Saturday, November 17, 2012

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

Gasa konflict
 
இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் வியாழக்கிழமை நடத்திய வான்வழி தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, கடந்த 2 நாள்களில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காஸா பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவான எஜடைன் அல்-காஸம் பிரிகேட்ஸ் மீது இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை தாக்குதல் நடத்தியது.

இதில் காஸா சிட்டியில் காரில் சென்று கொண்டிருந்த அந்த அமைப்பின் கமாண்டர் அஹமது ஜாபரி மற்றும் அவரது பாதுகாவலர் முஹமது அல்-ஹம்ஸ் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சர் முஃபுத் முக்காலாலாதி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

புதன்கிழமை மட்டும் 60 முறை தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் வெளியானதால் அங்குள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனால் காஸா பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

முன்னதாக, ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள ஜேவிஷ் மாகாணம் மீது 120க்கும் மேற்பட்ட ராக்கெட் தாக்குதல்களை நடத்தினர். இதில் 7 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

காஸா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பை அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

ஒபாமா ஆதரவு: காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் எகிப்து அதிபர் முகமது மோர்ஸி ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி உள்ளார்.

இந்த உரையாடலின்போது, காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஒபாமா கண்டனம் தெரிவித்ததாகவும், இஸ்ரேல் ராணுவம் தற்காத்துக் கொள்ளும் வகையில், காஸா மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. அதேநேரம் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

ரிசர்வ் படையை அழைக்க ஒப்புதல்: காஸா பகுதியிலிருந்து நடத்தப்படும் தாக்குதலை சமாளிப்பதற்கு தேவைக்கேற்ப ரிசர்வ் படையை அழைத்துக்கொள்ள இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

சிரியா கண்டனம்: காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலுக்கு சிரியா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இத்தகைய தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச சமுதாயம் இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் என்றும் சிரியா கேட்டுக் கொண்டுள்ளது.

தூதரை வாபஸ் பெற்றது எகிப்து :

இஸ்ரேல் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டுக்கான தனது தூதரை வாபஸ் பெறுவதாக எகிப்து அதிபர் மோர்ஸி கூறியுள்ளார். மேலும், கெய்ரோவில் உள்ள எகிப்துக்கான இஸ்ரேல் தூதருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்குமாறு வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். தவிர, எகிப்தில் உள்ள அரபு ஒன்றியத்தைச் சேர்ந்த தூதர்கள் தங்கள் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி இதுகுறித்து விவாதிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமைதியை நிலைநாட்ட ஐ.நா. வேண்டுகோள்: வன்முறையைத் தவிர்த்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுக்கு ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தி உள்ளார்.

காஸா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்கு பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேநேரம், பதிலுக்கு இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அப்பாவி மக்கள் பலியாகக் கூடும் என்பதால், வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்று பெஞ்சமினிடம் தெரிவித்ததாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மார்டின் நெசிர்கி தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்னை குறித்து எகிப்து அதிபர் முகமது மோர்ஸியுடன் பான் பேசி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments: