Saturday, November 10, 2012

வடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்பட்ட 22வது ஆண்டு நிறைவு (1)

 
டி.பி.எஸ்.ஜெயராஜ்

jaffna muslim-1ஸ்ரீலங்காவில் தமிழ் - முஸ்லிம் உறவுகளின் சரித்திரத்தில் இடம்பெற்ற கொடிய மனிதாபிமானமற்ற அத்தியாயத்தின் 22வது ஆண்டு நிறைவை வரலாறு கடந்த வாரம் பதிவு செய்தது.ஒக்டோபர் 1990 ல் தமிழீழ விடுதலைப் புலிகள்( எல்.ரீ.ரீ.ஈ ), தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை வட மாகாணத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றி இனசுத்திகரிப்பு செய்த அட்டூழியமான நடவடிக்கை நடந்தேறியது. சில குறிப்பிட்ட நாட்களுக்குள் முஸ்லிம்கள் தாங்கள் பலப்பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த தங்கள் தாயகத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள்.

1990 ல் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்ட இந்த நடவடிக்கை ஒரு மனிதாபிமானமற்ற துயரம்தோய்ந்த பேரழிவாகும். துப்பாக்கி முனையில் ஒரு மக்களை, அவர்களின் பணம் மற்றும் நகைகளைப் பறித்துக்கொண்டு,அவர்கள் வாழ்ந்த இடத்தை விட்டு வேரோடு பிடுங்கி எறிந்தசெயல் வெறுக்கத் தக்கதும் மன்னிக்க முடியாததுமாகும். இந்த எழுத்தாளர் தனது முந்தைய எழுத்துக்களில் இந்த ஒட்டுமொத்த வெளியேற்றத்தையும் மற்றும் புலிகளின் சித்தாந்தத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கிக் கொண்டு அதேவேளை தங்களை மனித உரிமைகளின் காலர்கள் என இப்போது காட்ட முயலும் தமிழ் சமூக அங்கத்தவர்களின் அவமானகரமான செயலைப்பற்றி ஓரளவு கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒக்ரோபர் 15ல் சாவகச்சேரியில் உள்ளவர்களில் ஆரம்பித்து ஒக்ரோபர் 30ல் யாழ்ப்பாண நகரத்திலுள்ளவர்களின் வெளியேற்றத்துடன் முடிவுக்கு வந்தது. வடக்கு பெருநிலப்பரப்பில் முஸ்லிம்களை வெளியேற்றும் நிகழ்வு யாழ்ப்பாண நகரத்தில் ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்பு ஆரம்பித்து குடாநாட்டிலிருந்து முஸ்லிம்களை சுத்தப்படுத்திய சில நாட்களின் பின்னர் நிறைவெய்தியது.

வடக்கு முஸ்லிம்களில் பெருந்தொகையானவர்கள் அப்போது மன்னாரில் வசித்து வந்தார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். யாழ்ப்பாணம் மற்றும் மன்னாருக்கு புறமே முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம்களும்கூட வெளியேற்றப்பட்டார்கள். வவுனியால் வாழ்ந்த முஸ்லிம்கள் அதிர்ஸ்டசாலிகளாக இருந்தார்கள் ஏனெனில் அவர்கள் வாழ்ந்த கிராமங்களில் பெரும்பகுதி அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்தன. எல்.ரீ.ரீ.ஈ யினரால் வடக்கு பெரு நிலப்பரப்பிலிருந்து 50,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டார்கள். குடாநாட்டிலிலுள்ளவர்களையும் சேர்த்து 1990 ல் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 75,000 க்கு மேலிருக்கும்.

வடபகுதி முஸ்லிம்கள் அவர்களது சக தமிழர்களுக்குச் சமமான பாதிப்பை அப்போது நடைபெற்ற யுத்தத்தில் அனுபவித்தார்கள். அவர்களும் தமிழ் குடிமக்களைப்போல திவிரமான ஷெல் மற்றும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றபோது காலத்துக்கு காலம் தங்கள் வீடுகளை விட்டு வெளியெறவேண்டியிருந்தது. அவர்கள் எப்போதும் சில நாட்கள் கழித்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிடுவார்கள். ஆனால் கிழக்கு மாகாண நிலமை வித்தியாசமான ஒரு திருப்பத்தை அடைந்திருந்தது.

தமிழ் - முஸ்லிம் பகை உணர்ச்சி கிழக்கில் அதிகரித்து வந்தது. எல்.ரீ.ரீ.ஈயின் சில முஸ்லிம் அங்கத்தவர்கள் அதை கைவிடவும்,இராணுவத் தளபதி கருணா மற்றும் அரசியல் பொறுப்பாளர் கரிகாலன் என்பவர்களின் கீழிருந்த வேறு சிலர் எதிரியின் பாசறைக்கு செல்லவும் தொடங்கினார்கள். எல்.ரீ.ரீ.ஈ யிலிருந்த மற்றும் சில முஸ்லிம் அங்கத்தவர்கள் அதன் தலைமையினால் கொல்லப்பட்டார்கள். ஒரு முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு எல்.ரீ.ரீ.ஈக்குள் தலைதூக்கியிருந்தது.

மறுபக்கத்தில் அப்போதிருந்த ஐதேக அரசு மோசமான இந்த உணர்வுகளைப் பயன்படுத்தி காரியம் சாதிக்கத் தொடங்கியது. அநேக முஸ்லிம் சமூக விரோத சக்திகளை உள்ளுர் பாதுகாப்பு காவலர்களாக அரசாங்கம் நியமனம் செய்தது. இந்த பிரிவினர் பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து தமிழ் எதிர்ப்பு வன்முறைகளை தூண்டிவிடத் தொடங்கினார்கள். சில சந்தர்ப்பங்களில் சில தமிழர்களின் கொலைக்கு இந்த முஸ்லிம் உள்ளுர் பாதுகாப்பு காவலர்கள் பொறுப்பாக இருந்துள்ளார்கள். இவர்கள் தலைமை தாங்கிய கும்பல்கள் பல தமிழ் குக்கிராமங்கள் மற்றும் கிராமங்களை அழித்து நாசமாக்கின. பாதுகாப்பு படைகளின் ஒரு பிரிவினரால் அவர்களுக்கு மறைமுக ஆதரவு வழங்கப்பட்டது.

இதற்குப் பதிலடியாக எல்.ரீ.ரீ.ஈ முஸ்லிம் பொதுமக்கள்மீது கொடூரமும் பயங்கரமுமான படுகொலைகளை நடத்தியது. சம்மாந்துறை மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள்மீது தாக்குதல் நடத்தி பிராத்தனை செய்து காண்டிருந்த முஸ்லிம்களை கொலை செய்ததும், மற்றும் ஏறாவூரில் உள்ள சதாம் ஹ_சைன் மாதிரிக் கிராமத்தில் பொதுமக்களை படுகொலை செய்ததும் இதற்கான மோசமான உதாரணங்கள்.

தமிழ் - முஸ்லிம் உறவுகள் கிழக்கில் மிகவும் தாழ் நிலையை எட்டியிருந்த போதும்,வடக்கின் நிலைமைகள் அதற்கு முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. அங்கு இரு சமூகத்தினரும் தொடர்ந்தும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதற்கான ஒரு காரணம் ஒரு சிறிய அளவான முஸ்லிம்களால் பெரும்பான்மை தமிழர்களுக்கு எதுவித அச்சுறுத்தலும் இல்லாததுதான்.

சாவகச்சேரி

jaffna muslim in puttalam-1கிழக்கில் முறுகல்கள் இடம்பெற்றுவரும் வேளையில் வடக்கில் முஸ்லிம்கள் அமைதியாக வாழ்வதை கிழக்கு புலிகளால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது. கிழக்கு அரசியல் பொறுப்பாளர் கரிகாலன் தலைமையிலான தூதுக்குழுவொன்று, முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கு பிரபாகரனை இணங்கச் செய்வதற்காக வடக்குக்கு வந்தது. முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று கரிகாலன் வெளிப்படையாகவே வரும்பினார். இந்த வகையான அழுத்தங்கள் புலிகளின் உயர் பீடத்துக்கு வழங்கபட்டுக் கொண்டிருந்தவேளை சாவகச்சேரியில் ஒரு சம்பவம்; நடந்தது.

1990 செப்ரம்பர் 4 ல் எல்.ரீ.ரீ.ஈ யின் உதவியாளர்கள் என்றழைக்கப்படும் ஒரு தமிழ் குழுவினர் சாவகச்சேரி மசூதி அருகில் வைத்து சில முஸ்லிம்களுடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டார்கள். சிலர் மசூதியை தாக்கவும்கூட முயற்சித்தார்கள். முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சில இளைஞர்கள் அதில் தொடர்புபட்டிருந்த தமிழர்கள் சிலரைப் பிடித்து எல்.ரீ.ரீ.ஈயிடம் ஒப்படைத்தனர். புலிகள் அவர்களை விடுதலை செய்ததுடன் தமிழ் பெரும்பான்மையினரை கோபமூட்ட வேண்டாம் என முஸ்லிம் சிறுபான்மையினரை எச்சரிக்கையும் செய்தனர். செப்ரம்பர் 25 ந்திகதி குடாநாட்டை விட்டு வெளியேறுவதற்கு எல்.ரீ.ரீ.ஈ தனக்கு பாஸ் வழங்காததையிட்டு ஒரு முஸ்லிம் யுவா எதிர்ப்பு தெரிவித்தபோது அவர் புலி அங்கத்தவர்களால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர் காணாமல் போய்விட்டார்.

சாவகச்சேரியில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் நகரிலுள்ள டச்சு வீதியிலேயே வசித்து வந்தார்கள். எல்.ரீ.ரீ.ஈ யினர் முஸ்லிம்களின் உள்ளக வன்முறை சம்பவம் ஒன்றை விசாரிக்க வந்தவேளை அங்கு சில வாள்கள் இருப்பதை கண்டு பிடித்தார்கள். புலிகளின் விளக்கங்களின்படி இது எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்தது. முஸ்லிம்களின் வீடுகள் கடைகள் மற்றும் வியாபார நிலையங்கள் என்பனவற்றில் எல்.ரீ.ரீ.ஈ தேடுதல் நடத்தி ஒரு முன்னணி முஸ்லிம் வியாபாரிக்கு சொந்தமான கடையொன்றுக்குள் 75 வாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தது. இது ஒரு இரகசிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்பட்டது. இந்த விளக்கம் உண்மையானதாக இருந்தாலும்கூட, வெறும் 75 வாட்கள் எல்.ரீ.ரீ.ஈயினரின் துப்பாக்கிகளுக்கு எதிராக ஏதாவது பயன்தருமா?

இந்த வாட்கள் கண்டெடுத்த கடையானது, வியாபாரத்துக்காக அடிக்கடி லாரிகளை கொழும்புக்கு பயணப்படுத்தும் ஒரு முஸ்லிம் வியாபாரிக்கு சொந்தமானது என்று கண்டறியப்பட்டது. அளவுக்கு அதிகமான சித்தப்பிரமை கொண்ட எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வுப் பிரிவினர் இதில் ஏதோ பெரிய சதி இருப்பதாக சந்தேகம் கொண்டனர். இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு உபகரணங்கள்,அடிக்கடி கொழும்புக்கு பயணம் செய்யும் முஸ்லிம் வியாபாரியை நாச வேலைகளில் ஈடுபடவோ அல்லது ஒற்றனாக பணியாற்றவோ தூண்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என உணரப்பட்டது.

எனவே சாவகச்சேரி முஸ்லிம்கள் பிரதானமாக டச்சு வீதியில் வசிப்பவர்கள் 1990 ஒக்ரோபர் 15ல் வெளியேற்றப் பட்டார்கள். ஏறக்குறைய 1000 மக்கள் துப்பாக்கி முனையில் வெளியேறும்படி வற்புறுத்தப் பட்டார்கள். வடமாகணத்தின் தென்பகுதி எல்லையிலுள்ள பட்டினமான வவுனியாவுக்கு அப்பால் செல்லும்படி அவர்களிடம் கூறப்பட்டது. சாவகச்சேரி முஸ்லிம்கள் ஒக்ரோபர் 18ல் வவுனியாவுக்கு வந்தார்கள். ஒருக்கால் சாவகச்சேரி முஸ்லிம்கள் வெளியெறும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து சங்கிலி தொடர் போன்று அது நீண்டது.

இந்த வெளியேற்றத்தின் சோகம் என்னவென்றால், முஸ்லிம்கள் ஒரு ஆயுதக்குழுவின் கட்டளைக்கு அடிபணிந்து தாங்கள் பரம்பரை பரம்பரையாக குடியிருந்த பிரதேசங்களை விட்டு தப்பியோடவேண்டி இருந்ததுதான். அங்கு கோள்வி இருக்கவில்லை, எதிர்ப்புகள் இருக்கவில்லை, அதுதான் எல்.ரீ.ரீ.ஈயின் அதிகாரம் மற்றும் பயங்கரவாதம் என்பது. தவிரவும் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவும் இருந்தார்கள்.

ஐந்து வருடங்களின் பின்னர் 1995ல் தமிழர்களும் பெரும் எண்ணிக்கையில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. பின்னர் 2007 - 2009 காலப்பகுதியில் வடக்கு பெரு நிலப்பரப்பான வன்னியிலிருந்த தமிழர்கள் போர் தீவிரமடைந்ததின் காரணமாக இடத்துக்கு இடம் அலைந்து திரியவேண்டி ஏற்றபட்டது. இறுதியில் அவர்கள் முல்லைத்தீவு கடற்கரையோரமாக இருந்த ஒரு பட்டை போன்ற சிறிய துண்டுப் பகுதிக்குள் கட்டுப்படுத்தப் பட்டார்கள். ஒருவேளை இது செய்த பாவத்தின் கர்ம விதி அல்லது தர்மத்தின் கொள்கை என்றும் சிலர் சொல்லலாம்.

கரிகாலன்

எல்.ரீ.ரீ.ஈ யினால் பின்னர் தரப்பட்ட விளக்கத்தின்படி, ஒக்ரோபர் மாதம் வடக்கில் பிரசன்னமாகியிருந்த கரிகாலனின் கீழ் இயங்கிய கிழக்குப் பகுதி படைப்பிரிவே இந்த ஒட்டுமொத்த வெளியேற்றத்தை மேற்கொள்ளும் முடிவுக்கு பெருமளவில் பொறுப்பாக இருந்தனர் என்று தெரியவந்தது. முக்கியமாக இது கிழக்கு வாழ் முஸ்லிம்களுக்கு ஒருவகையில் எச்சரிக்கையாக வழங்கப்பட்ட பதிலடி என்றே சித்தரிக்கப்பட்டது. இந்த முடிவு மிகைப் படுத்தப்பட்ட அச்சுறுத்தலுக்கான கருத்தை உருவாக்குவதில் மேலும் செல்வாக்கு செலுத்தியது. முஸ்லிம்கள், தமிழ் சமூகத்துக்கு குழிபறிக்கும் முக்கிய ஐந்தாம் படையாளர்களாக பார்க்கப்பட்டது அப்பட்டமான ஒரு இனவாத மனோநிலையாகும். இந்தப் பின்னணியை கருத்தில் கொண்டுதான் வெளியேற்ற நடைமுறை இடம்பெற்றது.

1981ம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி மன்னார் மாவட்ட சனத்தொகையின் 26 விகிதமானவர்கள் முஸ்லிம்கள். தள்ளாடி தரைப் பாலத்தினூடாக பெரு நிலப்பரப்பை இணைக்கும் மன்னார் தீவில் அவர்களது சனத்தொகை 46 விகிதமாகும். மன்னார் தீவிலுள்ள முதன்மையானதும் செல்வச் செழிப்பானதுமான முஸ்லிம் கிராமம் எருக்கலம்பிட்டியாகும். கிட்டத்தட்ட 300 வரையான புலி அங்கத்தவர்கள் 1990 ஒக்ரோபர் 21ல் எருக்கலம்பிட்டியை சுற்றி வளைத்து முஸ்லிம்களின் பணம் நகை மற்றும் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் என்பனவற்றை கொள்ளையடித்தனர். ஏறக்குறைய 800 - 850 வீடுகள் இதில் இலக்கு வைக்கப்பட்டன.

ஒக்ரோபர் 22ல் மன்னார் - புத்தளம் எல்லைக்கு அருகிலிருந்த மறிச்சுக்கட்டி எனும் கிராமத்திலிருந்த சில முஸ்லிம்கள்,ஆயுதப் படையினருடன் இரகசிய தொடர்புகளை ஏற்படுத்தினார்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் எல்.ரீ.ரீ.ஈ யினால் கைது செய்யப்பட்டார்கள். ஒக்ரோபர் 23ல் மறிச்சுக்கட்டி கிராமத்தவர்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறும்படி பணிக்கப் பட்டார்கள். இதைத் தொடர்ந்து ஒக்ரோபர் 24ல் மறிச்சுக்கட்டி அமைந்துள்ள உதவி அரசாங்க அதிபர் பிரிவான முசலியை சேர்ந்த அனைத்து முஸ்லிம்களுக்கும் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. யதேச்சையாக முசலி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு உதவி அரசாங்க அதிபர் பிரிவாகும்.

இந்த வெளியேற்ற நடவடிக்கை மன்னாரில் தொடர்ந்து இடம்பெற்றது. ஒக்ரோபர் 24ல், எல்.ரீ.ரீ.ஈ ஒலிபெருக்கி வழியாக மன்னார் தீவில் வாழும் அனைத்து முஸ்லிம்களும், ஒக்ரோபர் 28 க்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் வெளியேற்ற நடவடிக்கைகளை இறுதி செய்வதற்காக அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ அலுவலகத்தக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் அறிவிப்புச் செய்தது. நாதியற்ற முஸ்லிம்கள் அவ்வாறு செய்வதற்கு தயாராகி தங்கள் உடமைகளை பொதி செய்யலானார்கள். ஒக்ரோபர் 26ல் எல்.ரீ.ரீ.ஈ மீண்டும் எருக்கலம்பிட்டியை ஆக்கிரமிப்புச் செய்து முஸ்லிம்களின் பொதி செய்யப்பட்ட உடமைகள் யாவற்றையும் கைப்பற்றினார்கள்.

மன்னாரில் வாழ்ந்த கத்தோலிக்க மதகுருமார் உள்ளிட்ட அநேக தமிழர்கள் இந்த வெளியேற்ற உத்தரவுக்கு எதிராக எல்.ரீ.ரீ.ஈ யினரிடம் ஆட்சேபணை தெரிவித்தபோதும் அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. பின்னர் எல்.ரீ.ரீ.ஈ இந்த வெளியேற்றத்துக்கான கடைசி நாளாக நவம்பர் 2 ஆக மாற்றியமைத்தது.

ஒக்ரோபர் 28 மாலையில் மன்னார் தீவிலுள்ள,எருக்கலம்பிட்டி மற்றும் இதர முஸ்லிம் பகுதிகளை எல்.ரீ.ரீ.ஈ மூடியது. மன்னார் தீவிலுள்ள மன்னார் நகரம், மற்றும் எருக்கலம்பிட்டி, தாராபுரம், புதுக்குடியிருப்பு, உப்புக்குளம், கோந்தன்பிட்டி போன்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்கள் யாவரும் கடற்கரையிலுள்ள குறிப்பிட்ட இடங்களுக்கு திரளாகச் சென்று தங்கும்படி வற்புறுத்தப் பட்டார்கள். அங்கு அவர்கள் உணவோ,குடிநீரோ,அல்லது சுய தேவைக்கான முறையான வசதிகளோ இல்லாமல் தனித்து விடப்பட்டார்கள். மன்னாரிலிருந்த கரிசனையுள்ள தமிழ் மக்கள் எல்.ரீ.ரீ.ஈ யினருடன் விவாதம் செய்து கடற்கரையிலிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவும் குடிநீரும் எடுத்துச் சென்று வழங்கினார்கள்.

மன்னார் தீவினை சேர்ந்த முஸ்லிம்கள் கடல்வழியாக 60 மைல்களுக்கு தெற்கிலிருந்த வடமேற்கு மாகாணத்தை சேர்ந்த கற்பிட்டிக்கு கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டனர். மன்னார் மற்றும் புத்தளம் பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்களின் படகுகள் இந்த நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டன. இந்த முழு நடவடிக்கைகளும் முற்றுப்பெற மூன்று நாட்கள் எடுத்தன. குறைந்தது ஒரு குழந்தையாவது தண்ணீரில் தவறி விழுந்து இறந்தது. சில குழந்தைகளும் மற்றும் வயதானவர்களும் கற்பிட்டியை அடைந்த உடனேயே இறந்து போனார்கள்.

பெருநிலப்பரப்பு

jaffna muslim in puttalamன்னார் தீவில் வாழ்ந்த முஸ்லிம்களின் பரிதாபமான நிலமை அதுவாக இருந்தால், மன்னார் மாவட்டத்தின் பெருநிலப் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் நிலமையும் அதற்குச் சமமான கேடுகெட்ட நிலையிலிருந்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள முசலி உதவி அரசாங்க அதிபர் பிரிவினை சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் அதேபோல விடத்தல்தீவு,பெரியமடு, சன்னார், முருங்கன்,வட்டக்கண்டல், பறப்பாங்கண்டல் போன்ற ஏனைய இடங்களில் வாழ்ந்த முஸ்லிம்களையும் அவர்களது உடமைகளான மிதி வண்டிகள்,வாகனங்கள்,எரிபொருள்,மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் என்பனவற்றை உள்ளுர் பாடசாலை அல்லது மசூதியில் கையளிக்குமாறு ஒக்ரோபர் 25ல் எல்.ரீ.ரீ.ஈ கட்டளை பிறப்பித்தது.

ஒக்ரோபர் 26ல் எப்படி மாவட்டத்தை விட்டு வெளியேறுவது என்ற அறிவுறுத்தல்களைப் பெறுவதற்காக உள்ளுர் எல்.ரீ.ரீ.ஈ அலுவலகத்துக்கு சமூகமளிக்குமாறு அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பமும் தங்களுடன் ஐந்து பயணப் பைகளையும், பணமாக 2000 ருபாவையும், மற்றும் ஒரு தங்கப் பவுணையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். மடு,பண்டிவிரிச்சான்,மற்றும் வவுனியாவுக்கு அருகில் உள்ள மற்றொரு இடம் என்பனவற்றில் வைத்து முஸ்லிம்கள் சோதனையிடப்பட்டார்கள். மடு மற்றும் பண்டிவிரிச்சான் பகுதிகளில் அதிக பொருட்களை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால் அவைகளைப் பறிமுதல் செய்து அதற்கான ரசீதை எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் வழங்கிய பின்பு அவர்களை செல்ல அனுமதித்தார்கள். ஆனால் வவுனியாவுக்கு அருகில் அநேக பொருட்கள்,சுடுநீர் குடுவைகள் போன்றவை, எழுந்தமானத்துக்கு கொள்ளையடிக்கப்பட்டன. இந்தப் பிரிவு மக்கள் கால்நடையாகவே வவுனியாவை வந்தடைந்தார்கள்.

வடக்கு வன்னி பெரு நிலப்பரப்பின் ஏனைய பகுதிகளிலும் இந்த வெளியேற்றம் நடந்தேறியது. ஒக்ரோபர் 22, காலையில்,முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நீராவிப்பிட்டி எனும் இடத்திலிருந்த சில முஸ்லிம்கள் ஆயுதப்படையினருக்கு தகவல்கள் வழங்குகிறார்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்கள். அதே நாள் மாலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்த அனைத்த முஸ்லிம்களும் ஒரு வாரத்துக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அடுத்த நாள் ஒக்ரோபர் 23ல் கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களை ஐந்து நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறவேண்டும் என்று கட்டளை வெளியானது. 1981 ன் குடிசன மதிப்பீட்டின்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்கள் 4.6 விகிதமும் கிளிநொச்சியில் 1.6 விகிதமும் வசித்து வந்தார்கள்.

(தொடரும்)

No comments: