் மார்க்க சகோதரர்களாகி விட்டதால் தமது மகள் ஆயிஷாவை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்வது தடை செய்யப்பட்டது என்று கருதியிருந்த அபூ பக்ர் (ரலி) அவர்கள் இங்கே தமது கருத்தைத் தெரிவிக்கிறார்.
நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள்" என்று கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள், அபூ பக்ர் (ரலி) அவர்கள் இருவருக்கும் இரத்த பந்த உறவு இல்லை. பால்குடி உறவும் இல்லை என்பதால் மார்க்க சகோதரர்கள் என்ற சகோதரத்துவம் திருமண உறவுக்குத் தடை இல்லை என்று அபூ பக்ர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் விளக்கம் தருகிறார்கள். இதிலிருந்து ஒரு மார்க்க சட்ட விளக்கம் முஸ்லிம்களுக்குக் கிடைக்கிறது என்பது தனி விஷயம்.
இதற்கு முரணாக நண்பர்கள் வைக்கும் நபிமொழி.
நபி(ஸல்) அவர்களிடம் 'தாங்கள் ஹம்ஸா(ரலி) அவர்களின் புதல்வியை மணந்துகொள்ளக் கூடாதா?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'அவள் பால்குடி உறவு முறையினால் எனக்குச் சகோதரர் மகள் ஆவாள்" என்று கூறினார்கள. (புகாரி,5100)
நண்பர்கள் வைத்த ஆங்கில மொழியாக்கமும், அதன் சுட்டியும்,
Narrated Ibn 'Abbas:It was said to the Prophet, "Won't you marry the daughter of Hamza? " He said, "She is my foster niece (brother's daughter)http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html#007.062.037நண்பர்கள் - புகாரி, 5081, 5100 ஆகிய - இரு நபிமொழிகளையும் முரணாக விளங்கி, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது அவதூறு மோசடியை சுமத்தியிருக்கிறார்கள். ஏமாற்றும் இரட்டை வேடக்காரர் என்றும் இறைத்தூதர் (ஸல்) மீது பொய்யான களங்கத்தை வீசியிருக்கிறார்கள். அவர்களின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை என்பதை வரலாற்றிலிருந்து விளங்கலாம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இன்னொரு நபிமொழியிலிருந்து… நபி (ஸல்) அவர்கள், ஹம்ஸா (ரலி) அவர்களுடைய மகளின் விஷயத்தில், "அவள் எனக்கு ஹலாலாக (மணந்து கொள்ள அனுமதிக்கப்படவளாக) ஆக மாட்டாள். (ஏனெனில்) இரத்த பந்தத்தின் காரணத்தால் எவையெல்லாம் ஹராம் (தடை செய்யப்பட்டதாக) ஆகுமோ அவையெல்லாம் (செவிலித் தாயிடம்) பால்குடிப்பதாலும் ஹராம் ஆகும். அவள் என் பால்குடிச் சகோதரரின் மகள் ஆவாள்" என்று கூறினார்கள். (புகாரி, 2645) புகாரி, 2645, 5100
இரு நபிமொழிகளில் இடம்பெறும் ஹம்ஸா பின் முத்தலிப் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை என்ற வரலாறு தெரியாமல் பிதற்றியிருக்கிறார்கள். வரலாறு இதுதான்…"ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை ஆவார். இது இரத்த உறவு இதன்படி ஹம்ஸா (ரலி) அவர்களின் மகளை நபி (ஸல்) அவர்கள் மணப்பதில் தடையில்லை. எனினும் ஹம்ஸா (ரலி) அவர்களும், நபி (ஸல்) அவர்களும் ஒரே செவிலித் தாயிடம் சிறு வயதில் பால் அருந்தியுள்ளனர். அபூலஹபின் முன்னாள் அடிமைப் பெண்ணான ஸுவைபா (ரலி) அவர்களே அந்த செவிலித் தாய். இதன்படி நபி (ஸல்) அவர்களும் ஹம்ஸா (ரலி) அவர்களும் சகோதரர்கள் ஆவர். எனவே ஹம்ஸாவின் மகளை தாம் மணந்து கொள்ள முடியாது நபி (ஸல்) அவர்கள் விளக்கினார்கள். (உம்தத்துல் காரீ) பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா, மக்களை மணமுடிப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது. இந்த உறவில் மணமுடிக்கும் இருவர் சிறு வயதில் ஒரு செவிலித் தாயிடம் பால்குடித்திருந்தால் இருவரும் சகோதரர், சகோதரியாகக் கருதப்படுவார்கள். அவர்களிடையே திருமணம் உறவு தடை செய்யப்பட்டது. நபி (ஸல்) அவர்களுக்கு ஹம்ஸா (ரலி) அவர்கள் இரத்த பந்த உறவு முறையில் பெரிய தந்தை, அதனால் ஹம்ஸா (ரலி) அவர்களின் மகளை நபி (ஸல்) அவர்கள் மணமுடிப்பதில் தடையில்லை என்றாலும் ஹம்ஸா (ரலி) அவர்களும், நபி (ஸல்) அவர்களும் ஒரு செவித் தாயிடம் சிறு வயதில் பால்குடித்திருக்கிறார்கள் அதனால் இருவருக்கும் சகோதரர்கள். சகோதரரின் மகளை மணமுடிக்கக் கூடாது என்ற அடிப்படையில் பால்குடி சகோதரரின் மகளை மணமுடிப்பது ஆகுமானதல்ல. அபூ பக்ர் (ரலி) மார்க்க ரீதியாக, நபி (ஸல்) அவர்களுக்குச் சகோதரர் ஆவார்.ஹம்ஸா (ரலி) பால்குடி உறவு முறையில் நபி (ஸல்) அவர்களுக்குச் சகோதரர் ஆவார். என்று… நபிமொழிகளில் உள்ளதை உள்ளபடி விளங்கினாலே போதும், அபூ பக்ர் (ரலி) மகளை நபியவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.ஹம்ஸா (ரலி) மகளை நபியவர்கள் மணமுடிக்க விலக்கப்பட்டது.5081, 5100 இரு நபிமொழிகளும் முஸ்லிம் சமுதாயத்துக்கு இரு சட்ட விளக்கங்களை முன் வைக்கிறது. மற்றபடி ஏமாற்றுவது, மோசடி செய்வது இறைத்தூதர்களுக்கு அழகல்ல. நபி முஹம்மது அவர்களின் மீது இறைவன் சாந்தியை வழங்குவனாக!
நன்றி: அபூ முஹை

No comments: