Wednesday, February 4, 2009

உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''இறைவழியில் பயன்படும் குதிரை ஒன்றை (ஒருவருக்கு) அன்பளிப்பாக வழங்கினேன். தன்னிடம் அதை வைத்திருந்தவர் அதை வீணாக்கி விட்டார். எனவே, அதை நான் விலைக்கு வாங்க விரும்பினேன். அதை அவர் குறைவான விலைக்கு விற்பார் என எண்ணினேன். நபி(ஸல்) அவர்களிடம் (இதுபற்றி) கேட்டேன். ''அதை நீ விலைக்கு வாங்காதே! அதை உனக்கு அவர் ஒரு திர்ஹமிற்கு கொடுத்தாலும் உன் தர்மத்தை திரும்பப் பெறாதே! தன் தர்மத்தை திரும்பப் பெறுபவன், தன் வாந்தியை திரும்ப உண்பவன் போலாவான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''அழித்து விடும் ஏழு (குற்றங்)களைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! அவை எவை?'' என்று (நபித்தோழர்கள்) கேட்டார்கள்.
1) அல்லாஹ்விற்கு இணை வைத்தல்,
2) சூன்யம் செய்தல்,
3) நியாயமின்றி அல்லாஹ் தடை செய்துள்ள உயிரைக் கொலை செய்தல்,
4) வட்டியை உண்ணுதல்,
5) அனாதையின் சொத்தை உண்ணுதல்,
6) போர் நாளில் புறமுதுகு காட்டி ஓடுதல்,
7) அப்பாவியும், இறை நம்பிக்கையும் உள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது (ஆகியவைதான்)'' என்று நபி (ஸல்) பதில் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''வட்டியை உண்பவனையும், உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்து விட்டார்கள்.'' (முஸ்லிம்)(ரியாளுஸ்ஸாலிஹீன்)

No comments: