Tuesday, April 15, 2008

இறைத் தூதர் இயேசு நாதர்

அன்பின் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே!
உங்கள் வேத நூலான பைபிளின் வசனங்களை சற்று நிதானத்தோடும், பொறுமையோடும், ஆராய்ச்சிக் கண்னோட்டத்தோடும் வாசிப்பீர்களாக. அப்போது நாம் சொல்ல வருகின்ற விடயம் தெளிவாக உங்களுக்குப் புரியும். ஏனென்றால், திருச்சபைகளின் போதனைக்கும், கிறிஸ்தவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கும் பைபிள் முழுக்க முழுக்க மாறுபடுகின்றன என்பது ஆச்சரியமாய் இருக்கின்றது.
இறைவன் தனது தூதர்களில் சிலரை குறிப்பிட்ட சில சமூகத்தார்களுக்கு மட்டும் தூதர்களாக அனுப்பியுள்ளான். அதே தொடரில் இஸ்ரவேல் சமூகத்தாருக்கு மட்டும் அனுப்பப்பட்ட இறைத்தூதர்தான் இயேசு எனப்படும் ஈஸா நபி அவர்கள்: -
‘….இஸ்ராயீலின் மக்களுக்கு (இயேசுவை) ஒரு தூதராகவும் (அனுப்புவான் என்றும் கூறினான்)’- அல் குர்ஆன்(3:49)
இந்த அல் குர்ஆன் வசனத்தினை பின் வரும் பைபிள் வசனங்கள் தெள்ளத் தெளிவாக உண்மைப் படுத்துகின்றன. இதோ உங்கள் கவனத்திற்கு: -
‘காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல வென்றார்.’ - மத்தேயு (15:24)
‘இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.’ - மாற்கு (12:29)
அவ்வாறே மோசேயும் இஸ்ரவேலர்களுக்கு மாத்திரம் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதரே என்பதற்கான சான்றுகள்: -
‘நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்,…’ - லேவியராகமம் (11:2)
‘நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்,…’ -எசேக்கியேல் (24:21)
எனவே, இந்த வசனங்கள் அனைத்தும் இயேசு நாதர் இஸ்ரவேலர் சமுதாயத்திற்கு மட்டும் கர்த்தரால் அனுப்பப்பட்ட தூதர் என்பதை பறை சாற்றுகின்றது. அதே நேரம் கர்த்தராகிய அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மது நபியவர்கள் தான் முழுமனித மனித சமுதாயத்திற்கும் தூதராகவும், அருட்கொடையாகவும் அனுப்பப்பட்டார்கள் என்பது பின்வரும் வசனம் மூலம் தெளிவாகின்றது.
‘(நபியே), உம்மை அகிலத்தாருக்கு ஓர்அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை’ - அல் குர்ஆன்(21:107).
ஆக, இயேசு நாதர் கர்த்தரின் மகன் அல்ல, இறைத்தூரரே என்பதுதான் உண்மை. இயேசு பற்றி அல் குர்ஆன் கூறும் அனைத்து செய்திகளையும், அது உண்மைதானா என்பதனை உங்கள் பைபிளிடமே நீங்கள் கேட்டுத்தெறிந்து கொள்ளலாம். எனவே நீங்களே உண்மைக்கு சான்றாய் இருந்து கொண்டு, ஏன் சத்தியத்தைப் பின்பற்ற மறுக்கறீர்கள்? நிதானமாக சில வினாடிகள் சிந்தித்துப் பாருங்கள். சத்தியத்தை உணர உங்கள் சிந்தனைக்கு இடம் கொடுங்கள். மரணம் எமைத் துரத்துகின்றது. உடலை விட்டு நம் உயிர் பிரியுமுன் உண்மையை ஏற்றுக் கொள்வோம்.
சத்தியத்தை ஏற்க நாம் ஏன் மறுக்கிறோம் தெரியுமா? ஆம், நம் சமுதாயம். நம் குடும்பத்தினர் . எம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது மட்டும் தான் விடையே தவிர வேறில்லை.
உண்மை எமையழைக்கின்றது - நாமோ, நம் குடும்பத்தைத் திரும்பிப் பார்க்கிறோம், நம் சமுதாயம் எமைத்தடுத்து நிறுத்துகிறது. ஆனால் அந்த சமுதாயத்தினால் நாளை மறுமையில் நமக்கு ஒரு துளியளவு நன்மையாவது செய்து விட முடியுமா? என்றால் நிச்சயமாக இல்லவே இல்லை.
ஆகவே அன்பானவர்களே! சத்தியம் தெளிவாகின்ற போது, அதனைத் தட்டிக் கழிக்காமல் உணர்ந்து ஏற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும்.
கர்த்தராகிய அல்லாஹ் இறுதி இறைவேதத்தில் கூறுகிறார்: -
‘சத்தியம் வந்தது, அசத்தியம் ஒழிந்தது, நிச்சம் அசத்தியம் ஒழிந்தே தீரும்’ (இறுதி வேதம் 17:81)

No comments: