Sunday, November 11, 2012

ஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றனர்? (Part-05)


அமெரிக்காவிற்கும் அரபுநாடுகளுக்கும் அல்லது இஸ்ரேலுக்கும் வளைகுடா நாடொன்றுக்கும் சண்டை வந்தால் இங்கே இருக்கும் முஸ்லிம்கள் முஸ்லிம் நாடுதான் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திகிறார்களே?
முஸ்லிம்கள் அப்படிப் பிரார்த்தித்தால்கூட அதில் எந்தத் தவறுமில்லை யாரும் அமெரிக்காவும், இஸ்ரேலும் முஸ்லிம் நாடுகளுக்கெதிராகச் செய்துவரும் அயாக்கியத்தனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. வரலாறு பூராவும் அமெரிக்க அய்ரோப்பிய நாடுகளும், கிறிஸ்தவ மதமும் முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்து வந்த அநீதிகள் ஏராளம். எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, முஸ்லிம் நாடுகள் கொஞ்சம் சுதாரித்துக் கொள்ளத் தொடங்கிய போதும் இன்றளவும் அமெரிக்க அய்ரோப்பியப் பன்னாட்டு நிறுவனங்கள்தான் அந்த எண்ணெய் வளத்தையும் கொள்ளையடிக்கின்றன. ஷாவின் ஆட்சிக்காலத்தில் ஈரான், அமெரிக்காவின் எடுபிடியாகவும் படைத்தளமாகவுமே மாற்றப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான் அமெரிக்க அய்ரோப்பிய வல்லரசுகளுக்கெதிராகவும், கிறிஸ்தவக் கலாச்சார மேலாண்மைக்கு எதிராகவும் எழுகிற இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நாம் பார்க்க வேண்டும்.கோமேனியின் தலைமையில் நடைபெற்ற எழுச்சியை இஸ்லாமியப் புரட்சிஎன்றே வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அதை அடிப்படைவாதம் எனச் சொன்னால்கூட அது அமெரிக்க மேலாண்மையையும், அடிவருடி ஷாவின் ஆட்சியையும் எதிர்த்த வகையில் இருக்கும் நிலையில் முனனோக்கிய மாற்றம் ஏற்படுத்தும் நோக்குடன் இருந்தது. ஆனால் அத்வானி தலைமையில் இங்கே உருவாகும் இந்து மீட்புவாதம் என்பது மாற்றங்களுக்கு எதிரானது. நாட்டைப் பின்னோக்கித் தள்ளுவது. வருணாசிரமத்தை நிலைநாட்ட முனைவது. இந்த வகையில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும், இந்து மீட்பு வாதத்தையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
அப்படியானால் இஸ்லாமிய மதம்தான் உயர்ந்தது என்கிறீர்களா?
மதம் மக்களின் அபின். எந்த மதமும் மக்களுக்கு எதிரானதுதான் என்கிற கருத்தை நம்புகிறவர்கள் நாங்கள். ஒரு சிறுபான்மை மத்திதிற்கெதிராக ஒரு பெரும்பான்மை மதம் உள்நாட்டு அளவிலோ, உலக அளவிலோ பொய்ப் பிரச்சாரத்தை வலிமையாக மேற்கொள்ளும்போது நாம் உண்மையைக் கண்டறிய வேண்டியவர்களாக இருக்கிறோம். தவிரவும் எந்த ஒரு போராட்டமும், அது மத அடிப்படையிலானதாக இருந்தாலும் சரி, மொழி அடிப்படையிலானதாக இருந்தாலும் சரி பின்னணியில் ஒரு அரசியல் இருக்கிறது. அந்த வகையில் பின்னணியாயுள்ள உண்மைகளை நாம் கணக்கிலெடுக்க வேண்டியதாயிருக்கிறது. இந்தியாவுக்குள் சாதியை வென்ற மதமாகவும் ஒப்பீட்டளவில் சமத்துவத்தைப் பேணும் மதமாகவும் இஸ்லாம் மட்டுமே உள்ளது என்பதையும் நாம் மறந்து விடலாகாது.

நீங்கள் சொல்வதெல்லாம் சரி போலத்தான் தோன்றுகிறது. என்றாலும்…. முஸ்லிம்கள் மத்தியில் மற்றவர்களைக் காட்டிலும் மத அடிப்படையிலான ஒற்றுமை கூடுதலாக இருக்கிறதே? அவர்களின் நாட்டுப் பற்றை நாம் நம்ப முடியுமா?
சிறுபான்மையினரின் உளவியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் பல உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மீதான பெருமத வெறியும், வன்முறையும் அமைப்பு ரீதியாக அதிகரித்துள்ளன. அரசு, இராணுவம், பத்திரிகைகள் எல்லாம் வெளிப்படையாக முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளன. இத்தகைய பாதுகாப்பற்ற சூழலில் முஸ்லிம்கள் மதத்தின் பெயரால் இணைந்து நிற்பதையும் தங்களின் அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ள முனைவதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்களின் மத உணர்வு தற்காப்பு நோக்கிலானது; தாக்குதல் நோக்கிலானதல்ல.

நாட்டுப் பற்றில் முஸ்லிம்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் பங்கை ஏற்கனவே குறிப்பிட்டோம். இந்தியாவுக்கும் அண்டை நாடுகளுக்குமிடையே போர் மூண்டபோது முஸ்லிம்களின் தனிப் பெருந்தலைவர் காயிதே மில்லத் அவர்கள் இந்திய எல்லையைக் காப்பதற்காகத் தன் மகனை அனுப்பத் தயார் என்று கூறினார்.
நாட்டுப் பற்று என்பதெல்லாம் இயற்கையான உணர்வல்ல. சோவியத் யூனியன் ஒன்றாக இருந்தபோது ஒரு ஜார்ஜியன் அல்லது உக்ரேனியனது நாட்டுப் பற்று என்பது சோவியத் யூனியனுக்கு விசுவாசமாக இருப்பது. இன்று அங்கே நிலைமை முறறிலும் மாறிவிட்டதை நீங்கள் அறிவீர்கள். இன்று ஒரு ஜார்ஜியன் மாஸ்கோவுக்கு விசுவாசமாக இருந்தால் அதன் பெயர் நாட்டுப் பற்று அல்ல, தேசத் துரோகம்.
இஸ்லாம் அடிப்படையில் வன்முறையைப் போதிக்கும் மதந்தானே? ஒரு கையில் குர் ஆனையும் ஒரு கையில் வாளையும் வைத்துக் கொண்டு மதத்தைப் பரப்புவதும், சிலை வணக்கம் செய்பவர்கள் மீது ஜிஹாத்’ (புனிதப் போர்) நடத்துவதும்தானே இஸ்லாமியரின் மதக் கொள்கை?
இஸ்லாம் அடிப்படையில் வன்முறையைப் போதிக்கும் மதமுமல்ல. குர்ஆனின் அடிப்படைச் செய்தி வன்முறையுமல்ல. இஸ்லாம்என்ற சொல்லின் பொருளே ஆண்டவனுக்கு அர்ப்பணித்துக கொண்டு அமைதியை நிலைநாட்டுவதுஎன்பதுதான். ஒரு முஸ்லிம்கள் மற்றொரு மனிதனை அவன் எம்மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் சரி எதிரே பார்க்கும்போது அஸ்ஸலாமு அழைக்கும் என்று வாழ்த்த வேண்டும். இதன் பொருள் உனக்கு அமைதி உண்டாகுகஎன்பதுதான். அல்லாஹ் கருணையானவர். (அல் ரஹ்மான்); ஆறுதல் அளிப்பவர் (அல் ரஹீம்), கருணை மிகுந்த அல்லாஹ் யார்மீதும் தேவையற்ற வன்முறையைப் போதிக்கச் சொல்லவில்லை.

மதத்தைப் பரப்புவதில் வன்முறைக்கு மட்டுமல்ல. வற்புறுத்தலுக்கும் இடமில்லை என்கிறது குர்ஆன் (2:256). இந்த வரிகளுக்கு விளக்கம் சொல்ல வந்த மவுலானா முகம்மதலி, “கத்தியை வைத்துக் கொண்டு மதத்தைப் பரப்புமாறு நபிகள் நாயகம் சொன்னதாக அவதூறு செய்பவர்களுக்கு இதுவே பதில். அதிகாரம் கையிலுள்ள போது மதத்தில் கட்டாயமில்லைஎன்கிற கொள்கையை முஸ்லிம்கள் கடைபிடிப்பது முககியம்என்கிறார். அல்லாவைத் தவிரவேறு கடவுளை வணங்குவோரை அவதூறு செய்யக் கூடாது என்று சொல்லும் திருக்குர்ஆன் (6:109) மற்ற கடவுளை வணங்குவோருடன் ஒரே சமூகமாய் இணைந்து வாழவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. இல்லாவிட்டால் அல்லாஹ் உங்களை மட்டும் தனியாக அல்லவா படைத்திருப்பார்என்பது இஸ்லாமிய இறைவாக்கு (5:48).
இதன் பொருள் இஸ்லாமில் வன்முறையின் அடையாளமே இல்லை என்பதல்ல; எல்லா மதங்களையும் போலவே இஸ்லாமும் போர்க்களத்தில் வன்முறையைப் பிரயோகிப்பதை ஆதரிக்கிறது. போர்க்களத்தில் இரத்த உறவுடையோர் மீது கூட வன்முறையைப் பிரயோகிக்கத் தயங்க வேண்டியதில்லை என்று கீதா உபதேசம் செய்யவில்லையா கிருஷ்ணன்? ‘ஜிஹாத்என்கிற புனிதப் போரும் இப்படி ஒரு சூழலை முன்வைத்துச் சொல்லப்பட்டதுதான்.

ஜிஹாத்என்பது மதத்தைப் பரப்புவதற்கான போர் அல்ல. அது ஒடுக்குமுறைக்கு எதிரான போர். மக்காவில் இருந்தவரையிலும் மதினாவில் அடைக்கலம் புகுந்த கொஞ்சநாள் வரையிலும்கூட முகம்மது நபி அவர்கள் வன்முறை பற்றியும் ஜிஹாத்பற்றியும் பேசவில்லை. நபிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்ததை மீறி அரேபியாவிலிருந்தே இஸ்லாத்தை ஒழித்துவிட வேண்டும் என்கிற கங்கணத்துடன் மாற்று நம்பிக்கையாளர்கள் போர் தொடங்கியபோதுதான் அவர் வன்முறை பற்றிப்பேசத் தொடங்கினார். போரைக்கூட, ‘அல்லாஹ்வின் வழியிலான போர்எனவும், ‘பிசாசின் வழியிலான போர்எனவும் பிரித்துப் பேசுகிறது குர்ஆன் (4:75). மவுலானா முகம்மதலி கூறுகிறார்: மக்காவிலிருந்து ஒடுக்கு முறையார்களின் கொடுமை தாளாமல் முடிந்தவர்களெல்லாம் தப்பியோடிய பின்னர் பலவீனமானவர்கள் மட்டும் அங்கேயே தங்க நேரிட்டது. அத்தகைய பலவீனர்களும், பெண்களும், குழந்தைகளும் தொடர்ந்து தாக்கப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்ற போரில் இறங்கச் சொன்னார் நபிகள் நாயகம். ஒடுக்குமுறையாளரிடமிருந்து ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கான போர்தான் அல்லாஹ்வின் வழியிலான போ.ர் ஒடுக்குவதற்கும் ஆக்ரமிப்பதற்குமான போர் பிசாசின் வழியிலான போர் (தாகுத்)”. ஆக்கிரமிப்புப் போரை குர்ஆன் மறுக்கிறது (2:190).

எந்த வழிபாட்டு இல்லத்தையும் இடிக்கக்கூடாது எனவும் குர்ஆன் கட்டளையிடுகிறது. ஏனெனில் எல்லா வழிபாட்டு இல்லங்களிலும் ஒலிப்பது அல்லாஹ்வின் திருப்பெயர்தான்” (22:40). இஸ்லாமியரல்லாதவர் மீது வன்முறை பிரயோகிக்கப்பட வேண்டும் எனச் சொல்வதாக குர்-ஆனிலிருந்து மேற்கோள் காட்டப்படும் எந்த வரியுமே இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாத காரணத்திற்காகத் தனிநபர்கள் தாக்கப்பட வேண்டும் என்கிற அர்த்தத்தில் சொல்லப்பட்டவை அல்ல. ஒப்பந்தத்தை மீறி நியாயத்துக்குப் புறம்பாகத் தாங்கள் தாக்கப்படும்போது மேற்கொள்ள வேண்டிய வன்முறைதான் அது. அதிலும்கூட, “சிலை வணக்கம் செய்வோர் யாரேனும் பாதுகாப்புத் தேவை என உங்களிடம் வந்தால் அவருக்குப் பாதுகாப்பு அளியுங்கள். பாதுகாப்பான இடத்தில் அவரை சேர்ப்பிப்பது உங்கள் கடமைஎன்கிறது குர்ஆன் (9:6).
அப்படியானால் வேறெந்த மதத்தைக் காட்டிலும் இஸ்லாத்தை ஏன் இந்துக்கள் வெறுக்கிறார்கள்?
மறுபடியும் சொல்கிறேன். பொத்தம் பொதுவாக இந்துககள் என்று சொல்லாதீர்கள். சாதாரண மக்கள் வெறுப்பில்லாமல் சகோதர்களாகத்தான் வாழ்கிறார்கள். வடமாநிலங்களில் பல இடங்களில் பெயர், உடை போன்ற அம்சங்களை வைத்து முஸ்லிம்களையும் இந்துக்களையும் பிரித்துவிட முடியாது. தமிழ்நாட்டுக் கிராமங்களில் முஸ்லிம்களும் இந்துக்களும் உறவுமுறை சொல்லி வாழ்வது உங்களுக்குத் தெரியுந்தானே?

No comments: