Monday, February 16, 2009

நபிமொழி

அபூஉமாமா என்ற இயாஸ் இப்னு ஃதஹ்லபா அல்ஹாரிஸி (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''தன் சத்தியத்தின் மூலம் ஒருவர் ஒரு முஸ்லிமின் உரிமையைப் பறித்தால், அல்லாஹ் அவருக்கு நரகத்தை அவசியமாக்கி விட்டான். மேலும் அவருக்கு சொர்க்கத்தை தடை செய்து விட்டான் என்று நபி(ஸல்) கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே! (அந்த உரிமை) சிறிய அளவிலாக இருந்தால்...? என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். ''அராக்'' எனும் கருவேல மரத்தின் ஒரு குச்சியாக இருந்தாலும் தான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அப்துல்லா இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''பெரும் பாவங்கள் என்பது, அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோரை நோவினை செய்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவையாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
மற்றொரு அறிவிப்பில் (கீழ்கண்டவாறு) உள்ளது.
ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''இறைத்தூதர் அவர்களே! பெரும் பாவங்கள் என்ன?'' என்று கேட்டார். ''அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்'' என்று நபி ( ஸல் ) கூறினார்கள். ''பின்பு எது?'' என்று கேட்டார் ''பொய் சத்தியம் செய்தல்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். ''பொய் சத்தியம் செய்வது என்றால் என்ன?'' என்று நான் கேட்டேன். ''ஒரு முஸ்லிமின் சொத்தை பொய் சத்தியம் செய்து அபகரித்தல்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூகதாதா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''வியாபாரத்தில் அதிக அளவில் சத்தியம் செய்வதை உங்களுக்கு எச்சரிக்கிறேன். ஏன் எனில், பொருளை(விற்பனை) செல்லுபடியாக்கும். பின்பு அதனை அழித்து விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''அல்லாஹ்வின் பெயரால் ஒருவர் பாதுகாப்புக் கோரினால், அவருக்கு பாதுகாப்புக் கொடுங்கள். அல்லாஹ்வின் பெயரால் ஒருவர் கேட்டால், அவருக்குக் கொடுங்கள். உங்களை ஒருவர் அழைத்தால், அவருக்கு பதில் கூறுங்கள். உங்களுக்கு நல்லதை ஒருவர் செய்தால் அவருக்கு (நன்றி கூறும் முகமாக) பகரம் காட்டுங்கள். அவருக்கு நீங்கள் பகரம் செய்வதற்கு எதையும் நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், அவருக்குப் பரிகாரம் செய்து விட்டோம் என, நீங்கள் கருதும் வரை அவருக்காக துஆச் செய்யுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அபூதாவூது, நஸயீ)(ரியாளுஸ்ஸாலிஹீன்)
ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''உம்மு ஸாயிப் (ரலி) (அல்லது உம்முல் முஸய்யிப்(ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்த நபி(ஸல்) அவர்கள், ''உம்மு ஸாயிபே! உமக்கு என்ன? ஏன் துடிக்கிறீர்'' என்று கேட்டார்கள். ''காய்ச்சல்தான். அதிலே அல்லாஹ் பரக்கத் செய்யாதிருப்பானாக'' என்று உம்மு ஸாயிப் (ரலி) கூறினார். ''காய்ச்சலைத் திட்டாதே! நெருப்பு உலை, இரும்பின் துருவை நீக்குவது போல், காய்ச்சல் மனிதனின் குற்றங்களை நீக்கி விடும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)

No comments: