Thursday, April 3, 2008

இறைவனுக்கே மகனா?





இயேசு தன்னைக் குறித்து புதிய ஏற்பாட்டில் மட்டும் கிட்டத்தட்ட (81) க்கும் அதிகமான இடங்களில் தான் மனித குமாரன் என்று கூறுகின்ற அதே நேரம், இயேசுவை இறைவனின் குமாரன் என்று நம்பி, அதைப் பிரச்சாரம் செய்யக் கூடிய கிறிஸ்தவர்கள், இயேசுவைத் தம் குமாரர் என்று கர்த்தர் கூறுகிறார் என கீழ் வரும் பைபிளின் கூற்றை பிரதானமான ஆதாரமாக முன் வைக்கின்றனர்.

"அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி 'இவர் என்னுடைய நேச குமாரன்' இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது". – (மத்தேயு 3:17)

இந்த வசனத்தை அடிப்படையாக வைத்து இயேசுவை இறைமகன் என்று நம்பக்கூடிய கிறிஸ்தவர்கள், அதே பைபிள் இன்னும் பலரை இறைமகன் என்று கூறுவதைக் கண்டு கொள்வதே இல்லை!

- ''இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்ட புத்திரன்... என்று கர்த்தர் சென்னார்'. - (யாத்திராகமம் 4:22)

முந்தைய வசனத்தை விட இது தெளிவான வசனமாகும். இயேசுவைப் பற்றிக் கூறும் வசனத்தில் கர்த்தர் இவ்வாறு கூறியதாகக் காணப்படவில்லை. ஒரு அசரீரியான சப்தம் தான் இவ்வாறு கூறியதாகக் காணப்படுகின்றது. அது கடவுளின் சப்தமாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை, பிசாசு கூட இவ்வாறு விளையாடியிருக்க முடியும். முன்பொரு முறை பிசாசு இயேசுவை சோதித்ததாக மத்தேயு (4:9,10) வசனங்கள் கூறுகின்றன. எனவே இயேசுவை விட இஸ்ரவேல்தாம் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடப்பட அதிகம் தகுதி பெறுகிறார்
அதுமட்டுமல்ல, பவுல் எனப்படும் சவுலின் சொந்தக் கற்பனை தான் இக்கூற்று என்பதனை கீழ் வரும் வசனங்கள் குறிப்பிடுகின்றன.

'சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சில நாள் இருந்து, தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்'. - (அப்போஸ்தலர் 9:19,20)

உங்கள் சிந்தனைக்கு பைபிளில் இன்னும் இறைமகன்கள் (?) பட்டியல் தொடர்கின்றது
"நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்'.

(சங்கீதம் 2:7) என்று கர்த்தர் தாவீதை நோக்கிக் கூறியிருக்கிறார்.
"அவன் (சாலமோன்) எனக்குக் குமாரனாய் இருப்பான். நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்". - (முதலாம் நாளாகமம் 22:10)
'இஸ்ரவேலுக்கு நான் பிதாவாக இருக்கிறேன். எப்பிராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான்'. - (எரேமியா 31:9)
'நான் அவனுக்கு (சாமுவேலுக்கு)ப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான'. - (இரண்டாம் சாமுவேல் 7:14)
'நான் அவனுக்கு (தாவீதுக்கு)ப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக் குமாரனாய் இருப்பான்'. - (முதலாம் நாளர்கமம் 17:13)


ஃ இத்தனை தேவ குமாரர்களிருக்க இயேசுவை மட்டும் இறைவனின் மகன் என்று கூறுவது பைபிளின் போதனைக்கே முரணாகாதா?? சிந்தித்து உணர்வீர்களாக.

அதே நேரம் 'இறைமகன்' எனும் அடைமொழி 'கடவுளின் புத்திரர்கள்' எனும் கருத்தில் பைபிளில் பயன் படுத்தப்படவில்லை, மாறாக 'இறைவனின் அடியார்கள்' எனும் கருத்திலேயே பயன் படுத்தப் பட்டுள்ளது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இயேசு 'இறைமகன்' எனக் கூறப்படுவதால் இயேசுவை அழைத்து உதவி தேடக்கூடிய கிறிஸ்தவர்கள் அதே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள மற்றவர்களை அவ்வாறு அழைப்பதில்லையே அது ஏன்? எல்லோரும் சத்தியத்தை தேட வேண்டும். சத்தியம் மட்டும்தான் பரலோக ஜீவிதத்தில் நம்மை சந்தோஷமடையச் செய்யும்!

சகோதரர்களே! எமது நோக்கம் உங்களை நோவினைப்படுத்த வேண்டும் என்பது எள்ளலவு கூட கிடையாது. மறாக சத்தியத்தை உணர்ந்து தெளிவோடு எதிலும் செயலாற்ற வேண்டும் என்பது எமது நோக்கமாகும்.

மேலும் உங்கள் சிந்தனைக்கு இன்னும் பல இறைமக்கள் தொடர் வருமாறு:
பார்க்க : (உபாகமம் 14:1),(சங்கீதம் 68:5),(மத்தேயு 6:14-15, 5:9, 5:45, 7:11 , 23:9), (யோவான் 1:12), (லூக்கா 6:35), (அப்போஸ்தலர் 17:29), (ரோமர் 8:16), (இரண்டாம் கொரிந்தியர் 6:18)

சத்தியம் வந்தது, அசத்தியம் ஒழிந்தது, நிச்சயம் அசத்தியம் ஒழிந்தே தீரும்.


No comments: